No menu items!

கொஞ்சம் கேளுங்கள்: பிஜேபியின் பிரம்மாஸ்திரம்

கொஞ்சம் கேளுங்கள்: பிஜேபியின் பிரம்மாஸ்திரம்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கான பிஜேபியின் மிகப்பெரிய அலுவலக கட்டிடங்களைத் திறந்து வைத்தார் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் நட்டா. சீக்கிரத்திலேயே மிகப் பணக்கார கட்சியாகிவிட்ட பிஜேபியை போல தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியும் இவ்வளவு பெரிய அலுவலக கட்டிடங்களை கட்சி ஆரம்பித்து இவ்வளவு சீக்கிரம் பெற்றதில்லை. அதுவும் தமிழ்நாட்டில் பிஜேபி இப்பொழுதுதான் தலைதூக்கி வருகிறது.

திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இங்கே கட்சி ஆபீஸ் அமைக்கத் தடுமாறி தவித்திருக்கிறது. ஆரம்பத்தில் வடசென்னையில் சிறு இடத்தில் இருந்த திமுக தலைமையகத்தில் ஏலத்தில் எடுத்த பஸ் சீட்டுகள்தான் வரவேற்பரையில் இருந்தன.

“நட்டா என்றவுடன் ஒரு செங்கல்லும், முஷ்டியை உயர்த்தியவாறு அவர் கொடுக்கும் போஸும் நினைவுக்கு வருகிறது. முஷ்டியை உயர்த்துவது அவர்கள் பேசும் ஜனநாயகத்துக்கு பொருந்துகிறதா?” என்றார் இடதுசாரி தலைவர் ஒருவர். அது அவர் கருத்து.

நட்டா தமிழில்நாட்டில் ‘வாரிசு ஆட்சி’ நடப்பதாக தாக்கி பேசினார். அது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றார். கலைஞருக்கு பிறகு முதல்வராக ஸ்டாலின் இருப்பது, அவரது மகன் உதயநிதி அமைச்சராக்கப் பட்டிருப்பதையும் குற்றம்சாட்டினார்.

இந்தியாவில் நேருவின் ‘ராஜவம்ச ஆட்சி – டைனாஸ்டி ரூல்’ நடந்து வந்தது, தொடர்ந்து நடக்கப்பார்க்கிறது என்பதும் பிஜேபி சொல்லும் குற்றச்சாட்டு. நேருவிற்கு பிறகு அவரது மகள் இந்திரா, பிறகு ராஜீவ் காந்தி… இப்போது ராகுல் காந்தி ஆளப்பார்க்கிறார் என்று அடுக்குகிறது.

காங்கிரஸ் அல்லாத இந்தியா என்பது பிஜேபியின் லட்சியம் என்று பிரதமர் மோடி உட்பட பிஜேபி தலைவர்கள் முழங்குகிறார்கள். அதை சாதிப்பதற்கான ‘பிரம்மாஸ்திரமாக’ இந்த வாரிசு அரசியல் கோஷத்தை ஏவுகிறார்கள். அது வெற்றியையும் தேடி தந்திருக்கிறது.

பிரம்மாஸ்திரத்தை அடிக்கடி உபயோகிக்க முடியாது! மகாபாரதத்தை படித்தால் யுத்த களத்தில் பகவான் கண்ணன் போல தந்திரமிக்க நல்லதோர் தேரோட்டி இருந்தால் பிரம்மாஸ்திரத்திலிருந்து தப்பித்து விடலாம் என்பது புரியும்.

17 ஆண்டுகள் நாடாண்ட பிரதமர் நேரு தனது ஆட்சியின் வாரிசாக யாருக்கும் இளவரசர் பட்டம் கட்டவில்லை. உலகின் தலைசிறந்த ஜனநாயகவாதியான நேரு சர்வாதிகார சிந்தனையோ, தன் வாரிசு ஆட்சி எண்ணமோ அற்றவராகவே இருந்தார்.

அவர் இருந்தபோது, ஒருமுறை காங்கிரஸ் கட்சியில் தலைவராக இந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டது அவரது விருப்பத்திற்கு எதிரானதாகவே இருந்தது.

நேருவிற்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமானார். லால்பகதூர் மறைவுக்கு பின், காமராஜரின் பெரும் முயற்சியில்தான் இந்திரா பிரதமரானார்.

இந்திரா தேர்தலில் தோற்றிருக்கிறார். அவர் ஆட்சி தொடர்ந்து நீடிக்கவில்லை. மொராஜி பிரதமராக இருந்தார். சரண்சிங், சந்திரசேகர், விபி.சிங், நரசிம்மராவ், வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன்சிங்… இடையில் ராஜிவ்காந்தி ஆட்சியிலிருந்து ஆட்சியை இழந்தார். இப்போது மோடி!

ஆக நேருவின் ராஜவம்ச ஆட்சி என்பது எங்கே நடந்தது?

தமிழ்நாட்டிலும் அதே நிலைதான். கலைஞர் ஆட்சியை தோற்கடித்து எம்ஜிஆரின் நீண்ட ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சி, எடப்பாடியாரின் ஆட்சி…! கலைஞர் ஆட்சியை பறிகொடுத்து எதிர்கட்சியில் அமர்ந்ததுண்டு.

காங்கிரஸின் ‘பிடி’ நேரு குடும்பத்தில் இருப்பதால் அவர்களது செல்வாக்கு பிஜேபியை மிரள வைக்கிறது. அதேபோல திமுகழகத்தில் அக்கட்சியின் பிடி கலைஞரின் வாரிசுகளிடம் இருக்கிறது! உண்மையில் அங்கேயும் மூத்தவர் ஓரங்கட்டப்பட்டார்.

