No menu items!

Mt. Lavinia: காதலின் வரலாற்று அடையாளம்

Mt. Lavinia: காதலின் வரலாற்று அடையாளம்

இளங்கோ

ஒரு காதல், அந்தக் காதலியின் பெயரால் ஒரு நகரையே உருவாக்குமா?

உருவாக்கியுள்ளது!

அப்படி உருவாகிய நகரில், அந்தக் காதலனும் காதலியும் கழித்த அதே மாளிகையில் நானொரு பொழுது இருந்தேன்.

அவன் இலங்கையின் முதல் ஆங்கிலேயக் கவர்னராக இருந்தான். தனது பதவியேற்பு விழாவில் நடனம் ஆட வந்த நடனக்காரி மீது மையல் கொண்டான். அவ்வளவு உக்கிரமான காதல் அது. அவன் நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவன். அவளோ இலங்கையில் ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் சமூகத்துப் பின்னணியில் வந்தவள். நாடுகளைப் பிடிப்பதில் இரும்பு மனிதன் எனப்பட்ட ஒருவன், மண்ணிற வர்ணம் மேனியில் ஒளிரும் ஒரு பெண்ணின் முன் சரணடைகின்றான். கொழும்பு பெருநகரில் இருந்து அலைகள் கொஞ்சும் கடற்கரையில் ஓர் அரண்மனையைத் அவளுக்காகக் கட்டத் தொடங்குகின்றான்.

அவனது நடனக்கார காதலியை அந்தஸ்து காரணமாக அவ்வளவு எளிதில் அவன் சந்திக்க முடியாது. எனவே, தனது அரண்மனையில் இருந்து 600 மீற்றருக்கும் நீளமான ஒரு சுரங்கப் பாதையை அவளுக்காக அமைக்கின்றான். காதலியின் வீட்டு கிணற்றிலிருந்து தொடங்கி அந்தப் பாதை அவனின் அரண்மனையில் செம்மது சேமிக்கும் நிலவறைவரை நீள்கின்றது.

காதலி இரகசியமாக இரவுகளில் இந்தச் சுரங்கத்தினூடாக வந்து அவனோடு பொழுதைக் கழித்துவிட்டு சூரியன் உதயமாக முன்னர் சென்றுவிடுவாள். அந்த உக்கிரக் காதல் 5 வருடங்களுக்கு மேலாக நீண்டது. சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியம் காலனித்துவப்படுத்திய ஒரு தீவில், ஓர் அரசனுக்குரிய அதிகாரத்தில் இருந்தவனை ஒரு தலித் பெண் தன் நடனமாடிய கால்களில் சரணடைய வைத்தாள் என்பது ஓர் அதிசயமல்லவா?

இந்தக் காதல், பின்னாளில் இளமை துள்ளும் சிலியின் ராஜதந்திரியாக வந்து ஒரு அருந்தியப் பெண்ணை அவளின் விருப்பமின்றி கொழும்பில் புணர்ந்து போய்விட்ட பாப்லோ நெரூதாவின் உடல் வேட்கையைப் போன்றதல்ல. இது அவ்வளவு பரிசுத்தமானது. காதலி தலித்தாக இருந்ததை உதறித்தள்ளி, உரிய இடத்தை காதலின் பொருட்டு கவர்னரின் நேசம் கொடுத்துமிருந்தது. உடல் வேட்கை மட்டும் அந்தக் கவர்னருக்கு இருந்திருந்தால் நாங்கள் இப்போது நூற்றாண்டுகள் கடந்தும் இந்தக் காதலைப் பேசிக் கொண்டிருக்கமாட்டோம்.

46 வயது திருமணமாகாத இந்த கவர்னரின் காதலை, உள்ளூர்ச் சாதிமான்களாலும் பிரிட்டிஷ் அதிகாரத்தாலும் தாங்க முடியாது போயிருக்கின்றது. ஆகவே, கவர்னரை திரும்பவும் மால்டாவுக்கு (Malta) மீள்க என்று ஆணையை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் பிறப்பிக்கின்றது. காதலியைத் தன்னோடு கூட்டிச் செல்லமுடியாத துயரோடு கவர்னர் திரும்புகின்றான். காதலிக்கு பின்னர் என்ன நடந்ததென்று பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.

அவள், காதல் பிரிவுத் துயரத்தில் மலையுச்சியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்தாள் என்பது ஒரு கதை. வேறொரு கதை, அவள் இன்னொரு நகரான காலிக்குப் போய் அங்கே வீடு வாங்கி, வசதியாக அமைதியாக இறுதிக் காலத்தில் வாழ்ந்தாள் என்று சொல்கிறது. எந்தக் கதையானாலும் அவளின் அந்தக் காதல் அவ்வளவு அழகானது. அது எப்படியெனில், அந்த கவர்னர் பிறகு எவரையும் திருமணம் செய்யாமலே அவளின் நினைவோடு அப்படியே ‘பிரமச்சாரி’யாக இறுதிவரை இருந்திருக்கின்றான்.

அந்த காதல் மாளிகை இப்போது ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. அந்த ஹோட்டலில் ஓர் அறையில் இருந்து அலையடிக்கும் கடலைப் பார்த்தபடியிருக்கின்றேன், நான்.

