No menu items!

கொரோனா ஹார்ட் அட்டாக்! – அமைச்சர் எச்சரிக்கை – மருத்துவர்கள் விளக்கம்

கொரோனா ஹார்ட் அட்டாக்! – அமைச்சர் எச்சரிக்கை – மருத்துவர்கள் விளக்கம்

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டே அன்றே திடீரென ஹார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார். அப்போது, கொரோனா தடுப்பூசிக்கும் ஹார்ட் அட்டாக்குக்கும் தொடர்பிருக்கிறதா என்ற விவாதம் எழுந்து அடங்கியது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகமுள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் சமீபத்தில் கூறியுள்ளதை அடுத்து மீண்டும் இது பேசுபொருளாகியுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கும் ஹார்ட் அட்டாக்குக்கும் தொடர்புள்ளதா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இப்போது என்ன நடந்தது?

குஜராத், மகாராஷ்டிரா உட்பட வடமாநிலங்களில் கடந்த வாரம் நவராத்திரி விழாவையொட்டி கர்பா நடனம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், அக்டோபர் 22ஆம் தேதி கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோதே அகமதாபாத்தில் 24 வயது வாலிபர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்தார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் முன்பாகவே இறந்துபோனார். மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று காபட்வஞ்ச் என்ற இடத்தில், 17 வயது சிறுவன் ஒருவனும் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

அன்றைய ஒருநாளில் குஜராத்தில் மட்டும் 10 பேர் கர்பா நடனம் ஆடியபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அதற்கும் முன்னதாக, கர்பா நிகழ்ச்சிக்கான நடன பயிற்சியின்போது 3 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒரு வாரத்தில் மட்டும், கர்பா நடனம் ஆடியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி 600க்கும் மேற்பட்டோர் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து இருந்ததாக குஜராத் மாநில சுகாதாரத்துறை தற்போது தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய மன்சுக் மாண்டவியா, ‘‘ஐசிஎம்ஆர் சமீபத்தில் இது குறித்து ஒரு விரிவான ஆய்வு நடத்தியது. கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாரடைப்பைத் தவிர்க்க குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு அதிகப்படியான கடின உழைப்பு, அதிக உடற்பயிற்சி, ஓட்டம் அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுகிறது,” என்று கூறினார்.

கொரோனாவுக்குப் பின்னர் ஜிம் பயிற்சியின் இளைஞர்கள் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது. கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் உட்பட பலர் மாரடைப்பால் உயிரிழந்தபோது சமூக ஊடகங்களில் இது குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்த இளம் வயது மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இப்போது குஜராத் சம்பவங்களும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பேச்சும் அந்த அச்சத்தை உறுதிபடுத்தியுள்ளது.

இது, கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் கோவிஷில்ட் (Covishield), கோவேக்சின் (Covaxin) தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரி, கொரோனா தடுப்பூசிக்கும் ஹார்ட் அட்டாக்குக்கும் தொடர்புள்ளதா?

மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இது தொடர்பாக ‘வாவ் தமிழா‘ யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த கார்டியாலஜிஸ்ட் அசோக் குமார், “இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்படும்போது மாரடைப்பு வரும். கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தம் உறைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. கோவிட் தடுப்பூசியும் உடலில் ஒரு ‘மினி’ கொரோனாவைத்தான் உருவாக்குகிறது என்பதால் இந்த அச்சத்தை நாம் அலட்சியப்படுத்த முடியாது.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகவோ அல்லது கடினமாகவோ உழைத்தால், அது இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் இதயம் இயல்பை விட மிக வேகமாக துடிக்கலாம். அப்போது ஹார்ட் அட்டாக்குக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான்.

அதேநேரம், இளம் வயதினருக்கு மாரடைப்பு வருவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. வேலை தொடர்பான மன அழுத்தம், உணவுப் பழக்க வழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, புகைப் பிடிக்கும் பழக்கம் போன்றவை காரணமாகவும் மாரடைப்பு ஏற்படலாம்” என்றார்.

நடிகர் விவேக் சகோதரியும் மருத்துவருமான விஜயலட்சுமியும் இதனை ஒப்புக்கொண்டார். அதேநேரம், இதுபோன்ற குறைபாடுகள் இருந்தாலும் கொரோனா தடுப்பூசியால் இந்த உலகம் பெற்றுக்கொண்டது அதிகம் என ‘வாவ் தமிழா’ யூ டியுப் சேனலுக்கு பேட்டியளித்த விஜயலட்சுமி தெரிவித்தார்.

