No menu items!

கே.பாக்யராஜ் காலமானார்

கே.பாக்யராஜ் காலமானார்

பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக இயக்குநர்கள் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பாரதிராஜா ஆகியோரின் உதவி இயக்குநராக அவர் பணியாற்றினார். கடந்த 1977-ல் தனது திரைப்பயணத்தை அவர் தொடங்கினார்.

இதில் பாரதிராஜாவுடன் ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். கிழக்கே போகும் ரயில் மற்றும் டிக் டிக் டிக் படங்களுக்கு பாரதிராஜாவுடன் இணைந்து கதை எழுதினார். சிகப்பு ரோஜாக்கள் படத்துக்கு வசனம் எழுதியவர், துணை கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வந்தார்.

சுவர் இல்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிய அவர், தனது படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னுபோச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு, அவசர போலீஸ் 100, ராசுக்குட்டி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சொக்கத்தங்கம், சித்து +2 உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்துள்ளார். இதோடு திரைப்படத்துக்கு பின்னணி இசை அமைத்து, பாடலும் பாடி உள்ளார். ‘பாக்யா’ என்று வார இதழின் ஆசிரியராக இயங்கி வந்தார்.

‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படும் பாக்யராஜின் படங்கள் ஜனரஞ்சகமாக இருக்கும். கதை, வசனங்கள், காமெடி என அவரது படங்கள் கவனம் ஈர்க்கும். சிறந்த திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்டவர்.

தனது சினிமா பணிக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் இணைந்து அவர் பணியாற்றி உள்ளார். இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பாக்யராஜின் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே.பாக்யராஜின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.

அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கே.பாக்யராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் கே.பாக்யராஜ் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...