தி.சிகாமணி – பத்திரிகையாளர், தேர்தல் ஆய்வாளர்
தமிழ்நாட்டில் 17-வது சட்டப்பேரவைத் தேர்தல் 2026 மே மாதம் நடக்க உள்ளது. வழக்கத்தைவிட இந்தத் தேர்தலில் விறுவிறுப்பு, பரபரப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் என்ற நடைமுறை நமது மக்களாட்சி குடியரசின் சிறப்பு. இந்தத் தேர்தல் நடைமுறை 1952-ம் ஆண்டு முதல் தொடர்கிறது. 1976- ம் ஆண்டு நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தில் மட்டும் தேர்தல் ஓராண்டு தள்ளிப் போடப்பட்டது. நமது
பல கட்சி முறை மக்களாட்சி அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் சிறந்த நோக்கம் கொண்டது.
மன்னர் ஆட்சிக்குப் பதிலாக மக்களாட்சி என்ற கொள்கை முழக்கம் ஐரோப்பாவில் முதலில் எழுந்தது எனினும் 1776 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஐக்கிய குடியரசு உருவானது. முதலில் உருவான மக்களாட்சி முறை என்ற போதிலும் அங்கு இரு கட்சி ஆட்சி முறைதான் உள்ளது. இதற்கு மாறாக நம் நாட்டில் பல கட்சிகளுக்கு இடம் அளிக்கும் மக்களாட்சி முறை பெருமைக்குரியது.
நம் நாட்டில் தேர்தலில் வெற்றி என்பது பந்தயத்தில் யார் முதலாவதாக வெற்றிக்கோட்டை தொடுகிறார்களோ அவருக்கே வெற்றி என்ற வகையிலான (first past the post system) அடிப்படையில் அமைந்தது. மிக நெருக்கமாக வந்தும் ஒருவர் தோல்வியைச் சந்திக்க முடியும். கட்சிகள் பெறும் ஓட்டுக்கும் சீட்டுக்கும் இடையே இடைவெளி அதிகமாகி விடுகிறது. இந்நிலையில் வெற்றிக்காக, சதவிகித அளவை உயர்த்துவதற்காக கொள்கை உடன்பாடு இல்லாத பொருந்தாக் கூட்டணிகள் அமைவதும் உண்டு. முரண்பட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடத்தினால் நிர்வாக முடக்கத்தை சந்திக்கக் கூடும். சமரசங்கள் நடக்கும். தற்போதுள்ள தேர்தல் முறையில் குறைவான பலம் உள்ள கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இதனால் சம விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை (தாமஸ் ஃஹேர் முறை அல்லது பட்டியல் முறை) தேவை என்ற கோரிக்கை சிறிய கட்சிகளால் எழுப்பப்படுகிறது.
இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஏராளமான சிறு கட்சிகள் உள்ள நிலையில் இதை நடைமுறைப்படுத்துவது கடினம். தொகுதி மக்களுக்கும் பிரதிநிதிக்கும் உள்ள உறவு துண்டிக்கப் பட்டு விடும். ஆட்சியின் நிலைத்தன்மை பாதிக்கப்படும் என்பது போன்ற காரணங்களால் விகிதாச்சார முறை ஆட்சேபிக்கப்படுகிறது. அதனால் இப்போதுள்ள தேர்தல் முறையை மாற்றம் செய்வதென்றால் ஆழமான ஆய்வு தேவை.
சமதளப் போட்டி
தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் போது, சமதளப் போட்டி உறுதி செய்யப்படும்போது மக்களாட்சி முறை அதன் நோக்கத்தை நிறைவு செய்யக் கூடியதாக இருக்கும். கட்சி தாவல், பண பலம், குண்டர் பலம், வாக்குக்கு லஞ்சம் போன்றவை மக்களாட்சி முறையை சீரழித்து வருகிறது.
சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவை பொதுமக்கள் மற்றும் தொகுதி மக்கள் பிரச்னைகளை எடுத்துரைக்கும் இடம். குறிப்பாக மக்களுக்கான சட்ட திட்டங்களை இயற்றும் இடம். அங்கு எதிர்க்கட்சிகளின் குரல் மதிக்கப்பட வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும். மக்களாட்சியில் தலைவர்கள் மன்னர்கள் போல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாது. தலைவர்கள் மக்களிடமும் ஊடகங்களுடனும் அவ்வப்போது உரையாடத் தயாராக இருக்க வேண்டும். மக்களாட்சி என்பதே நீடித்து நடக்கும் உரையாடல். ஊடகங்களின் கருத்துரிமை மக்களாட்சியின் அடிப்படையை வலிமைப்படுத்தும். அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளாக ஊடகங்கள் சுருங்கிப் போய் விடக்கூடாது.
மக்களாட்சியில் மக்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்கு உதாரணம் காமராஜர், இந்திரா காந்தி, ஜெயலலிதா போன்றவர்கள் தங்கள் தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்த நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். தலைவர்களின் அணுகுமுறை மட்டுமன்றி அரசியலில் அவர்கள் பின்பற்றும் கொள்கையும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது. மக்கள் எத்தகைய முடிவு எடுத்தாலும் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு சூழல் நிலவ வேண்டும்.
இப்பின்னணியில் தமிழ்நாட்டுத் தேர்தல் களம் வித்தியாசமாக செயல்பட்டு வந்திருப்பதை கவனிக்க வேண்டும்.. தமிழ்நாடு பல முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தி உள்ளது. மாநிலக் கட்சி ஒன்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது தமிழ்நாட்டில்தான். ஒன்றியத்தில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கிறது.
நட்சத்திர பிம்பச் சிறை
தொடக்க காலம் முதலே நாடகம், திரைத்துறை, தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது . கல்கியின் கதையில் உருவான ‘தியாக பூமி’ (1939) போன்ற திரைப்படங்கள் விடுதலைக் கருத்தியலைப் பேசின. பின்னர் சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் முன்னுக்கு வந்தன.
எம்ஜிஆருக்கு முன்னதாகவே திமுக கழகம் சார்பில் கே. ஆர்.ராமசாமி என். எஸ். கிருஷ்ணன் டி.வி.நாராயணசாமி ஆகியோர் கட்சியின் ஆதரவாளராக இருந்தனர்.
‘இலட்சிய நடிகர்’ என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ். ராஜேந்திரன் 1962-ம் ஆண்டு தேனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு பெற்றார். அண்ணாவின் நாடக வசனங்கள், சினிமா வசனங்கள் வரவேற்பை பெற்றன. கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் மிகப் பிரபலமடைந்த ‘பராசக்தி’ திரைப்படம் அடித்தட்டு மக்களின் கொள்கை ஆவணமாக அமைந்தது. திமுகவில் சிவாஜி கணேசனும் சில ஆண்டுகள் இருந்தார்.1953-ல் தி.மு.க மாநாட்டில் கூட பங்கேற்றார். அவர் திருப்பதிக்கு சென்று வந்ததை கிண்டல் செய்யும் வகையில் ‘திருப்பதி கணேசா’ என்று சொன்னார்கள். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று அண்ணா சொன்ன போதிலும் கட்சிக்குள் நாத்திகப் போக்கு மேலோங்கி இருந்த காலம். இதனால் முரண்பாட்டில் சிவாஜி திமுகவிலிருந்து விலகி பின்னாளில் காங்கிரசில் சேர்ந்தார்.