அந்தக் காதலனும் காதலியும் துள்ளித் திரிந்து காதல் சரசம் செய்த நினைவின் சுவடுகளை எனக்குள் வரைந்து பார்க்கின்றேன். நளினமான அவளின் நடன உடலில் எத்தனையெத்தனை மீன்கள் துள்ளி ஓடியிருக்கும். எத்தனையோ நாடுகளைக் கடந்துவந்த ஒருவன், அந்தப் பெண்ணின் மேனியில் தன் நிம்மதிக்கான வரைபடத்தைக் கண்டுபிடித்தான் என்பது ஓர் அதிசயமல்லவா? மனிதர்கள் பிரமாண்டமாய் கட்டும் கட்டடங்களை உலக அதிசயம் என்கின்றார்கள்; எனக்கென்னவோ இப்படி நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத வெவ்வேறு தேசத்து மனித மனங்கள் நேசத்தின் ஆழத்தில் பிணைந்துகொண்டு வாழ்வைக் கொண்டாடுவதுதான் பேரதிசயமாக இருக்கிறது.

ஹோட்டலின் மேல் தளளத்திற்குப் போகின்றேன். இப்போது சூரியன் தகதகவெனப் பொன்னிறத்தில் மேற்கில் சாயத் தொடங்குகின்றான். என்றோ ஒருநாள் இப்படி ஆதவன் கடலோடு அணையத் தொடங்குவதை, என்னைப் போல அந்தக் காதலனும் காதலியும் அணைத்திருந்தபடி பார்த்திருப்பார்கள் அல்லவா. அப்போது அவர்கள் தங்கள் காதல், நாளை என்னவாகும் என்று யோசித்திருப்பார்களா? அப்படி யோசித்திருந்தால் அவர்கள் இந்த உக்கிரமான சாகசக் காதலுக்குள் இறங்கியிருக்கவேமாட்டார்கள்.

என் அன்றைய கனவுகளில் இந்தக் காதலனும் காதலியும் சுழன்று ஆடியபடி இருந்தார்கள். சிலவேளைகளில் அது என் கனவில்லாது, நனவிலி மனம் அசைபோட்டதோ தெரியாது. கடந்த நூற்றாண்டுகளில் எத்தனை சுரங்கங்கள் மனிதர்களால் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒரு காதலுக்கெனச் சுரங்கம் கட்டிய இந்த கவர்னர் ஒரு வியப்பல்லவா? பின்னர் வந்த நூற்றாண்டில் அந்தச் சுரங்கம் மூடப்பட்டு, ஒரு பகுதி மட்டும் மிச்சமாக இருக்க, அதன் மீது பெருநகர் கட்டப்பட்டுவிட்டது. ஆனால், அந்தக் காதல் என்றும் அழிக்கப்படாது ஒரு காதலியின் பெயரால் நிமிர்ந்து நிற்கின்றது.

அந்த நகர் Mount Lavinia. அந்த நடனத் தாரகை காதலியின் பெயர் Lavinia!

அந்த காதலர், இலங்கைக்கான முதலாவது ஆங்கிலேய ஆளுநர் (1805-1811) Sir Thomas Maitland. இவர் தாழ்த்தப்பட்ட ரொடிய சமூகத்தைச் சேர்ந்த நடனக்காரியான Lavinia Aponsuwaவை காதலிக்கின்றார். அந்தக் காதலியின் பெயரால் ஆளுநரின் ஆணையின்படி Mount Lavinia என்றழைக்கப்பட்ட நகர் பின்னர் சிங்களத்தில் கல்கிஸ என மாற்றப்பட்டாலும், ஆங்கிலத்தில் Mount Lavinia என்றே இப்போதும் அழைக்கப்படுகின்றது. அது காதல் கொடுத்த மாபெரும் அடையாளம்.

இந்தக் காதல் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

நான் காலை தூக்கங் கலைந்தபோது மழை பெய்யத் தொடங்கியிருந்தது. எனக்குப் பிடித்தமான சாம்பல் நிறத்தை வானம் போர்த்தியிருந்தது. பெருங்கடலில் மழைத்துளிகள் வீழ்ந்து கலப்பதைப் பார்ப்பது என்பது பேரானந்தமானது. பின்னர் அந்தப் பேரின்ப நிலை மாறி மனது கதகதப்பான தியான நிலையானது.

கடற்கரையில் நடக்கவேண்டும், நீச்சல்குளத்தில் குளிக்கவேண்டும் என்று முதல் நாளிரவு திட்டமிட்ட எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து மணிக்கணக்காய் மழைபெய்யும் பரவச நிலையை அனுபவிக்கின்றேன்.

இந்த வாழ்வில் ஒரு மழைத்துளியென நானும் என் வாழ்வும் நாளை சுவடுகளற்றுக் கரைந்து போகும் என நினைக்கையில் எனக்குள் எழுவது அச்சமா அமைதியா என்பதை நான் உணரேன். ஆனால், இந்தக் கணத்தில் அந்தக் காதலின் நூற்றாண்டுகாலத் தொடர்ச்சியென என்னை நான் எண்ணிக்கொண்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...