“கட்சிக்கு வாரிகள் தலைமை வருவது வேறு. அது தொண்டர்கள் கவனிக்க வேண்டியது. ஆட்சியை பிடிப்பது என்பது ஒரு கட்சியின் தொண்டர்களால் ஏற்படுவதல்ல. மக்களின் ஓட்டு பெற்று வருவது. மக்கள் நினைத்தால் எந்த கட்சியையும் வீழ்த்தி காட்ட முடியும். ஆகவே ஜனநாயகத்தில் ‘வாரிசு அரசியல்’ ஆட்சி என்பது கிடையாது. மக்கள் ஓட்டு பெற்று வருவதால் ஜனநாயகத்தின் பிரதிநிதியாகவே கருத்தப் படவேண்டும்” என்றார் அந்த இடதுசாரி தலைவர்.

கட்சியில் ஒரே குடும்பத்தின் தலைமை நீடித்தால் எதிர்ப்புகள் ஏற்படும் காட்சியை நாடு பார்த்திருக்கிறது. கட்சிகள் உடையும்! புதிய கட்சிகளும், புதிய தலைவர்களும் தோன்றுகிறார்கள். எம்ஜிஆர், வைகோ இங்கே உதாரணம்.

“ஜனநாயகம் என்பது தர்மத்தை போன்றது. தர்மம் தன்னை தானே பாதுகாத்து கொண்டு தர்மத்தையும் நிலைநிறுத்தும் என்பது வேதச்சொல் ” என்று ராஜாஜி கூறியதுண்டு.

“இந்திய ஜனநாயகத்தின் வயது குறைவானது—– அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை ஒப்பிடும்போது. பல பரிசோதனை கடந்துதான் ஜனநாயகம் பூரண உருவம் பெறும்” என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

“உண்மையில் ஜவஹர்லால் நேருதான் ஜனநாயக ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை உறுதிபட காட்டியவர். அவர்தான் ஜனநாயக ஆட்சியின் சின்னம். இந்திய ஜனநாயகத்திற்கு அசைக்க முடியாத வடிவம் கொடுத்தவர் அவரே” என்றார்.

நாடாளுமன்ற கூட்டங்களுக்கு ஒருநாள்கூட தவறாமல் வந்த நேரு, விவாதங்களின்போதும் அங்கேயே அமர்ந்திருப்பார். அவரது இந்த அணுகுமுறைதான் ஈ.வி.கே. சம்பத், இரா.செழியன் போன்ற பலரை அகில இந்திய சிந்தனைக்கு மாற்றியது.

எதிர்க்கட்சிகளுக்கு பெரும் மதிப்பு தந்தார் நேரு. நாடாளுமன்றத்தில் அவர் மீது எதிர்க்கட்சியினர் நடத்திய தாக்குதல்களை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார். அது ஒரு அதிசயம்.

நேருவின் கடைசிக்காலத்தில் சீன ஆக்கிரமிப்பால் மனம் நொந்து போயிருந்தார்.

அந்த சமயத்தில் ஒரு இடைத்தேர்தலில் டாக்டர் லோகியாவும், கிருபளானியும் ஜெயித்து எம்.பி.யாகி நாடாளுமன்றத்தில் வந்தார்கள். இருவரும் நேரு மீது நீண்டகால பகை கொண்டவர்கள்.

ஒரு விவாதத்தில் நேருவை அவர்கள் மிகக்கடுமையாக தாக்கி பேசினார்கள். அப்போது ‘பிளிட்ஸ்’ வார இதழ் கிருபளாணியை கண்டித்து கட்டுரை வெளியிட்டது. ‘கிருபலூனி’ என்று தலைப்பிட்டு! அதாவது அவருக்கு மனபாதிப்பு என்று.

பிளிட்ஸ் ஆசிரியர் கரஞ்சியா நேருவின் உற்ற நண்பர்.

நாடாளுமன்றத்தில் கரஞ்சியா மீது உரிமை பிரச்னை வந்தது. அவரை மன்றத்திற்கு வரவைத்து ‘ரிப்ரிமண்ட்’ – கடும் கண்டனத்திற்கு உட்படுத்துவது என்று தீர்ப்பாயிற்று.

நேரு துளி எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அமைதியாக ஆதரவு தந்தார்.

நாடாளுமன்றத்தில் ஒரு கைதி கூண்டு நிறுவப்பட்டது. அதில் குற்றவாளிபோல நிறுத்தப்பட்டார் கரஞ்சியா. கடும் கண்டனம் அடங்கிய கடுமையான வார்த்தைகள் கொண்ட தீர்மானம் வாசிக்கப்பட்டு, அவரிடம் தரப்பட்டது. தலைகுனிந்து பெற்றார் கரஞ்சியா. ‘ஷேம் ஷேம்’ என்ற கோஷம்.

இப்படியொரு நிகழ்வு அதற்கு முன்பு நடந்ததில்லை. பின்பும் நடக்கவில்லை. Reprimand என்பது நாடாளுமன்றம் அளிக்கும் மிகப்பெரிய தண்டனை.

“நேருவின் ‘ராஜவம்சம்’ என்று கூறி பிரம்மாஸ்திரம் ஏவுகிறவர்கள் இதையெல்லாம் நினைத்துப்பார்க்கக்கூடாதா?” என்று முடித்தார் இடதுசாரி தலைவர்.

1 COMMENT

  1. Maha sombu DMK, Congress are only dynasty parties. Nothing else. They refuse to leave their positions because of huge amount of wealth the parties possess.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...