பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நபீனை நேரில் சந்தித்து அண்ணாமலை விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அண்ணாமலையின் விலகலுக்கு முக்கியக் காரணம், பா.ஜ.க தேசியத் தலைமை எடுத்த அ.தி.மு.க-வுடனான கூட்டணி முடிவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 2025-2026 காலகட்டத்தில், அண்ணாமலையின் கடும் எதிர்ப்பையும் மீறி தேசியத் தலைமை அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து அவரது மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டு, அவரது தீவிர திராவிட எதிர்ப்பு அரசியல் முழக்கங்கள் படிப்படியாக நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. இந்தத் தொடர் புறக்கணிப்புகள் அவரை கட்சியை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, விலகல் முடிவுக்கு முன்பு ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (RSS) தலையிட்டு தீவிர சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியது.
கடந்த 72 மணி நேரமாக நள்ளிரவு வரை நீடித்த இந்த ரகசியப் பேச்சுகள் தோல்வியில் முடிந்தன. ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகிகள் அண்ணாமலையைத் தக்கவைக்க முயன்றனர். தமிழகத்தில் வலதுசாரி சித்தாந்தத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்ற ‘தலைமுறைத் தலைவர்’ என்று அவரை RSS பார்த்தது. எனினும், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தனித்து நின்றே பா.ஜ.க-வை வளர்க்க முடியும் என்பதில் அண்ணாமலை உறுதியாக இருந்தார்.
அண்ணாமலை பா.ஜ.க-வுக்கு தனது நன்றியைத் தெரிவித்துவிட்டு விடைபெற்றுள்ளார். இந்த விலகல் ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும், அண்ணாமலை புதிய தேசியவாத இயக்கம் ஒன்றைத் தொடங்கினால், அதற்கு ஆர்.எஸ்.எஸ் கொள்கை ரீதியாக முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாமலையின் ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் தகவலின்படி, ஜூன் 4-ஆம் தேதி அவரது பிறந்தநாளை ஒட்டி புதிய இயக்கத்தை அறிவிக்கலாம். இந்த இயக்கம் ஆரம்பத்தில் அரசியல் கட்சியாக இல்லாமல், இளைஞர்களை திரட்டும் சமூக-தேசியவாத இயக்கமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் இந்த முடிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஏற்கனவே இருமுனைப் போட்டியை உடைத்துள்ள நிலையில், அண்ணாமலையின் புதிய நகர்வு திராவிட எதிர்ப்பு வாக்குகள் மற்றும் இளைஞர் வாக்குகளை பெரிதும் பாதிக்கும். பா.ஜ.க-வுக்கு தென்னிந்தியாவில் முக்கிய முகமாக இருந்த அண்ணாமலையை இழப்பது பெரும் பின்னடைவு.
அண்ணாமலைக்கு இது ஒரு புதிய அரசியல் பயணத்தின் தொடக்கம். திராவிட அரசியலுக்கு மாற்றாக தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் அவரது முயற்சி வெற்றி பெறுமா என்பதை நேரம் தான் சொல்லும். தமிழக அரசியல் களம் இனி மேலும் சுவாரஸ்யமாக மாறப் போகிறது.
அமித் ஷா ஓகே டெல்லி மேலிடத்தின் முழு ஒப்புதலுடன், குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பச்சைக்கொடியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த ‘பிளாக்பஸ்டர்’ வெற்றி பாரம்பரிய அரசியல் கட்சிகளின் கணக்குகளை மாற்றியமைத்துள்ளது. இந்தச் சூழலில், பாஜகவுக்குள் இருந்தபடியே தமிழ்நாட்டு இளைஞர்களின் முழு ஆதரவைப் பெற முடியாது என்பதை உணர்ந்த அண்ணாமலை, தனிப்பாதையில் செல்ல முடிவு செய்துள்ளார்.



