No menu items!

வில்லன் ரஜினி, ஹீரோ சிவகார்த்திகேயன்!

வில்லன் ரஜினி, ஹீரோ சிவகார்த்திகேயன்!

ரஜினி இப்போது விஜயின் பாணிக்கு மாறியிருக்கிறார். அதாவது தன்னுடைய படம் ஒன்று திரையரங்குகளில் வெளியாகும் போதே, அடுத்தப்படத்திற்கான ஷூட்டிங்கில் கலந்து கொள்வதை விஜய் நீண்ட வருடங்களாக பின்பற்றி வருகிறார். இதே பாணியைதான் இப்போது ரஜினிகாந்தும் பின்பற்றி வருகிறார்.

’ஜெயிலர்’ படம் முடிவதற்கு முன்பாகவே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். ஆனால் ரஜினி சம்பந்தப்ட்ட காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கில் அவை காணாமல் போனதால், மீண்டும் ரஜினியை வைத்து அந்தக்காட்சிகளை ஷூட் செய்திருக்கிறார்கள். இதனால் ‘லால் சலாம்’ வெளியீடு பொங்கலுக்கு இல்லை என்று உறுதியாகிப் போனது.

இதற்கிடையில் ரஜினி, ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ பட ஷூட்டிங்கில் மும்முரமாக கலந்து கொண்டு வருகிறார்.

பட விஷயத்தில் விஜயைப் பின்பற்றும் ரஜினி இப்போது விஜயையே முந்தியிருக்கிறார். ’வேட்டையன்’ ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே, தனது அடுத்தப்படம் குறித்து ரஜினி முடிவு செய்துவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க, அதற்கான வேலைகள் இப்போது விறுவிறுவென நடந்து வருகின்றன.

இப்போது இந்தப் படம் பற்றிதான் ஒரு புது தகவல் கசிந்திருக்கிறது.

பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் படங்களில் ஹீரோவை விட வில்லன் அல்லது வில்லன்கள் ரொம்பவே பவர்ஃபுல்லாக இருப்பார்கள். அடுத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவது போல வில்லன்தான் க்ளைமாக்ஸ் வரை ஹீரோவை பாடாய் படுத்தி எடுப்பார். இவர்களுக்கு இடையே இருக்கும் ஆக்‌ஷனை வெறித்தனமாக காட்டுவதுதான் லோகேஷின் ஃபார்மூலா.

இப்படியொரு சூழலில் ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்தால் அவருக்கு என்ன கதாபாத்திரம் என்ற ஆராய்ச்சியில் இறங்கிய நெட்டிசன்களும் இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ரஜினி171 பட கதையை ரஜினியிடம் சொன்ன போது, அதில் இருக்கும் நெகட்டிவான கதாபாத்திரத்தை ரஜினி ரொம்பவே ரசித்தாராம். இதற்கு காரணம், ரஜினி நெகட்டிவாக நடித்தப் படங்கள் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இதனால் ரஜினி உடனடியாக அந்தக் கதையை ஒகே சொல்லிவிட்டாராம்.

இந்த கதையில் ஹீரோ இமேஜில் இருக்கும் கதாபாத்திரத்தில்தான் சிவகார்த்திகேயனை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கிசுகிசுக்கிறார்கள்.

இந்தப் படம் வருகிற ஏப்ரலில் தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருக்கிறார். காரணம் ரஜினியின் ‘வேட்டையன்’ முடியவேண்டும். அதற்குள் கதையில் டிங்கரிங் செய்யும் வேலைகளையும் முடித்தாக வேண்டும்.

சிவகார்த்திகேயன் இப்போது கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

அப்படியானால் சிவகார்த்திகேயன் எப்போது, எப்படி ரஜினியுடன் நடிப்பார் என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் ஏப்ரலுக்குப் பிறகு மூன்று மாதம் கழித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்தால், இந்த கால்ஷீட் பிரச்சினை எதுவும் இருக்காது என்றும் காதைக்கடிக்கிறார்கள்.

ரஜினிக்கு எதிராக சிவகார்த்திகேயன் களமிறங்குவாரா என்பது இனிதான் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...