No menu items!

தூங்கும்போது துப்பாக்கியை நீட்டினார்கள் – அமீர்

தூங்கும்போது துப்பாக்கியை நீட்டினார்கள் – அமீர்

இயக்குநர் அமீர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அமீர், முதல் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.

’’இன்றைக்கு இருக்கும் சூழலில் சீதையும் நானும் ஏறக்குறைய உடன் பிறந்தவர்கள் போலதான். சீதை அக்ணியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவர் ஒரு முறை நிரூபித்தார் என்றால், நான் வாரா வாரம் நிரூபித்து கொண்ட இருக்கிறேன். ‘மாயவலை’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ‘பருத்திவீரன்’ பிரச்சினை தொடங்கியது. இப்போது வேறு ஒரு பிரச்சினையுடன் ‘உயிர் தமிழுக்கு’ பட விழா நடக்கிறது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

கோகுலம் ஸ்டூடியோவில்தான் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஷூட்டிங்கை ஒரு செட் போட்டு எடுத்து வந்தோம். ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து மறுநாள் மாலையிலேயே புது பிரச்சினை தொடங்கியது.

ஒரு தன்னிலை விளக்க கொடுத்தால், கடந்த 15 வருடங்களில் என்னை கருத்தியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் திடீரென வெளியே வந்து, கருத்து கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவர்கள் நேராகவே என்னிடம் தொடர்பு கொண்டு பேசுமளவிற்கு நட்பு இருந்து வருகிறது. ஆனால் இன்று ஊடகங்கள் பெருகி வரும் சூழலில், வயிற்றுப் பிழைப்புக்காக ஏதேதோ செய்ய வேண்டியிருக்கிறது.

’இறைவன் மிகப்பெரியவன்’ தயாரிப்பாளருடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்றால், ஆமாம் இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் அவர் மீது சாற்றப்பட்ட குற்றத்துடன் எனக்குத் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லைடா வெண்ணைகளா என்று சொல்வேன்.

அந்த தைரியமும் திமிரும் எப்போதும் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது. சந்தேக நிழல் என் மீது விழுவதில் தவறு இல்லை.ஆனால் நீங்களாகவே தீர்ப்பு எழுதுகிறீர்களே, அது தான் ரொம்ப ஆபத்தானது. உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது ?

2007-ல் பருத்திவீரன் முடித்த சமயத்தில் கமல் ரஜினி சார் ஆகியோர் என்னுடன் படம் பண்ண வேண்டும் என்றார்கள். ஆனால் ஹீரோக்களுடன் பயணிக்காமல் நான் எனக்காக ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து எனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

பணம் சம்பாதிப்பதா என் நோக்கம்? ஜாபர் ஒருத்தன் தான் தமிழ்நாட்டிலேயே பணக்காரனா? ஜாபர் வந்த பிறகு தான் இவரது வாழ்க்கையை மாறிவிட்டது என்கிறார்கள். 2014ல் தான் அவர் வந்தார். ஆனால் ’விருமாண்டி’ ரிலீஸ் ஆன சமயத்திலேயே கொடைக்கானலில் ’ராம்’ படப்பிடிப்பு நடந்தபோது, மதுரைக்கு இரண்டு இலட்சம் செலவு செய்து படம் பார்க்க வந்தவன் நான். என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

உதவி இயக்குனர்களாக நானும் பாலாவும் சினிமாவுக்கு வந்தபோது கஷ்டப்பட்டவர்கள் என்பதால் ஏதோ சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள். சினிமாவிற்கு வந்ததால் வீட்டில் காசு வாங்காமல் சுயமரியாதையுடன் வந்தவர்கள் நாங்கள்..

ஒரு குற்றவாளி, அவருடன் உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்லப் போகிறோம். ஆனால் உங்களுக்கு இந்த வருமானம் எப்படி வந்தது என கேட்பதற்கு இவர்கள் என்ன வருமான வரித்துறையினரா? காண்ட்ராக்டர் ஆக இருக்கும் என்னுடைய அண்ணன் ஒரு சொத்து வாங்கினாலே இந்தப்பணம் எப்படி வந்தது என நான் அவரிடம் கேட்க முடியாது.

நான் இறை நம்பிக்கை கொண்டவன். கரு பழனியப்பன் ஒரு பெரியாரிஸ்ட்.. ஜனநாதன் ஒரு கம்யூனிஸ்ட்.. மூன்று பேரும் ஒன்றாக சுற்றிய காலகட்டத்தில் கூட நீ எப்படி பணம் சம்பாதிக்கிறாய் என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டதில்லை. பணம் சம்பாதிக்கவா இந்த திரையுலகத்திற்கு வந்தேன்? அதற்காக நான் வரவில்லை. என் வாழ்க்கையை என் விருப்பம் போல வாழ வேண்டும் என இந்த நிமிடம் வரைக்கும் நான் ஆசைப்படுகிறேன்.

