No menu items!

100 கோடி லஞ்சம் கேட்டார் – கெஜ்ரிவால் மீது ED குற்றச்சாட்டு!

100 கோடி லஞ்சம் கேட்டார் – கெஜ்ரிவால் மீது ED குற்றச்சாட்டு!

சாராய தொழிலதிபர்களிடம் இருந்து லஞ்சம் கேட்ட முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால்தான் என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், கெஜ்ரிவால் கைது நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகளை முடக்கும் செயல் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

கெஜ்ரிவால் மீது ED குற்றச்சாட்டு

டில்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் மதுபான கொள்கையை சாராய நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தியுள்ளனர். இதற்காக லஞ்சம் பெற்றதாக கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி தலைவர்கள் மீது மத்திய அரசு விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறை குற்றச்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக அமலாக்கத்துறை கைது செய்து வருகிறது. டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வரிசையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (21-03-24) கைது செய்யப்பட்டுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றில் முதலமைச்சராக இருக்கும் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பதால் தேசிய அளவில் இது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து, கெஜ்ரிவாலை 10 நாள்கள் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியது. அப்போது, கெஜ்ரிவாலுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை முன்வைத்தது. சாராய தொழிலதிபர்களிடம் இருந்து லஞ்சம் கேட்ட முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால்தான் என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, “டெல்லி மதுபான கொள்கையை உருவாக்குவதில் கெஜ்ரிவால் நேரடியாக ஈடுபட்டார். மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து மதுபான ஊழலில் முக்கிய புள்ளியாக உள்ளார். முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால்தான். டெல்லி மதுபான கொள்கையை வகுத்து செயல்படுத்தியதற்காக சவுத் குழுமத்திடமிருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றவர் கெஜ்ரிவால்.

மதுபான ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் சவுத் குழுமத்துக்கும் இடையே இடைத்தரகராக செயல்பட்டவர் கெஜ்ரிவால். பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவதற்காக சவுத் குழுமத்தை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட சிலரிடம் இருந்து 100 கோடி ரூபாய் கேட்டுள்ளார்.

கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 45 கோடி ரூபாய் பணம் ஹவாலா வழிகளில் இருந்து வந்த லஞ்சம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்கமூலமும் சாட்சிகளின் வாக்குமூலமும் அழைப்பு விவரப் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி ஒரு தனிநபர் அல்ல, ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் நடத்தைக்கு ஒவ்வொரு நபரும் பொறுப்பாவார்கள்” என வாதிட்டார். 

எதிர்க்கட்சிகளை முடக்கும் திட்டமா?

டெல்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதே வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சிங் சிங்கும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கிறார்.

இதே டெல்லி மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தவர், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா. அவரை, கடந்த வாரம் அமலாக்கத்துறை கைது செய்தது.

இதனிடையே, சமீபத்தில் நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. இந்த தொடர் கைதுகள் மற்றும் நேற்று காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது, நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகளை முடக்கும் செயல் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க-வினர் இன்று போராட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...