எம்ஜிஆர் 1950 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் இருந்தார். கோடம்பாக்கத்தில் டூயட் பாடிவிட்டு நேரடியாக கோட்டைக்கு வந்துவிடவில்லை. கொள்கை பின்னணி இருந்தது என்று அவரது ஆதரவாளர்கள் சொல்வதுண்டு. எம்ஜிஆருக்கு ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தை கலைஞர் கருணாநிதி சூட்டினார். தி.மு.கழகத்தால் எம்ஜிஆரும் பயன் பெற்றார். எம்.ஜி.ஆரால் தி.மு.கழகமும் பயனடைந்தது.
1967 ல் பரங்கிமலை தொகுதி எம்எல்ஏ ஆக எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகர் ஒருவர் முதன்முதலாக முதல்வரானதும் தமிழ்நாட்டில்தான். தி.மு.கழகம் தான் திரைத்துறையினரின் பிரபலத்தை- புகழை அரசியலுக்கு பயன்படுத்தினர் என்ற போதிலும் சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே நாடகத்தில் நடித்து வந்த கே.பி. சுந்தராம்பாளை சத்தியமூர்த்தி தலைமையில் இருந்த காங்கிரஸ் பயன்படுத்தியது. கூட்டம் துவங்குவதற்கு முன்பு சுந்தராம்பாள் பாட்டு பாடுவார். திரை நட்சத்திரங்களை அரசியலுக்கு பயன்படுத்துவதை முதலில் எதிர்த்த காமராஜர், திமுகவில் இருந்து சிவாஜி கணேசன் விலகிய பின்னர் அவரைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினார். கவிஞர் கண்ணதாசன் காங்கிரசில் இருந்தார். சின்ன அண்ணாமலை1969ல் நடத்திய அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற மாநாட்டில் காமராஜர் பங்கேற்றார். சின்ன அண்ணாமலை ‘சிவாஜி ரசிகன்’ என்ற பத்திரிகையை நடத்தினார். அது நன்கு விற்பனையானது.
தி.மு.கழகத்தை ‘நாடகமாடி வந்தவர்கள்’ ‘கூத்தாடி கட்சி’ என்று எள்ளி நகையாடிய போதிலும் சலூன் கடைகள், டீக்கடைகள், படிப்பகங்கள் என்று பல நிலைகளில் அரசியல் விவாதிக்கப்பட்டது. தி.மு.கழகக் கூட்டங்கள் மாலை நேர கல்லூரிகள் என்று பாராட்டப்பட்டது.
திராவிடத் தனியரசு என்ற திமு.க லட்சியம் பாடல்களில் ஒலித்தது. எஸ் எஸ் ஆர் நடித்த சிவகெங்கைச் சீமை திரைப்படத்தில் “வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது”என்ற பாடல் வந்தது. தீனா மூனா கானா என்று என் எஸ் கிருஷ்ணன் ஒரு படத்தில் அப்பட்டமாக கட்சி பிரச்சாரம் செய்தார். திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்றும் அர்த்தம் கொள்ளலாம் என்று கிருஷ்ணன் விளக்கம் தந்தார்.
நாட்டு விடுதலைக்குப் பின் காங்கிரசுக்குள் நில உடமையாளர்களும் தனவந்தர்களும் புகுந்து ஆதிக்கம் செலுத்திய நிலையில் சாமானியர்கள் பக்கம் நின்று தி.மு.க பிரச்சாரம் செய்தது. இதனால் சாமானியர்களின் எழுச்சி மெல்ல மெல்ல உருவானது.
1952-ல் காங்கிரஸ் ஆட்சி முதல் 1967 இல் உருவான தி.மு.க ஆட்சி வரை ஒரு காலகட்டமாக பார்க்கலாம். அதன் பின் 1971 முதல் 1989 வரையிலான திமுக மற்றும் அஇதிமுக இடையே பலப்பரீட்சை காலத்தை இரண்டாவது கட்டமாக பார்க்கலாம். அப்போது துவங்கிய இரு துருவ அரசியல் இதுவரை கோலோச்சுகிறது.
தேசிய அரசியல் பின்னுக்குப் போனது ஏன்? நிலைபெற்று விட்டதாகச் சொல்லப்படும் இரு துருவ அரசியல் தொடருமா? 2006 தொடங்கி எழுப்பப்படும் கூட்டணி ஆட்சி கோரிக்கை, ஒரு கட்சி ஆட்சிதான் என்ற நிலைப்பாட்டில் தளர்வை ஏற்படுத்துமா?
தமிழ் சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்த ஒன்று என்ற கருத்து சரியா? 1987 ல் எம்ஜிஆர் இறப்புக்குப் பின் 1988 ல் தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், 2005 ல் கட்சி தொடங்கிய விஜயகாந்த், அரசியலில் காலடி வைக்க முயற்சி செய்து பின்வாங்கி விட்ட உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த், தற்போது வேகம் காட்டும் நடிகர் விஜய் என இந்த பட்டியல் நீள்கிறது.
இவ்வாறு தமிழ்நாட்டின் அரசியலில் திரையுலக பிம்பங்கள் செல்வாக்கு செலுத்தியது, செலுத்த முயற்சிப்பது ஏன்?
நட்சத்திர பிம்பச் சிறையில் ரசிகர்கள் மாட்டுவதன் பின் உள்ள உளவியல் என்ன? இவை தேர்தல் வரலாற்றில் புரட்டிப் பார்க்க வேண்டிய முக்கிய பக்கங்களாக உள்ளன.
1952-1967 தேர்தல்கள்
1952 ல் நடந்த முதல் பொதுத் தேர்தலின் போது காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளில் மிகப்பெரிய தலைவர்கள் களத்தில் இருந்தார்கள்.
சென்னை ராஜதானி என்று அழைக்கப்பட்ட நான்கு தென் மாநிலத்தின் பகுதிகளை உள்ளடக்கிய மாகாண சபையில் 375 சட்டப்பேரவை இடங்கள் இருந்தன. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜர் சட்டசபைக்கு போட்டியிடவில்லை அவர் ஸ்ரீ வில்லிபுத்தூர் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இடைக்கால மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த பல முன்னாள் அமைச்சர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர்.
காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி பிரஜா கட்சி போன்றவை ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அமைத்தன. இந்த அணிக்கு 166 உறுப்பினர்கள் ஆதரவு இருந்த போதிலும் ஆளுநர் ஸ்ரீ பிரகாசா காங்கிரசை ஆட்சி அமைக்க அழைத்தார். காங்கிரசுக்கு 152 இடங்கள் மட்டுமே இருந்தன. சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் சில கட்சிகளின் ஆதரவைக் காங்கிரஸ் திரட்டியது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த போது காமன்வீல் கட்சியின் மாணிக்கவேல் நாயக்கர் அதில் இடம்பெற்றார். அவர் கட்சியில் ஆறு சட்ட சபை உறுப்பினர்கள் இருந்தனர் .அடுத்து உழைப்பாளர் கட்சியின் ராமசாமி படையாட்சியும் ஆதரவைத் தந்தார். அவருக்கு 19 எம் எல் ஏக்கள் இருந்தனர். (1954 இல் காங்கிரசில் சேர்ந்து அமைச்சரானார்)
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திமுக 1949 ஆம் ஆண்டு செப்டம்பரில் தனிக்கட்சியை உருவாக்கியது 1952 தேர்தல் போட்டியிடும் முடிவை அக்கட்சி எடுக்கவில்லை. அதனால் காங்கிரசுக்கு எதிராக போட்டியிடும் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தது அதில் குறிப்பாக திராவிடத் தனியரசு அமைக்கும் கோரிக்கையை ஆதரிப்போம் என்று சொல்லும் வாக்குறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டவர்களுக்கு ஆதரவு என திமுக அறிவித்தது. கம்யூனிஸ்டுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்வரவில்லை. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே போட்டி நிலவிய தொகுதிகளில் கம்யூனிஸ்டுகளை திமுக ஆதரித்தது திராவிடர் கழகமும் பல தொகுதிகளில் கம்யூனிஸ்டுகளை ஆதரித்தது காங்கிரஸ் கட்சியால் தான் நாட்டில் நிலையான ஆட்சி ஏற்படுத்த முடியும் என எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்த லாயக்கில்லை என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. உணவு பஞ்சம் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. ரேஷன் முறை அமலாகியது. ‘ஆறு அவுன்ஸ் ஆட்சி ஒழிக’ என கம்யூனிஸ்ட்டுகள் பிரச்சாரம் செய்தனர்.
