No menu items!

மதிமுக போராடி பெற்ற பம்பரம் சின்னம் – கே.எஸ். ராதாகிருஷ்ணன் வேதனை

மதிமுக போராடி பெற்ற பம்பரம் சின்னம் – கே.எஸ். ராதாகிருஷ்ணன் வேதனை

நாடாளுமன்றத் தேர்தலில், மதிமுகவுக்கு ‘பம்பரம்’ சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை போராடி பெற்ற கதையை பகிர்ந்துள்ளார், மதிமுகவின் ஆரம்ப கால மூத்த தலைவர்களில் ஒருவரும் பிரபல வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

ஏன் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் இல்லை?

திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இதனையடுத்து, தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, “எங்கள் தரப்பு கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள தேர்தல் ஆணையம் இன்னும் எங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (இன்று) கடைசி நாள் என்பதால் எங்களது கோரிக்கையை விரைவாக பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என கோரினார்.

அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி 2 தொகுதிகளுக்குள் மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். 14 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி முடிவு எடுப்பார்’ என விளக்கமளித்தார்.

அப்போது நீதிபதிகள், பம்பரம் சின்னம் பொது சின்னம் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து பிற்பகலுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். அதன்படி இந்த வழக்கு நேற்று பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் மதிமுக கோரியுள்ள பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை. இருப்பினும் மதிமுகவின் மனு மீது நாளை (இன்று) காலைக்குள் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மதிமுக வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளதாலும், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளருக்கு பம்பரம் சின்னம் கோரியுள்ளதாலும், அதுதொடர்பான மதிமுகவின் மனு மீது நாளை (இன்று) காலை 9 மணிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகலில் நடக்க இருக்கிறது. அப்போது சின்னம் கேட்டு முறையிடுவோம் என திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

போராடி பெற்ற பம்பரம் சின்னம்

இதனிடையே, மதிமுகவின் ஆரம்ப கால மூத்த தலைவர்களில் ஒருவரும் பிரபல வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவொன்றை எழுதியுள்ளார். அதில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை போராடி பெற்ற வரலாறை பதிவு செய்துள்ளார்.

அந்தப் பதிவில், ‘மதிமுக துவங்கப்பட்ட உடனே மயிலாப்பூர், பெருந்துறைக்கான இடைத்தேர்தல் நடந்தது. அதில் மயிலாப்பூருக்கு பஸ் சின்னமும் பெருந்துறைக்குப் பம்பரச் சின்னமும் ஒதுகப்பட்டது.

1996 நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் 180 இடங்களில மதிமுக போட்டியிட்டது. அந்த தேர்தலில் மதிமுகவுக்கு குடைச் சின்னம் அனைத்து தொகுதிகளும் வழங்கப்பட்டிருந்தது. வைகோ (விளாத்திகுளம்), அடியேன் (கோவில்பட்டி), தங்கவேலு (சங்கரன்கோவில்), சட்ட பேரவை முன்னாள் துணை தலைவர் வேடசந்தூர் பாலசுப்பிரமணியம் என நான்கு பேரும் மட்டும் டெபாசிட் வாங்கினோம். இதில் எனக்கு அதிகபட்சமாக வாக்குகள் கிடைத்தன.

பின் தேர்தல் முடிவுகள் படி தேர்தல் ஆணையத்தால் மதிமுக அங்கிகாரம் ரத்து செய்யப்பட்டு குடைச் சின்னமும் முடக்கப்பட்டு விட்டது.

மதிமுகவுக்கு ஒரு சின்னம் வேண்டும் என்னும் போது, பெருந்துறை இடைத்தேர்தலில் பெற்ற சின்னம் கிடைத்தால் நல்லது என மு. கண்ணப்பன் சொன்னார்.

இதனையடுத்து, 1998 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வைகோவும் நானும் டெல்லிக்குச் சென்று அங்கேயே தங்கி இருந்து தேர்தல் கமிஷனரிடம் முட்டி மோதி பேசி இந்தப் பம்பரச் சின்னத்தை வாங்கினோம். இதற்கு வழக்கறிஞர்கள் சாந்திபூஷன், பிரசாந் பூஷன் ஆலோசனையும் வழங்கினர்.

இதற்காக கிட்டத்தட்ட இரண்டு வாரம் நான் 1998 டெல்லியிலேயே அசோகா யாத்திரா நிவாஸில் தங்கி இருந்தேன். வைகோ புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி (அன்று அவர் எம்பி) வீட்டில் தங்கினார். தேர்தல் ஆணையரின் எம்.எஸ்.கில் அலுவலகத்திற்கு தினமும் போய் அவருடன் அமர்ந்து பேசிவிட்டு தேநீர் அருந்தி வருவேன். பிறகு ஒரு கட்சி இரண்டு மூன்று தொகுதிகளுக்கு மேல் தனது தனது வேட்பாளர்களை நிறுத்தினால் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை அவர்களுக்கு வழங்கலாம் என்று ஒரு சிறப்பு உத்தரவை ஆணையர் பிறப்பித்தார்.

இதுதான் பம்பரச் சின்னத்திற்கான வரலாறு.

அப்படி அரும்பாடு பட்டு வாங்கி வந்த பம்பரச் சின்னத்தில் வட சென்னை வேட்பாளராக நான் நிற்கவும் வாய்ப்பு இருந்தும் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. இப்போது அந்த சின்னமே பிரச்சனை.

போகட்டும் ஊழ்வினைகள் வந்து உறுத்து ஊட்டத் தானே செய்யும்” என பதிவிட்டுள்ளார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...