நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பி. மதுசூதன் ரெட்டி, மே 26 அன்று அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், கட்டிட அனுமதி வழங்குவதில் “Zero Tolerance” கொள்கையை கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் புதிய உத்தரவின்படி, பொதுமக்கள் கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது நேரில் அலுவலகத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து நடைமுறைகளும் முழுக்க முழுக்க ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவே நடைபெற வேண்டும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலை வல்லுநர்கள், பொறியாளர்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் தங்களது சந்தேகங்கள், திருத்தங்கள் அல்லது ஆவணங்கள் தொடர்பான அனைத்து தொடர்புகளையும் ஆன்லைன் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கட்டிட அனுமதிக்கான அனைத்து கட்டணங்களும் ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். எந்த அதிகாரியும் விண்ணப்பதாரர்களை நேரில் வருமாறு அழைக்கக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் அலைச்சல், மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்புகளை தவிர்க்க அரசு உறுதி பூண்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பி. மதுசூதன் ரெட்டி தனது சுற்றறிக்கையில், “வரைபட அனுமதி வழங்குவதில் நிர்வாகக் குறைபாடுகள், மானுவல் இன்டர்வென்ஷன் (Manual Intervention) அல்லது ஆன்லைன் முறையை மீறிய செயல்பாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட டவுன் பிளானிங் அதிகாரிகள், உதவிப் பொறியாளர்கள் (AE), இளநிலைப் பொறியாளர்கள் (JE) உள்ளிட்டோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, பிரிவு-1 மற்றும் பிரிவு-2 வகை விண்ணப்பங்களுக்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் (Statutory Timelines) திட்ட அனுமதியும், கட்டிட அனுமதியும் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கால வரம்புகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை உயர் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த டிஜிட்டல் மாற்றம் உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் லஞ்ச ஊழலை பெருமளவு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை கட்டிட அனுமதி பெற பல மாதங்கள் ஆகும் நிலை, அதிகாரிகளின் தேவையற்ற கேள்விகள், பலமுறை நேரில் வர வேண்டிய சிரமம் போன்றவை பொதுமக்களை வெகுவாக பாதித்து வந்தன. இந்தப் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தால், சாமானிய மக்களின் கனவு வீடு கட்டும் ஆசை விரைவில் நனவாகும்.
இந்த நடவடிக்கை தமிழக அரசின் டிஜிட்டல் இந்தியா இலக்குக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. முழுமையான வெளிப்படைத்தன்மை, கணக்கு தரக்கூடிய செயல்முறை, மற்றும் காலக்கெடு கட்டுப்பாடு ஆகியவை மூலம் மக்கள் நட்பு நிர்வாகத்தை உருவாக்க அரசு முனைந்துள்ளது. அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.