காங்கிரசுக்கு அறுதிப் பெரும்பானமை கிடைக்கவில்லை. கட்சித் தாவலை ஊக்குவித்து ஆட்சியை கைப்பற்றியது.
கவர்னர் ஜெனரல் பதவி என்ற பெரிய பதவி வகித்த ராஜகோபாலாச்சாரியை அழைத்து வந்து முதல்வராக ஆக்க காங்கிரஸ் முடிவு எடுத்தது. பண்டித ஜவஹர்லால் நேருவின் ஆதரவும் ராஜாஜிக்கு இருந்தது என்று சொல்லப்பட்டது. ராஜாஜி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்து விட்டதால் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் சட்டசபை அமைக்கப்பட்ட பின்பு தான் மேலவைக்கு தேர்தல் நடக்கும். ஆனால் சட்டசபை அமைக்கும் முன்பே மேலவை உறுப்பினராக ராஜாஜியை நியமித்ததை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் அவர் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
சட்டசபைக்கு நீதிக் கட்சித் தலைவர் பி.டி. ராஜன், பார்வர்ட் பிளாக் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜீவா, பி.ராமமூர்த்தி, எம் கல்யாணசுந்தரம் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
முதல்வர் ராஜாஜி தொழிற்கல்வி என்ற பெயரில் அறிமுகப்படுத்திய கல்வி முறை சாதிய அமைப்பு முறையை நீடிக்கச் செய்யும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் புகார் செய்தன. ஆறு முதல் 11 வயது வரையுள்ள சிறுவர்கள் பாதி நாள் படிப்புக்கு பின் பிற்பகலில் உடல் உழைப்பு பணியில் ஈடுபட வேண்டும். சிறுமிகள் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மறைமுகமாக அவரவர் தொழிலைச் செய்ய வேண்டும் என்று அத் திட்டம் சொன்னது. அது குலக்கல்வி திட்டம் என்று சொல்லி எதிர்க்கட்சியினர் போராட்டத்தை நடத்தினார்கள். ராஜாஜிக்கு நெருக்கடி ஏற்பட்ட போது அவர் நான் பெற்ற குழந்தையை நானே கொல்ல மாட்டேன் என தெரிவித்து பதவி விலகினார்.
நேரடியாக காமராஜரை எதிர்க்காவிட்டாலும் சட்டசபைக் கட்சி தலைவ் தேர்தலில் காமராஜரை எதிர்த்து சி. சுப்ரமணியத்தை நிறுத்தினார். எனினும் காமராஜரே சட்டசபைக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராஜரின் அமைச்சரவையில் தன்னை எதிர்த்த சி சுப்பிரமணியத்தையும் பக்தவத்சலத்தையும் இணைத்துக் கொண்டது காமராஜரின் பெருந்தன்மைக்கு உதாரணம் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
காமராஜர் குடியாத்தம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று 1954 ல் முதல்வரானார். பச்சைத் தமிழர் என்று சொல்லி பெரியார் காமராஜரை வரவேற்றார். “குணாளா குலக்கொழுந்தே வா” என்று அண்ணா மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.
1956 ல் மொழிவழி மாநிலப் பிரிவினைக்கு பின்னர் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205 ஆகக் குறைந்தது . திருச்சியில் 1956-ல் திமுக மாநாடு நடந்தது.
பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டுமா வேண்டாமா என்று வாக்குச்சீட்டு உருவாக்கி வாக்கெடுப்பு நடத்தியது. வாக்களித்த சுமார் 60 ஆயிரம் பேரில் 57 ஆயிரம் பேர் தேர்தலில் போட்டியிட ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் 1957 தேர்தலில் திமுக போட்டியிட்டது. 204 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 151 தொகுதிகளில் வென்றது. காமராஜர் முதல்வர் ஆனார் 112 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 15 தொகுதிகளில் வென்றது கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளில் மட்டுமே வென்றது. சதி வழக்கு ஒடுக்கு முறைகள், சிறைவாசம் காரணமாக கம்யூனிஸ்டு தலைவர்கள் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை. ராமமூர்த்தி ஜீவானந்தம் ஆகியோர் தோல்வியைச் சந்தித்தனர்.
அண்ணா காஞ்சிபுரத்திலும் கருணாநிதி குளித்தலையிலும் அன்பழகன்
எழும்பூரிலும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சியில் தூய்மை வேண்டியவர்கள் சட்டநாத கரையாளர் தலைமையில் சீர்திருத்த காங்கிரஸ் கட்சியை உருவாக்கினர். இவர்களின் பின்னே ராஜாஜி இருந்தார். இக்கட்சியினர் சார்பில் ஒன்பது பேர் வெற்றி பெற்றனர். முத்துராமலிங்க தேவரின் பார்வர்ட் பிளாக் மூன்று இடங்களைப் பெற்றது.
ராஜாஜி தனது எண்பதாவது வயதில் 1959 இல் சுதந்திரா கட்சியை தொடங்கினார். 1962 தேர்தலில் திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் உடன்பாடு காண மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை. தான் போட்டியிடாத தொகுதிகளில் திமுகவை ஆதரிப்பது என்ற முடிவை கம்யூனிஸ்ட் எடுத்தது. அதே போல் வாக்களிக்கும் நாள் நெருங்கிய நேரத்தில் திமுகவும் சுதந்திரக் கட்சியும் சில தொகுதிகளில் உடன்பாட்டுக்கு வந்தன. இந்த வகையில் திமுகவின் திராவிட நாடு கோரிக்கை, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற திமுகவின் பிரச்சாரத்திற்கும் பெர்மிட் கண்ட்ரோல், லைசென்ஸ் முறை கூடாது என்ற ராஜாஜியின் கோரிக்கைக்கும் காங்கிரஸ் பதில் தர வேண்டியிருந்தது.
எம்ஜிஆர் இந்த தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். எஸ் எஸ் ஆர் போட்டியிட்ட தேனி, கருணாநிதி போட்டியிட்ட தஞ்சை தொகுதி உட்பட பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். எம்ஜிஆர் சென்ற வழிகளில் மக்கள் வழி மறித்து அவரைப் பேச சொன்னார்கள்.
