No menu items!

பாஜக Vs மஹுவா மொய்த்ரா – 2 கோடி ரூபாய் சிக்கல்!

பாஜக Vs மஹுவா மொய்த்ரா – 2 கோடி ரூபாய் சிக்கல்!

மஹுவா மொய்த்ரா… இவரைப் பற்றி கொஞ்சமாக ஏதாவது சொல்லுங்களேன் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

‘மஹுவா மொய்த்ரா மக்களவை எம்.பி. அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காரர். மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டவர். துறுதுறுப்பானவர். மக்களவையில் எப்போதும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசை கிடுக்கிப்பிடி போட்டு கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்.’

இப்படித்தான் நீங்கள் சொல்வீர்கள். இப்படி ஒரு விறுவிறுப்பான சுறுசுறுப்பான எம்.பி.யான மஹுவா மொய்த்ரா திடீரென ஒரு இடியாப்பச் சிக்கலில் விழுவார் என யாரும் எதிர்பார்த் திருக்க மாட்டார்கள். ஏன்? மஹுவா மொய்த்ரா கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்? இப்போது அவரது எம்.பி. பதவி பறிபோகும் அளவுக்கு மொய்த்ராவைச் சுற்றி சூழ்ந்திருக்கிறது ஒரு சிக்கல்.

தர்ஷன் ஹீரா நந்தானி என்று ஒரு ரியல் எஸ்டேட் அதிபர். இவரது நண்பராக இருந்தவர் எம்.பி மஹுவா மொய்த்ரா.

மொய்த்ரா மும்பைக்குப் போனால், அவரைத் தேடி ஹீரா நந்தானியின் கார் வந்து விடும். அந்த காரில்தான் மும்பை விமானநிலையத்தை விட்டு மொய்த்ரா வெளியே செல்வார்.

இந்தநிலையில், பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யான ரிஷிகாந்த் துபே என்பவர் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பிய ஒரு கடிதம்தான் பிரச்சினைக்குப் பிள்ளையார் சுழி.

‘அன்புள்ள ஐயா, தர்ஷன் ஹீரா நந்தானி என்ற ரியல் எஸ்டேட் அதிபர், மக்களவையில் கவுதம் அம்பானியைப் பற்றி கேள்வி எழுப்பச் சொல்லி மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு 2 கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த தகவலை எனக்குத் தெரிவித்து அதற்கான ஆதாரங்களை என்னிடம் தந்திருக்கிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுங்கள்’ என்பதுதான் அந்த கடிதத்தின் சாராம்சம்.

உடனே, பாரதிய ஜனதா எம்.பி.யான விநோத் குமார் சோன்கர் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு, இந்த புகாரை விசாரிக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

நெறிமுறை குழு, முதல்வேலையாக பாரதிய ஜனதா எம்.பி. ரிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியது. இருவரும் ஆஜரானார்கள். மொய்த்ரா மீது குற்றச்சாட்டுகளை குவித்தார்கள். இவர்களில் ஜெய் ஆனந்த் தேஹத்ராய், மொய்த்ராவின் முன்னாள் காதலர் என்பது தனிச்செய்தி.

இதற்கு நடுவே, ரியல் எஸ்டேட் அதிபர் தர்ஷன் ஹீரா நந்தானியை மிரட்டி அவரிடம் கடிதம் மூலம் மக்களவை நெறிமுறைக் குழு வாக்குமூலம் வாங்கியதாக ஒரு குற்றச் சாட்டு உள்ளது. அந்த கடிதத்தில், ‘பிரதமர் மோடி மீது மக்களவையில் குற்றச்சாட்டுகளை சுமத்த காரணங்கள் கிடைக்காததால், எதிர்க்கட்சிகள், தொழிலதிபர் கவுதம் அதானியைக் குறி வைக்கத் திட்டமிட்டுள்ளன’ என்று நந்தானி கூறியிருந்தாராம்.