கடந்த பத்து நாட்களாக ஒவ்வொரு விசாரணைக்கும் சென்று கொண்டு இருக்கிறேன். இடையில் ஷாப்பிங் சென்று எனக்கு பிடித்த ஆடைகளை நான் வாங்குகிறேன். வேறு எந்த பழக்கங்களும் எனக்கு இல்லை.

இன்னொருவருடைய பணத்தை நம்பி, அதுவும் ஒரு குற்றப் பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழ வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்படவில்லை. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நான் விரும்பவும் மாட்டேன். இதை உங்களிடம் கூறி நான் நிரபராதி, என்னை நம்புங்கள் என்பதற்காகவும் இதை கூறவில்லை.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று அவநம்பிக்கையுடன் நினைக்காமல், எனக்கு ஏன் இது நடந்தது என்று இறை நம்பிக்கையுடன் யோசிக்க கூடியவன் நான். இந்த இடத்தில் இருந்து இன்னும் என்னை சரி செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதனால் அதை நோக்கித்தான் நான் பயணிக்கிறேன்.

என்னைப் பற்றி பல தகவல்கள் கிடைத்தது என யூடியூப் சேனலில் பலவாறாக பேசிய ஒரு நபருக்கு, அவரை தேனியில் கைது செய்ய வரப்போகிறார்கள் என்கிற தகவல் மட்டும் எப்படி தெரியாமல் போனது? அந்த நபர் சொல்லும் பொய் செய்தியை தினசரி 2 இலட்சம் பேர் பார்க்கிறார்கள். பல பேர் கமெண்ட்டுகளில் அமீரை எப்போது கைது செய்யப் போகிறீர்கள் என கேட்கிறார்கள். சிறை என்ன எனக்குப் புதிதா? நான் அப்போதும் தயாராக இருந்தேன். இப்போதும் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் வெறுக்கின்ற ஒரு குற்றத்தில் என்னை தொடர்பு படுத்துவதை தான் குற்ற உணர்ச்சியுடன் உணர்கிறேன். எனக்குள்ளும் வேதனை இருக்கிறது.
சமூகத்தை சீரழிப்பது போதை. அதை நான் வெறுக்கிறேன். என்னுடைய உதவியாளர்கள் சிகரெட் பிடித்தாலே என்னுடைய அலுவலகத்திற்குள் நுழைய விட மாட்டேன்.

கரு பழனியப்பனும் ஜனநாதனும் என் முன்பாக சிகரெட் பிடிக்காமல் கீழே சென்று பிடித்துவிட்டு வருவார்கள். அப்படி நான் வெறுக்கின்ற ஒரு விஷயத்தில் என்னை தொடர்புப்படுத்தும் போது, அது என்னை மட்டும் அல்ல அதனால் என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. என்னுடைய பிள்ளைகள் வேலைக்கு போகும் இடத்திலும் கல்லூரி செல்லும் இடத்தில் பாதிக்கிறது.

என்னை சந்தேகப்படாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. விசாரியுங்கள்.. நன்றாக கேள்வி கேளுங்கள். ஆனால் நீங்கலாக தீர்ப்பு எழுதாதீர்கள்.. கடுமையான விசாரணைகளை சந்தித்து விட்டு தான் இங்கே வந்து நிற்கிறேன். இத்தனை ஆண்டு வாழ்க்கையில் நான் சந்தித்திராத ஒரு புது அனுபவம். விசாரணை செய்த அதிகாரிகளை பொறுத்த வரை அவர்கள் என்னை கண்ணியமாகத்தான் தான் நடத்தினார்கள். என் மனது வலிக்கின்ற மாதிரியான கேள்விகளைக் கேட்டார்கள் என்பது உண்மைதான்.

ஓரிடத்தில் கலங்கிப் போய் நின்றேன் என்பதும் உண்மை. ஆனால் அவர்களுக்கு என்னைக்காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் கிடையாது. அது அவர்களுடைய வழக்கமான கடமை. பின் எப்படி குற்றவாளியை கண்டுபிடிப்பது ?