காங்கிரஸ் 206 தொகுதிகளில் (1959 இல் ஆந்திரத்தின் ஒரு தொகுதி தமிழ்நாட்டு பக்கம் சேர்க்கப்பட்டது) போட்டியிட்டு 139 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. திமுக கழகம் 143 இடங்களில் போட்டியிட்டு 50 இடங்களில் வென்றது. ஆனால் காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அண்ணா பஸ் முதலாளி நடேசனிடம் தோல்வியைத் தழுவினார். திமுக சார்பில் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுதந்திரா கட்சி ஆறு இடங்களிலும் கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன.
மீண்டும் முதல்வரான காமராஜர் 1963-ல் ஒரு திட்டத்தை முன் வைத்தார் அது காமராஜர் திட்டம் என்று பின்னர் அழைக்கப்பட்டது மூத்த தலைவர்கள் அமைச்சர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து விலகி கட்சிப் பணியாற்ற வேண்டும் என்பது அத்திட்டத்தின் நோக்கம் இதன்படி 1963 செப்டம்பரில் முதல்வர் பதவியில் இருந்து காமராஜர் விலகினார். காமராஜரின் இம்முடிவை பெரியார் எதிர்த்தார். பக்தவத்சலம் முதல்வர் பொறுப்பேற்றார்.
பிரிவினை கோரும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. அதற்கு முன்பு 1963 ஆம் ஆண்டில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திராவிடத் தனிநாடு கோரிக்கையை கைவிடும் வகையில் விதி திருத்தப்பட்டது. சீனப் போரைச் சுட்டிக்காட்டி “வீடு இருந்தால் தானே ஓடு மாற்ற முடியும். வீட்டிற்கு அல்லவா ஆபத்து வந்து இருக்கிறது” என்று அண்ணா சொன்னார். “தமிழ்நாடு ஆந்திரம் கேரளம் கர்நாடகம் ஆகிய நான்கு மொழி மாநிலங்கள் கூடுதல் அதிகாரம் பெற்று நெருங்கிய திராவிட கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று முடிவெடுக்கப்பட்டது. தி.மு.கவின் ஐம்பெரும் தலைவர்கள் ஒருவர் என்று சொல்லப்படும் பெரியாரின் அண்ணன் மகன் ‘சொல்லின் செல்வர்’ ஈ.வி. கே. சம்பத் கட்சியின் போக்கை எதிர்த்து 1961 தமிழ் தேசியக் கட்சியை உருவாக்கினார். பின்னர் அந்த கட்சி காங்கிரஸில் இணைந்தது.
1967 தேர்தலுக்கு முன்னதாக 1965 ல் பள்ளி கல்லூரி மாணவர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பெரிய அளவில் நடந்தது. இதில் பொள்ளாச்சியில் 10 பேர் உட்பட மொத்தம் 55 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஜீப்பில் வைத்து இரண்டு போலீஸ்காரர்கள் எரிக்கப்பட்டனர்.
அரிசிப் பஞ்சம் தலை விரித்தாடியது. இதன்போது திமுக அறிவித்த ரூபாய்க்கு மூன்று படி அரிசி திட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சாத்தியமா என்று விமர்சனம் வந்தபோது மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம் என்று அண்ணா பதில் சொன்னார்.
பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டார் எம்ஜிஆர். எம் ஆர். ராதாவுடன் நடந்த மோதலில் துப்பாக்கியால் எம்ஜிஆர் சுடப்பட்டார் . 1967 ஜனவரியில் சம்பவம் நடந்தது. அதனால் திட்டமிட்டபடி எம்ஜிஆரால் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. எம்ஜிஆர் கழுத்தில் கட்டுப் போட்ட, கை கூப்பிய நிலையில் உள்ள புகைப்பட த்தின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது அனுதாபத்தை வரவழைத்தது.
தேர்தலில் சுதந்திரா, முஸ்லிம் லீக் ம.பொ. சிவஞானத்தின் தமிழரசு கழகம் சி.பா ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கம் பார்வர்ட் பிளாக் என ஒரு பெரிய வானவில் கூட்டணியை தி.மு.க உருவாக்கியது. திமுகவுடன் மட்டும் உடன்பாடு கண்ட மார்க்சிஸ்ட் தனக்கு செல்வாக்குள்ள தொகுதியில் சுதந்திரா கட்சிக்கு எதிராக வேட்பாளர் நிறுத்தும் உரிமையைப் பெற்றது. காங்கிரசை ஒழிப்பதே முதல் வேலை என்று நிலைப்பாட்டில் இருந்த ராஜாஜி தி.மு.க கொள்கைகளை ஆதரிக்காத போதிலும் அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார். அதேபோல் சமதர்ம பூங்கா அமைப்போம் என்று கூறிய தி.மு.க கழகம் தனியார் துறை ஆதரவாளரான ராஜாஜியின் உடன்பாடு கண்டது.
திமுக கழகம் 138 தொகுதிகளிலும் காங்கிரஸ் 50 தொகுதிகளிலும் சுதந்திரக் கட்சி 20 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இறுதி நேரத்தில் திமுகவுடன் கூட்டணி சேர முயற்சித்து அது நடக்காததால் தனித்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றது. தென் சென்னை மக்களவைக்கு போட்டியிட்டு வென்ற அண்ணா அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு மேலவை உறுப்பினராகி முதல்வர் பொறுப்பை ஏற்றார். விருதுநகர் தொகுதியில் மாணவர் பெ. சீனிவாசனிடம் காமராஜர் தோல்வியடைந்தது குறித்து அண்ணா வேதனை அடைந்தார் . காங்கிரஸ் தோல்வி பற்றி காமராஜர் “சிறந்த சாதனைகள் செய்தோம் எனினும் மக்களுக்கு திருப்தி இல்லை என்று விளக்கினார். முதல்வர் பக்தவச்சலம், அமைச்சர் கக்கன் ஆகியோரும் தோற்றனர்.
காமராஜர் ஆட்சியில் அணைக்கட்டுகள், கிராமங்கள் தோறும் பள்ளிகள் அமைத்தது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போன்றவை போற்றத்தக்கதாக இருந்தன. ஆனால் இந்தி மொழியைத் திணிக்க மாட்டோம். ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்ற நேருவின் வாக்குறுதியை சட்டமாக்க முன் வராத நிலையில் உருவான போராட்டமும் காங்கிரஸ் தோல்விக்கு காரணமாக இருந்தது. மொழி யுணர்வை மதிக்காததால் வீழ்ச்சியை சந்தித்தது.
வெற்றி பெற்ற அண்ணா திருச்சியில் பெரியாரை சந்தித்து வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன் என்று சொன்னார் முதல்வராகி சுயமரியாதை திருமணங்களை சட்டபூர்வமாக்கினார் பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றினார். மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார்.
1969 பிப்ரவரி மூன்றாம் தேதி அண்ணா புற்றுநோயால் பாதிப்பு காரணமாக இறந்தார். இதையடுத்து கருணாநிதி முதல்வராக தேர்வு பெற்றார்.
எதிரிக்கு எதிரி நண்பன்; அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக காங்கிரசிலிருந்து விலகி ஸ்தாபன காங்கிரஸ் நடத்தி வந்த காமராஜருடன் 1971 தேர்தலில் கூட்டணி அமைத்தார் ராஜாஜி. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்தது. மன்னர் மானிய ஒழிப்பு வங்கிகள் தேசிய மயமாக்கல் போன்ற இந்திரா காந்தியின் திட்டங்களை கருணாநிதி ஆதரிப்பதால் அவரை எதிர்ப்பதாக ராஜாஜி கூறினார். தேர்தலில் 184 இடங்களில் திமுக வெற்றி பெற்று அதிகபட்ச இடங்களைப் பெற்ற கட்சி என்ற வரலாற்று சாதனை படைத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த கூட்டணியில் இடம்பெற்று எட்டு இடங்களைப் பிடித்தது. மார்க்சிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட்டது. ஸ்தாபன காங்கிரஸ் 15 தொகுதிகளில் வென்றது. சுதந்திரா கட்சி ஆறு இடங்களில் வென்றது.