இந்த பரபரப்பு ஒருபக்கம் இருக்க, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மொய்த்ரா பேட்டி அளித்தார். அதில், ‘நானும், தர்ஷன் ஹீரா நந்தானியும் நண்பர்கள். என் பிறந்தநாளின்போது அவர், ஸ்கார்ப், பாபி பிரவுன் மேக்கப் செட், மேக் ஐ சேடோ, லிப்ஸ்டிக் எல்லாவற்றையும் துபாயில் இருந்து வாங்கி வந்து தந்தார்.

எனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களா பாழடைந்த நிலையில் இருந்தது. தர்ஷன் ஹீரா நந்தானியிடம் சொல்லி ஒரு வடிமைப்பாளரை வரவழைத்து பங்களாவைச் சீர்படுத்தினேன். நாடாளுமன்ற இணையதளத்தைப் பார்ப்பதற்கான கடவுச்சொல்லை நான் தர்ஷன் ஹீரா நந்தானிக்குத் தெரியப்படுத்தியது உண்மைதான். மற்றபடி நான் அவரிடம் பணம் எதுவும் வாங்கவில்லை.

நான் 2008ல் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் முதலீட்டு வங்கியாளராக இருந்தேன். 2 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தேன். அப்படியிருக்கும்போது மக்களவையில் கேள்வி கேட்க நந்தானியிடம் நான் 2 கோடி ரூபாய் பணம் வாங்கினேன் என்பது நகைச்சுவையான ஒன்று’

இப்படி அந்த நேர்காணலில் மொய்த்ரா கூறியிருந்தார்.

இந்தநிலையில் எம்.பி. மொய்த்ராநேரில் வந்து ஆஜராகும்படி, மக்களவை நெறி முறைக் குழு, அழைப்பாணை அனுப்பியது. நவம்பர் 2ஆம்தேதி, மொய்த்ரா ஆஜரானார். அவரை நோக்கி சரமாரியாகக் கேள்விக் கணைகள் பறந்தன. மொய்த்ரா எங்கெங்கே சென்றார்? எங்கெங்கே தங்கினார்?’ என்பது மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டன. மொய்த்ராவின் மொபைல் போனில் உள்ள பதிவுகளையும் நெறிமுறைக் குழு கேட்டது.

‘ஏங்க தனிப்பட்ட முறையில் இப்படி எல்லாமா கேள்வி கேட்பது?’ என்று குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, மொய்த்ரா, விசாரணையின் நடுவே, வெளிநடப்பு செய்து விட்டார்.

அவர் மட்டுமல்ல, எதிர்க்கட்சி எம்.பி.க்களான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த டேனிஷ் அலி, ஜனதா தள எம்.பி. கிரிதாரி யாதவ், காங்கிஸ் எம்.பி. உத்தவ்குமார் ரெட்டி ஆகி யோரும் வெளிநடப்பு செய்தார்கள்.

‘மொய்த்ராவிடம் கண்ணியமற்ற நெறிமுறையற்ற கேள்விகளைக் கேட்டார்கள்’ என்று காங்கிஸ் எம்.பி. உத்தவ்குமார் ரெட்டி குற்றம்சாட்ட, ‘அப்படி எல்லாம் எதையும் கேட்க வில்லை. மொய்த்ராதான் நாடாளுமன்றத்துக்கு அப்பாற்பட்ட வார்த்தைகளைப் பேசினார்’ என்று மக்களவை நெறிமுறைக் குழுவின் தலைவரான விநோத் குமார் சோன்கர் பதிலுக்குக் குற்றம் சுமத்தினார்.

‘கௌரவர்கள் சபையில் திரௌபதியைப் போல நான் நின்றேன். கிட்டத்தட்ட துகிலுயுரியும் படலம் போல அந்த நிகழ்ச்சி இருந்தது’ என்று பின்னர் இந்த சம்பவத்தை வர்ணித்தார் மொய்த்ரா.


மொய்த்ரா விவகாரத்தில், இன்னும் சில பரபரப்புத் திருப்பங்களும் இருந்தன. கேள்வி கேட்க பணம் வாங்கியதாக தன்மீது குற்றம் சுமத்திய முன்னாள் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் மீது மொய்த்ரா அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.


