No menu items!

மரண மேடையில் 8 இந்தியர்கள் – மீட்குமா அரசு?

மரண மேடையில் 8 இந்தியர்கள் – மீட்குமா அரசு?

பேரதிர்ச்சியாக இருக்கிறது.

எட்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது, கத்தார் நாட்டில். நேற்று கத்தார் நீதிமன்றம் இந்த தீர்ப்பை கொடுத்திருக்கிறது.

மரண தண்டனையை எதிர் நோக்கி பரிதாபமாய் காத்திருக்கும் இந்த எட்டு இந்தியர்களும் இந்திய கப்பல் படையில் பணிபுரிந்தவர்கள். பிறகு கத்தார் நாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்கள். அவர்கள்தாம் இப்போது மரணத்துக்கு அருகே நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன நடந்தது?

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கத்தாரில் வேலை பார்த்து வந்த பத்து பேரை அதிரடியாக கைது செய்தது கத்தார் காவல் துறை. இவர்களில் எட்டுப் பேர்தான் இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

இவர்கள் அனைவரும் கத்தாரில் உள்ள அல் தஹ்ரா க்ளோபல் டெக்னாலாஜிஸ் (Al Dahra Global Technologies and Consultancy Services) நிறுவனத்தில் பணிபுரிபவர்கள்.

அவர்கள் கைதுக்கு காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.இன்று வரை காரணங்கள் சொல்லப்படவில்லை.
கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்களையும் தனிமைச் சிறையில் அடைத்தது கத்தார் அரசு. விசாரணைகள் நடந்தது. எல்லாமே ரகசிய விசாரணைகள்தாம். என்ன நடந்தது என்பதை கத்தார் அரசு இதுவரை இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இந்த எட்டு பேரும் பணிபுரிந்தது அல் தஹ்ரா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில். கத்தார் நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அதி நவீன நீர்மூழ்கி கப்பலை கத்தார் நாடு உருவாக்கி வந்தது. இந்த எட்டு இந்தியர்களும் இந்திய கப்பல் படையில் பணியாற்றியிருந்ததால் அவர்களுக்கு போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த அனுபவமும் அறிவும் அதிகம். அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு அங்கு வேலையே கிடைத்தது. மகிழ்ச்சியாய் சேர்ந்த அவர்கள் இன்று மரண வாசலில் நிற்கிறார்கள்.

கைது, விசாரணைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் கத்தார் நாடு ரகசியமாக செய்வதால் இந்த எட்டுப் பேர் மேலும் பதிவு செய்யப்பட்டிருப்பது கத்தார் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் என்று புரிந்துக் கொள்ளப்படுகிறது.

பொதுவாய் ஒரு நாட்டில் விசாரணைகள், வழக்குகள், கைதுகள் போன்றவை ரகசியமாய் பொதுவெளியில் சொல்லப்படாமல் நடந்தால் அது அந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டாகதான் இருக்கும்.

எட்டு இந்தியர்கள் மீதும் அது போன்ற குற்றச்சாட்டுக்கள்தாம் இருக்கின்றன என்ற தகவல்கள் கசிந்திருக்கின்றன.

கத்தார் நாட்டு நீர்முழுகி கப்பல்கள் குறித்து ராணுவ ரசியங்களை இஸ்ரேல் நாட்டுக்கு சொல்லிவிட்டார்கள். இந்த எட்டு பேரும் இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்தார்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்களையும் கத்தாரில் உள்ள இந்திய தூதர் சந்தித்தார். அவர்களிடம் என்ன பேசினார் என்பது வெளியில் தெரிவிக்கப்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்களை பார்க்க தஹ்ரா நிறுவனத்தின் தலைமை அதிகாரி சிறைச்சாலைக்கு வந்திருக்கிறார். அவரையும் பிடித்து சிறையலடைத்து விட்டார்கள். இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் இருந்த அவர் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இவர் கத்தார் நாட்டை சேர்ந்தவர். கத்தார் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்சினை வந்து சில மாதங்களில் அந்த நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிறுவனத்தில் சுமார் 75 இந்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பலர் இந்திய கப்பல் படையில் முன்பு பணியாற்றியவர்கள். அவர்கள் அனைவரும் இந்தியா திரும்பிவிட்டார்கள்.

கத்தார் மரண மேடையில் நின்றுக் கொண்டிருக்கும் முன்னாள் இந்திய கப்பல்படை வீரர்களை இந்தியா எப்படி காப்பாற்றப் போகிறது? என்பதுதான் இப்போதைய கேள்வி.

கத்தார் நீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது. அவர்களை மீட்பதற்காக வழிமுறைகளை ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறது.

கிட்டத்தட்ட ஒரு வருடமாய் இந்த வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இது வரை இந்திய அரசால் கத்தார் நாட்டுடன் பேசி நமது வீரர்களை மீட்க முடியவில்லை.

கத்தார் நமது நாட்டுடன் நீண்டகாலமாக நல்லுறவில் இருக்கிறது. 2008ல் இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கத்தார் நாட்டுக்கு சென்றார். கத்தார் நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது அதுதான் முதல் முறை. அதன் பிறகு மோடி பிரதமரான பிறகும் நல்லுறவு தொடர்ந்தது. 2015ல் கத்தார் நாட்டு அதிபர் இந்தியா வந்தார். 2016ல் பிரதமர் மோடி கத்தார் சென்றார்.

கத்தார் நாட்டுக்கு இந்தியாதான் முக்கிய ஏற்றுமதி-இறக்குமதி நாடாக இருக்கிறது. வருடத்துக்கு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருநாட்டுக்கும் வர்த்தகம் நடக்கிறது.

இத்தனை நட்பு, வர்த்தகம் இருந்தாலும் கத்தார் தனது நிலைப்பாடுகளில் உறுதியாகவே இருந்திருக்கிறது.

நபிகள் நாயகம் குறித்து 2022ல் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுப்பூர் ஷர்மா அவதூறாக பேசியது தொடர்பாக முதல் கண்டனத்தை தெரிவித்தது கத்தார் நாடுதான். இந்திய தூதரை அழைத்து தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்தது. நுப்பூர் ஷர்மா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது. அதன் தொடர்ச்சியாக பாஜகவிலிருந்து நுப்பூர் ஷர்மா நீக்கப்பட்டார்.

கத்தார் அரசு தனது நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
மரணத்தின் விளிம்பில் நிற்கும் இந்தியர்களின் குடும்பத்தினர் கத்தார் அரசுக்கு மன்னிப்பு கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்திய அரசு தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

இந்த எட்டு இந்தியர்களை மீட்பது இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு சவால். அந்த சவாலை வென்று இந்தியர்களை மீட்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த விருப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...