இரு துருவ திராவிட அரசியல்
1977 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பல அரசியல் சம்பவங்கள் அரங்கேறின. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி எம்ஜிஆர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். உடனே அதிமுக கட்சியை நிறுவினார். அதே ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி திமுக மீது எம்.ஜி.ஆர் ஊழல் புகார் பட்டியலைத் தந்தார். 1975 ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. நெருக்கடி நிலை அமலை தி.மு.க எதிர்த்தது. இதன் காரணமாக திமுக ஆட்சி 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31ல் கலைக்கப்பட்டது. மிசா சட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர் அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இப்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலினும் ஒருவர். சிறையில் சித்ரவதை செய்யப்பட்டு சாத்தூர் பாலகிருஷ்ணன் முன்னாள் மேயர் சிட்டிபாபு ஆகியோர் உயிரிழந்தனர்.
எம்ஜிஆர் தந்திருந்த ஊழல் புகார் பட்டியலை 1976 பிப்ரவரி 3-ம் தேதி தூசி தட்டி எடுத்து சர்க்காரியா கமிஷனை அமைத்தார் இந்திரா காந்தி.
1977 மார்ச்சில் நடந்த மக்களவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கூட்டணியில் இருந்த எம் ஜி ஆர் சில மாதங்களுக்கு பின்பு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து களம் கண்டார். ஜனதா கட்சி திமுக கூட்டணியை விட்டு விலகி தனித்துப் போட்டியிட்டது. இந்திரா காங்கிரஸ் தனித்து விடப்பட்ட நிலையில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது. இதில் 30.37 சதவீத வாக்குகளை பெற்ற எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். இத்தேர்தலில் அதிமுக 130 , திமுக 48 ,இந்திரா காங்கிரஸ் 27 ஜனதா 10, மார்க்சிஸ்ட் 10, இந்திய கம்யூனிஸ்ட் 5 தொகுதிகளில் வென்றன.
எம்.ஜி.ஆர் சினிமா மூலம் உருவாக்கி இருந்த நல்லவர் சாகச வீரர், பெண்களின் காவலர், என்ற பிம்பம் மட்டுமன்றி திமுக கழகத்தில் இருந்தும் பலர் வெளியேறி அதிமுகவில் சேர்ந்ததால் கட்சி கட்டமைப்பும் ஏற்பட்டு எம்ஜிஆரின் வெற்றி உறுதியானது.
வெறும் சினிமா கவர்ச்சி, நாயக பிம்ப வெளிச்சம் மட்டும் எம்ஜிஆர் வெற்றிக்கு காரணம் அல்ல. சில எம்ஜிஆர் படங்கள் அரசியல் மேடையாகவும் இருந்தது. அவர் தொடர்ந்து பல்லாண்டுகளாக கட்சியில் செயல்பட்டதும் வெற்றிக்கு காரணம்.
மக்களிடையே எம்ஜிஆரின் ஈர்ப்பை அறிந்த காமராஜர் கூட “வேட்டைக்காரன் (1964 ம் ஆண்டு சினிமா) வருகிறான் ஏமாந்து விடாதீர்கள்” என்று ஒரு கட்டத்தில் பேசினார்.
மத்தியில் ஒட்டுப் போட்ட சட்டை போன்று அமைந்த ஜனதா கூட்டணி ஆட்சி இரண்டு ஆண்டுகளில் கவிழ்ந்ததால் 1980 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வந்தது. அப்போது இ. காங்கிரஸ், திமுக கூட்டணி மீண்டும் ஏற்பட்டது. அ.இ.அதிமுக போட்டியிட்ட 24 மக்களவை இடங்களில் இரண்டு இடங்களில் தான் வென்றது. இதைக் காரணம் காட்டி மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக திமுக கூறியது. பின்னர் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது.
1964 ல் பிளவு பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் கட்சி உருவானது அப்போது முதல் இரண்டு கட்சிகளும் தனித்தனி அணியில் இருந்தன முதன்முறையாக 1980 ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளும் அஇஅதிமுகவுடன் கூட்டணி வைத்தன.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்திரா காங்கிரசுக்கு ஏறக்குறைய சரி பாதி இடங்களை திமுக விட்டுக் கொடுத்தது. இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்ற சர்ச்சை எழுந்தது. யார் அதிக இடங்களைப் பெறுகிறார்களோ அந்தக் கட்சி சார்பில்தான் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் கூறினார்கள். இந்த சர்ச்சையில் தலையிட்டு கலைஞர் கருணாநிதி தான் முதல்வர் என்று இந்திரா காந்தி அறிவித்தார்.,”என்ன தவறு செய்தேன்”எனக் கேட்டு எம்ஜிஆர் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்றார். உரிய காரணம் இன்றி ஆட்சியை கலைத்ததால் எம்ஜிஆருக்கு அனுதாபம் ஏற்பட்டிருக்க கூடும் அதே சமயத்தில் திமுக காங்கிரஸ் அணியினர் ஒருவரை ஒருவர் காலை வாரி விட்டி ருக்கக்கூடும். 129 இடங்களில் வெற்றியை ஈட்டியது அதிமுக. எம்ஜிஆர் முதல்வரானார். திமுகவுக்கு 37 தொகுதிகள் காங்கிரஸ் 31 இந்திய கம்யூனிஸ்ட் 9 மார்க்சிஸ்ட் 11 தொகுதிகளை பெற்றன.
இரண்டு பலமான கட்சிகள் கூட்டணி அமைக்கும் போது வெற்றி உருவாவதற்கான வாய்ப்பை எம் ஜி ஆர் கவனித்தார். பொதுவாக காங்கிரஸ் பக்கம் செல்கிறதோ அந்த அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது இதனால் எம்ஜிஆர் ஒரு உத்தியைக் கையாண்டார் சட்டப்பேரவை மக்களவைத் தொகுதியில் தேர்வு பெற்றவர் காலமானால் அந்தக் கட்சிக்கே அந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்து விட வேண்டும் என்பது அவர் யோசனை. இந்த நேரத்தில் திருப்பத்தூர் இடைத்தேர்தல் வந்தது. தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்த காங்கிரசை எம்ஜிஆர் வலியச் சென்று ஆதரித்தார். கூட்டணி கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட நிலையில் கூட்டணி தர்மப்படி கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்திருக்க வேண்டும். காங்கிரஸ் உறவை புதுப்பித்துக் கொள்ள விருப்பம் என்பதை சூசகமாக தெரிவித்தார் எம்ஜிஆர்.
1984 அக்டோபரில் எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டார் அமெரிக்காவில் நியூயார்க் புருக்ளின் மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெற பிரதமராக இருந்த இந்திரா காந்தி உதவினார். அக்டோபர் 31 அன்று தன் பாதுகாவலர்களால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து ராஜீவ்காந்தி பிரதமர் பொறுப்பை ஏற்றார் 1984 டிசம்பர் 24 சட்டப்பேரவை தேர்தலுடன் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது அதிமுக காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உருவானது. அது வெற்றிக் கூட்டணியாகவும் மாறியது. தொகுதிப் பங்கீடு விஷயத்தில் அதிமுக ஒரு சூத்திரத்தை கடைப்பிடித்தது. அதை எம்ஜிஆர் ஃபார்முலா என்றும் சொல்லலாம். மூன்றில் இரண்டு பங்கு மக்களவைத் தொகுதி, மூன்றில் ஒரு பங்கு சட்டசபைத் தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுப்பது என்பதாக அமைந்தது.
