தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செப்டம்பர் மாதத்தில் தனது புதிய அரசியல் கட்சியை முறைப்படி பிரம்மாண்டமாகத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. டெல்லியில் இருந்து தமிழ்நாடு வந்த பின், அண்ணாமலை தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது. தவெகவின் எழுச்சி திமுகவை விடவும் அதிமுக மற்றும் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. இளைஞர்கள் பலரும் தவெக பக்கம் செல்வதால், பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவுக்கு அண்ணாமலை வந்துள்ளதாக தெரிகிறது. அதற்கு தமிழக பாஜகவின் உட்கட்சி பூசலும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனால் புதிய கட்சி தொடங்கும் முடிவுக்கு அண்ணாமலை வந்துள்ளார். இதுதொடர்பாக ஆலோசிக்கவே டெல்லிக்கு அண்ணாமலை சென்றுள்ளார். டெல்லியில் தேசிய பாஜக தலைவர் நிதின் நபின் மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்துள்ளார். ஆனால் இதுவரை அமித்ஷாவை சந்திக்க அண்ணாமலைக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
அமித்ஷாவின் கோபத்திற்கு ஆளாக அண்ணாமலை விரும்ப மாட்டார். இதனால் அரசியல் சூழல் குறித்து விவாதித்துவிட்டு, தனது முடிவையும் கூறிவிடும் முயற்சியில் அண்ணாமலை இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே அண்ணாமலையின் புதிய அரசியல் கட்சி அறிவிப்பு தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
அண்ணாமலை தனது பிறந்தநாளான ஜூன் 4ஆம் தேதியே புதிய கட்சி பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய கட்சித் தொடக்க விழா செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவசரமாகக் கட்சியைத் தொடங்குவதை விட, அதற்கு முன்பாகத் தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க அண்ணாமலை தீவிரமாக இருக்கிறார்.
அதேபோல் மாவட்ட வாரியாகப் பூத் கமிட்டிகளைப் பலப்படுத்த அண்ணாமலை விரும்புகிறார். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வரும் ஆடி மாத அரசியல் ரீதியான சுபகாரியங்களுக்கு உகந்ததாகக் கருதப்படாததால், செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தை அவரது குழுவினர் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.
செப்டம்பர் மாதத்தில் கோயம்புத்தூர் அல்லது கரூரில் ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி, லட்சக்கணக்கான இளைஞர்கள் முன்னிலையில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்த அண்ணாமலை தரப்பு தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அண்ணாமலையின் இந்த ‘செப்டம்பர் பிளான்’ குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டைகளை உடைக்கும் நோக்கில் அமைந்துள்ளது.