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் அதிகாரிகளை தவிர வேறு யாருக்கும் தெரியாது? வேறு யார் சொன்னாலும் நம்பாதீர்கள். இந்த வழக்கு குறித்த விவரங்களை நான் சேகரித்து கொண்டிருந்த சமயத்தில் ரமலான் நோன்பிற்காக என் குடும்பத்தினர் ஊருக்கு சென்று விட்டார்கள்.
ஒரு நாள் காலையில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது விழித்து பார்த்தால் திடீரென அமலாக்கத் துறையினர் என் முன்னாடி துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நின்றார்கள். அதன் பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார்கள். அதை முடித்துவிட்டு தான் ரமலான் நோன்புக்காக மதுரைக்கு சென்று வந்தேன்.
எனக்கு முதலில் வந்த சம்மனை கூட எனது வழக்கறிஞர் மூலமாக நான் சொன்ன பிறகுதான் வெளியே தெரிந்தது..? ஆனால் தங்களுக்கு ஏதோ டெல்லி வட்டாரத்தில் இருந்த சோர்ஸ் மூலமாக தகவல் வந்தது என்பது போல பலர் பேசினார்கள். இப்போது சொல்கிறேன், எனக்கு இன்னொரு சம்மன் கூட வந்திருக்கிறது.

புலனாய்வுப்புலிகள் என்று சொல்லிக் கொள்கிற பலருக்கு இது இன்னும் தெரியாது. இந்த சம்மனுக்கும் நேரில் சென்று பத்தரை மணி நேரம் விசாரணையை முடித்துவிட்டு தான் இங்கே வந்திருக்கிறேன்.

அதிகாரிகள் அவர்களது கடமையை செய்கிறார்கள். நான் அதற்கு முதல் நாளில் இருந்தே ஒத்துழைக்கிறேன். இந்த வழக்கை முடித்து விட்டு தான் எங்கேயும் வெளியே செல்வேன். நான் கூறும் கருத்துக்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை.. அதனால் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள்.. அதனாலேயே ஏன் நான் குற்றவாளி ஆகிவிட முடியுமா ?

இந்த காலகட்டம் உண்மையிலேயே கடுமையான காலகட்டம் தான். என்னைச்சுற்றி இருந்த பல நண்பர்கள், உறவினர்கள் ரொம்ப தூரமாக சென்று விட்டனர். என்னிடம் இருந்த 2000 தொலைபேசி எண்களில் 1950 பேரிடம் இருந்து அழைப்பு வருவதே இல்லை.

ஒரு மரத்தின் அருகில் வெடிச் சத்தம் கேட்டதும் பறவைகள் அனைத்தும் சிதறி ஓடும். அதன்பிறகு வெகு சில பறவைகள் மட்டுமே மீண்டும் திரும்பி வரும். அதுபோலத்தான் என் வாழ்க்கையிலும் சில நண்பர்கள் மட்டுமே தேடி வந்தார்கள். ஆனால் இன்னும் பலர் சந்தேகப்பட்டு கொண்டு தூரமாகவே நிற்கிறார்கள். அவர்களை எல்லாம் தயவுசெய்து இங்கே வந்துவிடாதீர்கள். அங்கேயும் நின்ருவிடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் இந்த வழக்கு, பிரச்சனைகள் எல்லாம் இதுவும் கடந்து போகும் என்று தான் நினைக்கிறேன்.

இந்த படம் பற்றி சொன்னால் பெரிய கலை நயத்துடன் காவியமாக இருக்கும் என்று எதிர்பார்த்து எல்லாம் வர வேண்டாம். ஆனால் உங்களை ஜாலியாக சிரிக்க வைக்கும் என்பது மட்டும் உறுதி.

ஒரு சிக்கலான காலகட்டத்தில் இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் ஆதம் பாபாவுக்கு நன்றி”

“பத்து வருடங்களாக உங்கள் நண்பராக ஒருவர் இருந்திருக்கிறார்.. ஆனால் அவரிடம் எப்படி இவ்வளவு பணம் வந்திருக்கிறது என்று உங்களுக்கு சந்தேகம் வரவே இல்லையா என்று கேட்கிறார்கள். இந்த கேள்வியை நீங்கள் லைக்கா நிறுவனம் சுபாஷ்கரனிடம் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வந்தால் அவர்களிடம் கேள்வி கேட்க மாட்டீர்கள்.. ஒரு தனி நபர் எனும்போது கேள்வி கேட்பீர்கள் என்றால் என்ன நியாயம் ? அவர் மீதும் லண்டனில் ஒரு குற்றப்பதிவு இருக்கிறது. ஆனால் அது பற்றி ரஜினி, விஜய் யாராவது கேட்டார்களா? என்னிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?

சமரசம் இல்லாத என்னுடைய வாழ்க்கை தான் இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது என நான் நம்புகிறேன். ஆனாலும் அதை நான் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். நான் பிறருக்கு தொல்லை தருகிறேனா என்று பாருங்கள். இத்தனை ஆண்டுகளில் அப்படி ஏதாவது செய்தி வந்திருக்கிறதா?” என மனதில் இருப்பதையெல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார் இயக்குநர் அமீர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...