அந்தச் சூத்திரம் மூலம் சட்டப்பேரவையில் தனித்துப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை எம்.ஜி.ஆர் உறுதி செய்து கொண்டார்.
திமுகவுடன் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்தன. பெரு முதலாளிகளை ஆதரிக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி என்று கூறி தமிழ்நாட்டில் காங்கிரஸ் காலூன்றி விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் கூட்டணி முடிவை எடுத்தன. அதனால் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக அணிக்கு வந்தன.
தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் சேர போட்டியிட்ட காலம் அது. காங்கிரஸின் ‘கை’ யாருக்கு கிட்டுகிறதோ அந்தக் கூட்டணிதான் வெற்றியை ஈட்டும் என்பது கணிப்பு. அத்துடன் இந்திரா காந்தி கொல்லப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலை சேர்ந்து கொண்டது. அமெரிக்க மருத்துவமனையில்ஜானகி அருகே எம்ஜிஆர் தொப்பி யின்றி அமர்ந்திருக்கும் காட்சியை வீடியோ எடுத்து இங்கு பிரச்சார வேன்கள் மூலம் ஓட்டு கேட்டார்கள். சாவுக்கு ஒரு ஓட்டு ( இந்திரா காந்தி) நோவுக்கு ஒரு ஓட்டு (எம்.ஜி.ஆர்) என்ற கோஷத்தையும் வாயில்லா பிள்ளைக்கு (பேச முடியாமல் இருந்த எம்ஜிஆர்) ஒரு ஓட்டு தாயில்லா பிள்ளைக்கு (ராஜீவ்காந்தி) ஒரு வாக்கு என்கிற கோஷமும் இரு கட்சிகளின் சார்பில் எழுப்பப்பட்டன. அஇஅதிமுக 133 தொகுதிகளில் வென்றது. திமுக 24 தொகுதிகள் காங்கிரஸ் 62 தொகுதிகள் மார்க்சிஸ்ட் 5 தொகுதிகள், ஜனதா 3 தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளில் வென்றன.
1977 முதல் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்திய எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று காலமானார். அவர் உயிருடன் இருந்தபோதே ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பன் இடையே பதவிப் போட்டி ஏற்பட்டது அதிமுகவின் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களில் 33 பேர் ஜானகியை எதிர்த்தனர் சட்டப்பேரவையில் பெரும்பான்மை கோரும் வாக்கெடுப்பு நடைபெற்ற போது சட்டசபைக்குள் பெரும் கலவரம் வெடித்தது. மைக்குகள் வீசப்பட்டன. இறுதியில் ஜானகியின் 23 நாள் ஆட்சி கலைக்கப்பட்டது.
சிவாஜி கணேசனின் தோல்வி
இந்த கட்டத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்த சிவாஜி கணேசன் ஜானகி எம்ஜிஆரை ஆதரிக்க முடிவு எடுத்தார். அவரது ஆதரவு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உட்பட சில எம்எல்ஏக்கள் ஜானகிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவங்கி ஜானகியுடன் கூட்டணி வைத்தார். 1989 ல் நடந்த சட்டசபை தேர்தலில் சிவாஜி கணேசன் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். போட்டியிட்ட ஏனைய 49 இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
50 களில் திமுகவில் இருந்த சிவாஜிகணேசன் பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் சேர்ந்து அக்கட்சிக்காக தொடர்ந்து தீவிர பிரச்சாரம் செய்தவர். நடிப்பின் இமயம். சிவாஜி சிரித்தால் மக்கள் சிரிப்பார்கள் அழுதால் மக்களும் அழுவார்கள் என்று சொல்லும் அளவிற்கு அவர் செல்வாக்கு பெற்றிருந்தார். ஆனால் தேர்தல் களம் அவரை ஏற்கவில்லை. சினிமா பிரபலம் மட்டும் வெற்றியைத் தராது என உணர்த்தியது தேர்தல் களம். சிவாஜி கணேசன் கட்சியை கலைத்துவிட்டு பின்னர் வி.பி.சிங் காலத்தில் ஜனததாதளத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்தார்.
ஜானகி ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு ஓராண்டு காலம் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றது. இரட்டை இலை சின்னத்திற்கு அதிமுகவின் ஜானகி, ஜெயலலிதா அணியினர் உரிமை கோரியதால் அந்தச் சின்னம் முடக்கப்பட்டது. தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னமும் ஜானகிக்கு இரட்டைப் புறாவும் ஒதுக்கப்பட்டன.
ஜெயலலிதா அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சேர்ந்தது. திமுக அணியில் மார்க்சிஸ்ட் ஜனாதளம் இடம்பெற்றன. அதிமுக பிளவை நல் வாய்ப்பாகக் கருதிய காங்கிரஸ் கட்சி ஜி. கருப்பையா மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது பிரச்சாரம் நடத்த ராஜீவ் காந்தி 14 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். நான்கு முனைப் போட்டி போட்டியிருந்த நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பின் திமுக வெற்றி பெற்று கருணாநிதி முதல்வரானார். ஜெயலலிதா 26 தொகுதிகளிலும் காங்கிரஸ் 25 தொகுதிகளும் வெற்றி பெற்றன. ஆண்டிபட்டியில் போட்டியிட்ட ஜானகி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். கட்சி தரப்பில் பி. எச். பாண்டியன் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். சில மாதங்களுக்கு பின் ஜானகி தன் அணியை ஜெயலலிதா அணியில் இணைத்தார். அதன் பின்பு இரட்டை இலை சின்னம் அ.இ.அதிமுகவுக்கு தரப்பட்டது.
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தகவல் தந்ததாகப் புகார் கூறி மத்தியில் காங்கிரசின் ஆதரவில் இருந்த பிரதமர் சந்திரசேகர் ஆட்சி திமுக ஆட்சியை 1991ல் கலைத்தது.
1991 சட்டப் பேரவை தலைவர் மக்களைத் தேர்தலுடன் நடைபெற்றது சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரம் செய்ய வந்த ராஜீவ் காந்தி பெண் மனித வெடி குண்டால் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுகவின் சொத்துக்கள், உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. ராஜீவ் படுகொலைக்கு திமுகவின் விடுதலைப்புலி ஆதரவு செயல்பாடுகளும் காரணம் என பழி சுமத்தினர். இப்பிரச்சாரம் காரணமாக திமுக தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. அனுதாப அலை காரணமாக அ.தி.மு.க-காங்கிரஸ் அணி ஏறக்குறைய அனைத்து இடங்களையும் கைப்பற்றியது துறைமுகம் தொகுதியில் கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றார் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து தன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
1991 இல் மகத்தான வெற்றி பெற்றிருந்த முதல்வர் ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி அனுமதி அளித்தார். சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதா மீது பல வழக்குகளைத் தொடர்ந்தார். தனது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு ஆடம்பரமான திருமணம் நடத்தி வைத்தது மக்களுக்கு அதிருப்தியைத் தந்தது.
1993-ம் ஆண்டு திமுகவில் மீண்டும் ஒரு பிளவு உருவானது.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை வை. கோபால்சாமி உருவாக்கினார்.
