பிரான்ஸ் நாட்டில் இரண்டாம் கட்ட பயணம் மேற்கொண்ட மோடி, எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் விருந்தினராக பங்கேற்றார்.
இங்கு பேசிய பிரதமர் மோடி, ‘‘ஜி7 நாடுகள், இந்தியா மற்றும் தெற்கத்திய நாடுகளின் பலத்தை ஒன்றிணைப்பதன் மூலம் இணைப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஈரான் போர் நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் கவலை அளிக்கிறது’’ என குறிப்பிட்டார்.
ஜி7 மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லேயன், ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு பாரிஸ் திரும்பிய பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரமதர் மோடி, ‘‘பாரிஸ் நகரில் இந்திய வம்சாவளியினர் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்தியாவையும் பிரான்ஸையும் நெருக்மாக்குவதில் அவர்களின் முயற்சிகளை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். உலக முன்னேற்றத்துக்கு இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை மிக முக்கியமானது’’ என பதிவிட்டுள்ளார்.
பாரிஸில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து ‘விவாடெக் 2026’ நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது ஐரோப்பாவின் முதன்மையான தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான நிகழ்ச்சியாகும். இந்திய மற்றும் ஐரோப்பிய புதுமை கண்டுபிடிப்பு அமைப்புகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், இந்த ஆண்டு விவாடெக் நிகழ்ச்சியில், இந்தியாவின் அரங்கம் மிகப் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர்களுடன் சந்திப்பு பாரிஸ் நகரில் நேற்று தொழிலதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டார். கட்டுமாணம், ரயில் போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த தொழிலபர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.