அந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மொய்த்ராவின் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் திடீரென மனம்மாறி, இந்த வழக்கில் வாதாட மறுத்து விட்டார். ‘அவதூறு வழக்கு போடப்பட்ட ஜெய் ஆனந்த் தேஹத்ராய், ஓர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே மொய்த்ராவை எம்.பி. பதவியில் இருந்து நீக்கும் முடிவில் மக்களவை நெறிமுறைக் குழு படுஉறுதியாக இருந்தது. மொய்த்ரா தொடர்பாக 500 பக்க அறிக்கை தயாராகி, கடந்த 8ஆம்தேதி மக்களவை நெறிமுறைக் குழு உறுப்பினர்களுக்கு அது அளிக்கப்பட்டது.

மொய்த்ராவை பதவிநீக்கம் செய்வது தொடர்பாக மக்களவை தலைவரிடம் பரிந்துரைக்கும் வரைவு தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், தீர்மானத்துக்கு ஆதரவாக 6 பேரும், எதிர்ப்பாக 4 பேரும் வாக்களித்துள்ளனர்.

இந்த 500 பக்க அறிக்கை குழுவினரிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒருநாள் முன்பே, அதானி குழுமத்துக்குச் சொந்தமான ஒரு தொலைக்காட்சி சேனலின் கைக்குப் போனதாகவும், அந்த சேனல் இந்த செய்தியை ஒளிபரப்பு செய்ததாகவும் மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார்.

மொய்த்ரா தொடர்பான விசாரணையில் மக்களவை நெறிமுறைக் குழு நடந்து கொண்ட விதம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன.

‘குழுவின் முதல்நாள் கூட்டத்துக்கு குழுவின் தலைவர் விநோத் குமார் சோன்கர் 15 நிமிடம் தாமதமாக வந்தார். விவாதிக்க அல்ல. வாக்கெடுப்பு நடத்த மட்டும்தான் இந்த கூட்டம் என்று சோன்கர் சொன்னார். முதல்நாள் கூட்டம் இரண்டரை நிமிடங்களில் முடிந்து விட்டது. இந்த அழகில்தான் மக்களவை நெறிமுறைக் குழுவின் கூட்டம் நடக்கிறது’ என்று குழுவில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

‘மொய்த்ராவுக்கு எதிரான 500 பக்க அறிக்கையில் ஆழம் இல்லை. தெளிவான குற்றச் சாட்டுகள் எதுவும் இல்லை’ என்பதும் அவர்களது குற்றச்சாட்டு.

இதற்கு பதிலடியாக, ‘மொய்த்ரா மீதான இந்த விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் வேலை நடக்கிறது’ என்று நெறிமுறைக் குழுவின் தலைவரான விநோத் குமார் சோன்கர் கூறியுள்ளார்.

மொய்த்ராவைஇ எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்யும் 500 பக்க அறிக்கை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதை பொதுவெளியில் வைப்பதா இல்லையா என்பதை அவர் முடிவு செய்வார்.

வர இருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், மக்களவையில் அந்த அறிக்கையை ஓம் பிர்லா முன்வைக்கக் கூடும். மக்களவை எம்.பி.க்களில் பெரும்பான்மை யினர் அதை ஏற்கும்நிலையில், அரை மணிநேரத்துக்கு மிகாமல் அந்த அறிக்கை குறித்து விவாதம் நடைபெறலாம். அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பும் நடக்கலாம். அதன்மூலம் ஒரு வேளை மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிபோகவும் வாய்ப்புண்டு.

கடந்த காலத்தில் மக்களவை நெறிமுறைக் குழுவின் பரிந்துரையின் பேரில் எம்.பி.க்கள் சிலரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. 2005ஆம் ஆண்டு மக்களவையைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் பதவி இழந்திருக்கிறார்கள். மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் கூட பதவி இழந்திருக்கிறார்.