1996 தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி விரும்பாத எதிர்ப்பாளராக இருந்த மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.
திமுகவுடன் கூட்டணி வைத்தார். இந்த கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு இருந்தது “மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது” என்று அவர் ‘குரல்’ கொடுத்தார். 182 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 173 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 40 இடங்களில் போட்டியிட்ட த.மா.கா 39 தொகுதிகளிலும் அதிமுக நான்கு தொகுதியிலும் வெற்றி பெற்றன. பர்கூரில் ஜெயலலிதா தோல்வி அடைந்தார்.
2001 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா விரிவான கூட்டணி வியூகத்தை அமைத்தார். தமிழ் மாநில காங்கிரஸ் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வந்து சேர்ந்தது. இதோடு காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுக அணியில் சேர்ந்தன. அதிமுக ஆட்சியை பிடித்தது. ஆனால் ஜெயலலிதா சட்டச் சிக்கலில் இருந்தார். டான்சி நிலம் வாங்கியது தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்திருந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார் என்ற விதி இருந்த போதும் ஆண்டிபட்டி கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். அவர் சார்பில் புதுக்கோட்டை புவனகிரியிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிக்கும் மேல் மனு தாக்கல் செய்யக்கூடாது என்ற விதியையும் மீறினார். ஜெயலலிதாவின் நான்கு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதற்கு கருணாநிதியின் சதியே காரணம் என ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தின் போது புகார் சொன்னார். அதிமுக ஆட்சியை பிடித்திருந்தாலும் ஜெயலலிதா எம்எல்ஏ ஆகவில்லை. எனினும் ஆளுநர் பாத்திமா பீவி ஜெயலலிதாவுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜெயலலிதாவை பதவியில் அமர்த்திய ஆளுநரின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தீர்ப்பு காரணமாக 2001 செப்டம்பர் 21 அன்று ஜெயலலிதா பதவி இழந்தார்.
இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். ஜெயலலிதா மீதான தண்டனை ரத்து ஆன பின்னர் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்வர் பதவியை ஏற்றார்.
மத்தியில் பாஜக கூட்டணியில் திமுக இருந்த நிலையில் சட்டசபைத் தேர்தலிலும் அக்கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்தது புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், மற்றும் சில சாதியக் கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்தது விநோதமாக பார்க்கப்பட்டது. அதிமுக 132, த.மா.கா 23, பாமக 20, காங்கிரஸ் 7, மார்க்சிஸ்ட் 6 இந்திய கம்யூனிஸ்ட் 5 தொகுதிகள் பெற்றன. திமுக 28, பாஜக 4 எம்ஜிஆர் திமுக 2, ப. சிதம்பரத்தின் ஜனநாயகப் பேரவை 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
2001 தேர்தலில் ஜெயலலிதா பின்பற்றிய அதே உத்தியை கருணாநிதி 2006 தேர்தலில் பின்பற்றினார். ஏறக்குறைய தோசையைத் திருப்பி போட்டது போல் திமுக அணியில் காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி சேர்ந்தன. கூட்டணி உருவாக்கத்திற்காக இடப்பகிர்வில் பல தொகுதிகளை கூட்டணிக்கு திமுக ஒதுக்க நேர்ந்தது. அதனால் 132 தொகுதிகளில்
போட்டியிட்டு திமுக 96 தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்தது. கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்காத நிலையில் திமுக தனித்து ஆட்சி அமைத்தது. ‘மைனாரிட்டி’ ஆட்சி என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காங்கிரஸ் 34, பாமக 18, சி.பி.எம் 9 ,சி.பி.ஐ 6 தொகுதிகளை கைப்பற்றின.
மறுமலர்ச்சி திமுக பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும் திமுகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாத நிலையில் 2001-ல் தனித்துப் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. விடுதலைப் புலிகள் ஆதரித்ததாக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வைகோ சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவர் ஜாமினில் வெளிவரத் தயாராக இல்லை. அந்நிலையில் கலைஞர் கருணாநிதி சிறைக்குச் சென்று வைகோவை சந்தித்து பிணையில் வெளிவர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதைய டுத்து 2004 இல் மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் வைகோ இருந்தார்.
தொடர்ச்சியாக 2006 சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி உறுதி என்று இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அதிமுக அணிக்கு மதிமுக மாறியது. 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வென்றது. சிறுத்தைகள் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக 61 தொகுதிகளிலும் வென்றன.
விஜயகாந்த் எம்.ஜி.ஆரா?
அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் மட்டும் விருத்தாச்சலத்தில் வெற்றி பெற்றார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட விஷயங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார். அவரது ஆதரவாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு சில இடங்களில் வென்றனர். விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை 2005 செப்டம்பரில் தொடங்கினார். இந்தக் கட்சியின் பெயரே வியப்பைத் தேசியமும் திராவிடமும் எதிர்நிலை சித்தாந்தங்கள் என்று சித்தரிக்கப்பட்ட நிலையில் தேசியமும் திராவிடமும் விஜயகாந்த் கட்சி பெயருக்குள் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
2006 ல் தனித்துப் போட்டியிட்டு 8.3 சதவீதம் வாக்குகளை பெற்ற விஜயகாந்த் 2009 மக்களவைத் தேர்தல் 10.3 சதவீதம் அளவுக்கு வாக்குகளை பெற்றார். ஆனால் 2011 தேர்தலில் விஜயகாந்த் ஏனோ அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். அதிமுக திமுகவுக்கு மாற்று என்ற பிம்பம் சிதைந்தது. அதிமுக வுடன் கூட்டணி மூலம் 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்றது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்தார் .எனினும் கூட்டணி சேர்ந்த அதிமுகவுடன் முரண்பாடு காரணமாக தேமுதிக பிளவுபட்டது. அவர் கட்சியை சேர்ந்த எம் எல் ஏ.க்கள் அதிமுகவுக்கு மாறினார்கள். அதன் பின்பு அவர் இறக்கும் வரை கட்சி ஏற்றம் பெறவில்லை. கேப்டன் என்றும் கருப்பு எம்ஜிஆர் என்றும் அன்பாக அழைக்கப்பட்டாலும் அவர் எம்ஜிஆர் அல்ல. எம்ஜிஆர் போல் நாயக பிம்பம் மூலம் மக்களைக் கட்டிப் போட முடியவில்லை.
இந்தத் தேர்தலில் திமுக கழகம் 23 தொகுதிகளில் மட்டும் வென்றதால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது. தேமுதிக மட்டுமின்றி இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி புதிய தமிழகம் ஆகியவையுடன் கூட்டணி வைத்த அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.
பண விநியோகமும் இலவசங்களும்
தி.மு.க.வும் அ.தி.மு.கவும் போட்டி போட்டுக் கொண்டு நலத்திட்டங்களை அறிவித்த காலம் இது. 2006 ம் ஆண்டு இலவச கலர் டிவி உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்ததால் தேர்தலின் கதாநாயகன் திமுக தேர்தல் அறிக்கை என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டார். பண விநியோகப் புகார்களுக்கும் பஞ்சமில்லை. கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் இலவச அரிசி, ஆடு, கறவை மாடு இரண்டு ஏக்கர் நிலம் ஆகியவை இடம் பெற்றன. இலவசம் என்பதற்கு பதிலாக விலையில்லா என்ற புதிய பெயரைத் தந்து கொண்டார்கள்.