அதேநேரம், “உடற்பயிற்சி உட்பட கடின வேலைகள் செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவது என்பது சமீப வருடங்களில் மட்டுமல்ல முன்பும் இருந்ததுதான். கிராமங்களில் விவசாயிகள் வேலை செய்துகொண்டிருக்கும்போதே இறந்து போயிருக்கிறார்கள். இப்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால், அதுவும் பிரபலங்கள் மரணம் காரணமாக இது அதிகளவில் பேசப்படுகிறது. ஜிம் மரணங்களுக்கு உடல்பருமன், மிக குறுகிய காலத்தில் பலனை எதிர்பார்த்து ஓடுவது, தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கின்றன” என்கிறார் டாக்டர் அருணாசலம்.

என்ன செய்ய வேண்டும்?

மிதமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 25 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கெட்ட கொழுப்பு பரிசோதனையை தவறாமல் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். சிஆர்பி, டி-டைமர் பரிசோதனை, லிபிட் ப்ரோஃபைல் பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் மாரடைப்பு வருமா, வராதா என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதற்குத் தகுந்த சிகிச்சை, உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்,” என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் அசோக் குமார்.

இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த டாக்டர் அருணாச்சலம், “உடல் பருமனை குறைக்க வேண்டும்தான். அதற்காக 150 கிலோ எடைகொண்ட ஒருவர் உடனே 80 கிலோவாக குறைக்க வேண்டும் என்று வேகமாக ஓடுவதும் ஆபத்து. உடலில் உள்ள அதிக கொழுப்பு, புரோட்டீன் போன்றவற்றை எல்லாம் கரைக்கும்போது கிட்னி, லிவர் ‘ஓவர் லோட்’ ஆகும்.

எனவே, உடல் ஆரோக்கியம் பேண எந்த ஒரு விஷயத்தையும் அளவாக, மெதுவாக செய்ய வேண்டும். அதுவும் உடற்பயிற்சி என்று சென்றுவிட்டால் உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் நடந்து கொள்வது அவசியம். இசிஜி, எக்கோ, டிரட்மில் டெஸ்ட் மூன்று பரிசோதனைகளும் செய்து பார்த்துவிட்டு, ஒரு கைதேர்ந்த இருதய மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு ஜிம் பயிற்சிகளை தொடங்குவது நல்லது.

அதன்பின்னர் வருடம் தோறும் இசிஜி, எக்கோ, டிரட் மில் டெஸ்ட் செய்து பார்த்து, இருதய மருத்துவர் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்போது ஸ்போர்ட்ஸ் மெடிசின் டாக்டர்கள், பிஸியோதெரபிஸ்ட் நிறைய பேர் வந்துவிட்டார்கள். இவர்களிடமும் ஆலோசனைகள் பெறலாம்.

இன்னொன்று உடல் எடை குறைப்பில் உடற்பயிற்சியைவிட உணவு பழக்கவழக்கத்தையே அதிகம் நம்ப வேண்டும். அப்புறம் தூக்கம்… குடும்பமாக லேட்டாக படுக்க செல்வது இப்போது அதிகரித்துள்ளது. இதனால் தூக்கமின்மை அதிகரித்துள்ளது. மூன்று மாதங்கள் சரியாக தூங்காத ஆண்களுக்கும் ஆறு மாதங்கள் தூங்காத பெண்களுக்கும் சர்க்கரை வியாதி வர அந்த ஒரு காரணமே போதும். அந்தளவு தூக்கம் நம் உடலுக்கு மிக அவசியம்.

இரவு 10.30 – 11.00 தூங்க சென்றுவிட வேண்டும். காலையில் 5 – 6 மணி வரைக்கும் தூங்க வேண்டும். இந்த இடைப்பட்ட நேர கும்மிருட்டு மட்டும்தான் உடலில் மெலடோமி என்கிற பிக்மெண்டை சுரக்க வைக்கும். 6 – 8 மணிநேர தூக்கம் மிக அவசியம். தினமும் இவ்வளவு நேரம் ஒதுக்க முடியாமல், தூக்க நேர குறைபாடு உள்ளவர்கள் அதை சரி செய்வதுபோல் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் நன்றாக தூங்க வேண்டும்” என்கிறார் டாக்டர் அருணாசலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...