மொய்த்ரா மீதான விசாரணையின்போது, விசாரணை முறையைக் கண்டித்து வெளிநடப்பு செய்த எம்.பி.க்களில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த டேனிஷ் அலி மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

‘என் மீதான இந்த குற்றச்சாட்டு, விசாரணை எல்லாமே மேட்ச் பிக்சிங் மாதிரி ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. என்னை எம்.பி. பதவியை விட்டு நீக்கினால் வரலாற்றில் என் பெயர் இடம்பெறும். அடுத்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் நான் மக்களவைக்கு வருவேன்.
என்னை பதவிநீக்கினால் அதை ஒரு கெரளவப் பதக்கமாக கருதி அதை நான் குத்திக் கொள்வேன் நெறிமுறைக் குழுவால் நெறிமுறையற்ற முறையில் நீக்கப்பட்ட எம்.பி.யாக நான் வரலாற்றில் இடம் பிடிப்பேன்’ என்றிருக்கிறார் மொய்த்ரா.

மக்களவை நெறிமுறை குழுவை ‘கங்காரு நீதிமன்றம்’ என்றும், அது செய்வது ‘குரங்கு வேலை’ என்றும் மொய்த்ரா வர்ணித்திருக்கிறார். ‘என்னை நீக்குவது நாடாளுமன்ற ஜன நாயகத்துக்கு மரணம் ஏற்படுகிறது என்பதற்கான மெசேஜ்’ என்றும் மொய்த்ரா கூறத் தவறவில்லை.

மொய்த்ரா நாடாளுமன்ற போர்டலுக்கான பாஸ்வேர்டை தர்ஷன் ஹீரா நந்தானியிடம் பகிர்ந்ததன் மூலம் தேசத்தின் பாதுகாப்பு விதிகளை மீறிவிட்டார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ‘இதற்காக லோக்பால் அமைப்பு மொய்த்ரா மீது சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டிருக்கிறது’ என்று பாரதிய ஜனதா எம்.பி. ஒருவர் கூற,

‘ஓகோ. லோக்பால் இன்னும் உயிருடன்தான் இருக்கிறதா? அதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி. அதானி நிறுவனத்தின் 13 ஆயிரம் கோடி நிலக்கரி மோசடி பற்றி விசாரிக்க சிபிஐக்கு நேரமில்லை. இந்த அழகில் என்னிடம் எத்தனை ஷூக்கள் இருக்கிறது என்று எண்ணுவதற்காக சிபிஐ வரப்போகிறதா? வரட்டும்’ என்றிருக்கிறார் மொய்த்ரா.

நாடாளுமன்ற இணையதளத்துக்கான பாஸ்வேர்டை அங்கீகரிக்கப்படாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என நாடாளுமன்றம் அறிவுறுத்துகிறது. ஆனால், அங்கீகரிக்கப்பட்டவர்கள் யார்? அங்கீகரிக்கப்படாதவர்கள் யார் என்று தேசிய தகவல் மையம் தெளிவாகச் சொல்லவில்லை. இது தொடர்பாக எம்.பி.க்கள் யாருக்கும் எச்சரிக்கையும் விடப்பட வில்லை. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் குறைந்தது பத்து பேர்களிடம் இதை ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் என் விஷயத்தில் மட்டும்தான் பிரச்சினை வந்திருக்கிறது.

தர்ஷன் ஹீரா நந்தானி முன்பு என்னிடம் பணிபுரிந்தார். என்னுடைய கேள்விகளை அந்த நாடாளுமன்ற போர்டலில் பதிவு செய்ய அவர் உதவினார். இது தவறா?’ என்றும் கேட்டிருக்கிறார் மொய்த்ரா.

மஹுவா மொய்த்ரா என்ற இந்த பரபரப்பு அரசியல் தொடர் நீண்டுகொண்டே போகிறது. மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிபோகுமா? அல்லது அவர் தப்பிப்பாரா என்பது தெரிய வில்லை.

திடுக்கிட வைக்கும் ஒரு திரில்லர் திரைப்படத்தின் இடைவேளை காட்சி போல இருக்கிறது இப்போதைய நிலை.
……………………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...