No menu items!

ஜாபர் சாதிக் விவகாரத்தில் விசாரணைக்கு தயார் – அமீர் விளக்கம்

ஜாபர் சாதிக் விவகாரத்தில் விசாரணைக்கு தயார் – அமீர் விளக்கம்

தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்குடனான தனது தொடர்புகள் பற்றிய விசாரணைக்கு தயாராக இருப்பதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் வேதிப் பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்தும் கும்பலை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தல் கும்பலின் பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜாபர் சாதிக்கையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பதவியில் இருந்து ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார்.

போலீஸாரால் தேடப்படும் ஜாபர் சாதிக், ஜாபர், கயல் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற படத்தை தயாரித்து வந்தார். இதன் காரணமாக ஜாபர் சாதிக்கையும், அமீரையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளப் பக்கங்களில் சிலர் செய்திகளை வெளியிட்டு வந்தனர். இந்த சூழலில் இது தொடர்பான ஒரு விளக்கத்தை இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ளார். வீடியோ வடிவில் அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் மீதான குற்றச்சாட்டில், என்னுடைய நிலைப்பாட்டை விளக்கிய போதும், ஊடகவியலாளர்களும், நண்பர்களும் தொடர்ச்சியாக சமூக வலைதள பக்கங்களிலும் ஊடகங்களிலும் குற்றச்செயலில் என்னை தொடர்பு படுத்தி, செய்திகள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது.

அனைவருக்குமே நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி ஆகிய விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட மார்க்கத்தை பின்பற்றக் கூடியவன் நான்.

அப்படி இருக்கையில் இது போன்ற குற்றச்செயல்களில் என்னை நீங்கள் தொடர்புபடுத்தி பேசுவதின் மூலமாக எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, என்னுடைய குடும்பத்திற்கு மன உளைச்சல்களை ஏற்படுத்த முடியுமே தவிர வேறு எந்த ஒரு பயனையும் நீங்கள் அடைந்து விட முடியாது

நீங்கள் சொல்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள்.

அவர்கள் என்னை எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சோதனையான காலகட்டத்தில் என் மீது அன்பு கொண்டு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி.

இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...