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. ஜெயலலிதா, சசிகலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை 100 கோடி அபராதம் விதித்தது. ஜெயலலிதா உடனே உடனடியாக முதல்வர் பதவியை இழந்தார். பெங்களூருவில் ஏறக்குறைய ஒரு மாத சிறைவாசத்திற்குப் பின்பு ஜாமினில் வெளியே வந்தார். பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டது. அதன் பின்பு ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
ஜெயலலிதா 2011 ஐ தொடர்ந்து 2016 லும் ஆட்சியைப் பிடித்தார். எம்.ஜி.ஆர் 1977,1980, 1984 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றார் அதன்பின் திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சிகள் ஏற்பட்டன. அதில் ஒரு மாற்றமாக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயலலிதா 2016ல் ஏறக்குறைய தனியாகவே போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிட்டது. சிறு சிறு கட்சிகளை சேர்த்து அவர்களையும் இரட்டை இலையில் போட்டியிட வைத்தார். இதன் மூலம் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வரலாற்று சாதனை உருவானது. அதிமுக 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது திமுக வலுவான எதிர்க்கட்சி என்று சொல்லும் அளவிற்கு 89 தொகுதிகளில் திமுக வென்றது. திமுக அதிமுக இடையே வாக்கு சதவீதம் 1.1% தான்.
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று தெரிவித்து முதல்வர் வேட்பாளராக அன்புமணி நிறுத்தப்பட்டார் பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சுமார் ஐந்து சதவீத வாக்குகளைப் பெற்றது. தேமுதிக அதிமுக தாமாக மார்க்சிஸ்ட் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை சேர்ந்து மக்கள் நலக் கூட்டணியை அறிவித்தன. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டார். அவரும் அந்த அணியில் இருந்த யாரும் வெற்றி பெறவில்லை. 6. 1% வாக்குகளை இந்த அணி பெற்றது இவர்களில் சிலர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் திமுக ஆட்சியை பிடித்திருக்கும். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மாற்று அரசியலை மக்கள் விரும்பத் தொடங்கி விட்டார்கள் என்று தவறாக இடதுசாரிகளும் கணித்தனர். தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக இடதுசாரி தரப்பில் யாரும் சட்டசபைக்கு செல்லவில்லை.
பண விநியோகம் நடந்ததாக அரவக்குறிச்சி தஞ்சாவூர் தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5 ல் இறந்தார் கலைஞர் கருணாநிதி 2016 ஆகஸ்ட் 7 ல் காலமானார். இந்த இரு பெரும் ஆளுமைகள் இல்லாத தேர்தலாக 2021 தேர்தல் அமைந்தது. கொரோனா நெருக்கடி காலத்தில் இந்தத் தேர்தல் வந்தது. திமுக கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் திமுகவை ஆட்சியில் அமர்த்தினார். தி.மு.க 133 இடங்களில் வென்றது. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 18, விசிக 4, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களில் வென்றன.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 66, பாஜக 4, பாமக 5 இடங்களிலும் வென்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. இவர்கள் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ஏழு சதவீத வாக்குகளைப் பெற்று நாம் தமிழர் கட்சி முன்னேறியது 170 இடங்களில் மூன்றாவது இடத்தை பிடித்தது. காங்கிரஸ் பாஜக கட்சிகள் சமீப காலமாக தனித்துப் போட்டியிடவில்லை. இதனால் தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சி..
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதல்வர் பதவியையும் ஏற்க விரும்பினார். இதை அடுத்து ஓ.பி.எஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாற்று ஏற்பாடு செய்யும் வரை பொறுப்பில் நீடிக்குமாறு கவர்னர் கேட்டுக் கொண்டார் ஆனால் அடுத்த நாளே ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதி முன்பு முன்பு ‘தர்ம யுத்தம்’ தொடங்கினார். பின்னர் தனிப் பிரிவாக செயல்பட்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்பு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அவர் ஆதரவு 11 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். பின்னர் இரு அணியும் இணைந்தது. துணை முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவியையும் ஏற்ற பின்பு மீண்டும் முரண்பட்டு ஓ.பி.எஸ் தனியாக இயங்கி வருகிறார். அதேபோல் தினகரன் தனிப் பிரிவாக இயங்கி பின்னர் அ.ம.மு.க தொடங்கினார். நான்காண்டுகள் சிறைத் தண்டனைக்கு பின் சசிகலா தானே கட்சியின் பொதுச் செயலாளர் என்று சொல்லிக்கொண்டு தனித்து செயல்படுகிறார். செங்கோட்டையன் மீது தற்போது நடவடிக்கை வந்துள்ளது.
இந்தப் பிரிவுகள் அனைத்துடனும் பாரதிய ஜனதா கட்சி உறவு பாராட்டுகிறது. ஆனால் கூட்டணி என்பது எடப்பாடி பழனிசாமி உடன் தான் உருவாகியுள்ளது. எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர மாட்டேன் என்று தினகரன் சொல்லி வருகிறார். இந்தப் பிரிவுகளை பாஜக ஒன்றுபடுத்த முயற்சிக்கலாம். விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேர அதிமுக விருப்பமாக உள்ளது. ஆனால் முதல்வர் பதவிக்கு குறைவான உடன்படிக்கைக்கு விஜய் வரத் தயார் இல்லை. இதன் காரணமாக திமுக, அதிமுக கூட்டணிகள் த.வெ.க மற்றும் நாம் தமிழர் ஆகியவை நான்கு முனை போட்டிக்கு தயாராகி வருகின்றன.
ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான உரையாடலை திமுக தொடர்ந்து செய்கிறது. இதுவே அதன் வெற்றிக்கு துணையாக இருக்கும் என்று திமுக நம்புகிறது. பள்ளிக்கல்வி நிதி மறுப்பு உட்பட ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை, மாநில அரசின் அதிகாரங்கள் பறிப்புக்கு எதிரான மாநில உரிமைக் குரலை திமுக எழுப்பி வருகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி மூலம் திமுக ஆட்சிக்கு இடைஞ்சல் தருவது, போட்டி அரசு நடத்த முயற்சிப்பது ஆகியவற்றுக்கு ஒன்றிய அரசு தூண்டுதலாக இருக்கிறது இன்று பிரச்சாரம் செய்யும்.
விடியல் பயணம் எனும் மகளிருக்கான இலவச பேருந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தவப் புதல்வன் திட்டம் போன்ற சாதனைகள், நலத்திட்டங்கள் வாக்குறுதிகள் நிறைவேற்றம், காரணமாக தி.மு. கழக ஆட்சிக்கு ஆதரவான மனநிலை இருப்பதாக திமுக சொல்கிறது. திமுக கூட்டணி 2019, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி அப்படியே வலுவுடன் தொடர்கிறது.
எதிர்க்கட்சிகள் பிளவு பட்டு நிற்கின்றன. அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. ஆனால் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று சொல்லும் பாஜகவின் நிர்பந்தம் மோதலை உருவாக்கலாம். மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார். தேர்தல் நெருக்கத்தில் இடப்பகிர்வு காரணமாக கட்சிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன சில வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, காவல்துறையின் அத்துமீறல்கள், கள்ளச்சாராய மரணம், கொலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுகள் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்யும். முழுமையான பலத்தைக் காட்ட கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபடும். கோடைகால வெப்பத்தோடு சேர்ந்து தேர்தல் பிரச்சார சூட்டையும் தமிழ்நாடு சந்திக்க உள்ளது.



