No menu items!

5ஜி – என்னென்ன மாற்றங்கள் வரும்?

5ஜி – என்னென்ன மாற்றங்கள் வரும்?

இண்டர்நெட் பயன்பாட்டில் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டது இந்தியா. ‘தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும்’ என்று அறிவித்துள்ளார், முகேஷ் அம்பானி. மேலும், ‘2023 டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றும் கூறியுள்ளார். இது ஸ்மார்ட்போன் காதலர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

5ஜி என்றால் என்ன?

ஐந்தாம் தலைமுறை இணையதள தொழில்நுட்பமே 5ஜி. இது முந்தைய 4ஜி, அதாவது நான்காவது தலைமுறை தொழில்நுட்பத்தை விட பத்து மடங்கு அதிக பதிவிறக்க, பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்கிறார்கள். இதனால்தான், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

5ஜியின் அதிவேகத்தால் என்னென்ன மாற்றம் நடக்கும்?

இதை புரிந்துகொள்ள முதலில் 1ஜி முதல் 4ஜி வரை என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வது அவசியம்.

1ஜி எனப்படும் ஒன்றாம் தலைமுறை சேவை 1980களில்தான் முதலில் தொடங்கப்பட்டது. இதன் டேட்டா திறன் 2Kbps தான். அலைவரிசை: 800 to 900MHz. அனலாக் முறை தொலைத் தொடர்பு சேவையான இதில் வெறும் கால் அழைப்புகள் மட்டுமே செய்ய முடிந்தது.

இரண்டாம் தலைமுறை இணைய சேவையான 2ஜி  1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டேட்டா திறன்: 10Kbps, அலைவரிசை: 850MHz to 1900MHz (GSM) மற்றும் 825MHz to 849MHz (CDMA) என அதிகரிக்கப்பட்டது. டிஜிட்டல் வயர்லெஸ் தொழில்நுட்ப சேவையான இதில் ஒயர் இல்லாமல் சிம் கார்டு மூலம் இண்டர்நெட் பெறும் வசதி வந்தது. கால் அழைப்புகளுடன் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் அறிமுகமானது. 2ஜி சேவையே பின்னர் மேம்படுத்தப்பட்டு 2.5ஜி, 2.75ஜி ஆகியவையும் வந்தது. இவற்றின் மூலம் டேட்டா திறன் 200Kbps என அதிகரித்ததுடன் புதிதாக MMS அறிமுகமானது.

அதன்பின்னர் 3ஜி 1998ஆம் ஆண்டு அறிமுகமானது. டேட்டா திறன் 384Kbpsக்கும் அலைவரிசை 1.6 to 2.5 GHzக்கும் அதிகரித்தது. இதனால் கால் அழைப்புகள், இன்டர்நெட், எஸ்எம்எஸ், வீடியோ கால் என சேவைகளும் கூடியது. வீடியோ கான்பரன்ஸ், இடங்களை அறிந்துகொள்ளும் ஜிபிஎஸ் வசதியும் வந்தது. 3ஜி-யும் பின்னர் 3.5ஜி, 3.75ஜிகள் என மேம்படுத்தப்பட்டது. டேட்டா திறன் 2Mbps ஆனது. இதனால் உயர் வேக வாய்ஸ் டேட்டா சாத்தியமானது. இதுவே 3.75ஜியில் டேட்டா திறன் 30 Mbps ஆனது. மல்டி மீடியா வந்தது.

இதன்பின்னர் வந்ததுதான் இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4ஜி. இது 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் டேட்டா திறன் 1Gbpsக்கும் அலைவரிசை 2 to 8 GHzக்கும் அதிகரித்ததால் அதிவேக இண்டர்நெட் வசதி, ஹெச்டி தர வீடியோ கால்கள், நொடிப்பொழுதில் இ-மெயில் என இணையத்தை வாழ்க்கையின் ஒரு அம்சமாகவே மாற்றி என்ஜாய் செய்துகொண்டிருக்கிறோம். 

இனி… 5ஜி

இதன் டேட்டா திறன் ஆரம்ப வேகம் 1Gbps, அலைவரிசை 30 to 300 GHz. அதாவது 4ஜியைவிட பத்து மடங்கு மேல் அதிக அலைவரிசை என்பதால் வேகமும் 10 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். 2019ஆம் ஆண்டே அமெரிக்கா, சீனா, தென்கொரியா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சில பகுதிகளில் 5ஜி அறிமுகமாகிவிட்டது. இதன் அனுபவத்தில்  உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 5ஜி தொழில்நுட்பத்தில், அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 3ஜிபிபிஎஸ் பதிவேற்ற வேகமும் இருக்குமென்று கூறுகிறது. இதனால், ஒரு முழு திரைப்படம் சில வினாடிகளில் பதிவிறக்கம் ஆகிவிடும். இப்போது இதற்கு 7 அல்லது 8 நிமிடங்கள் ஆவது குறிப்பிடத்தக்கது.

5ஜி வேகம் காரணமாக ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி மற்ற பல சாதனங்களையும் இணையம் மூலம் கட்டுப்படுத்துவது சாத்தியமாகும்; இதனால் பல துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும், நமது வாழ்க்கை முறையிலேயே மாற்றம் வரலாம் என்று தெரிவித்துள்ளனர். உதாரணமாக, 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்று கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். இதனால் விபத்துகளையும் எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும். 4ஜி-யிலேயே டிவி பார்ப்பது குறைந்துவிட்டது. தொலைக்காட்சி பெட்டியே தேவையில்லை என்ற நிலையை 5ஜி உருவாக்கலாம்.

5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்கலாமா?

5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் எல்லா மொபைல் நெட்வொர்க் நிறுவனமும் கலந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட 5G அலைவரிசையை ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் ஒன் ப்ளஸ், ரியல்மி, சியோமி சாம்சங், மோட்டோ, நத்திங் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதலே 5G போன்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனாலும், அவசரப்படாமல் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது.

5ஜி வந்துவிட்டாலும் இந்தியாவில் அனைத்து நகரத்திலும் அனைவருக்கும் உடனடியாக அந்த வசதி கிடைத்துவிடாது. 4ஜி-யே இப்போது வரை பல இடங்களில் தொங்குகிறது. இதுபோல் 5ஜி-யும் படிப்படியாகத்தான் விரிவுபடுத்தப்படும். எனவே, இப்போதே அதிக விலைகொண்ட 5ஜி ஸ்மார்ட் போன்களை வாங்காமல் இருப்பதே சரியான முடிவாக இருக்கும். ஏனெனில், பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு 5ஜி முழுமையாக வெளியிடப்படும்போது இப்போது நாம் வாங்கும் ஸ்மார்ட் போன் அதற்கேற்ற சிறம்பம்சங்களை கொண்டிருக்கவில்லை என்றால் பயனற்று போகும். மேலும், மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்களும் அப்போது சந்தைக்கு வரும். எனவே, கொஞ்சம் காத்திருப்பது சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...