No menu items!

அழகிரி மகன் துரை தயாநிதிக்கு என்னாச்சு? எப்படி இருக்கிறார்?

அழகிரி மகன் துரை தயாநிதிக்கு என்னாச்சு? எப்படி இருக்கிறார்?

கலைஞர் கருணாநிதி குடும்பம் கலங்கி நிற்கிறது. மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடலநலக் குறைவுக் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மு.க.அழகிரி – காந்தி தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர்கள் இருவரும் மகள்கள். துரை தயாநிதி தான் ஒரே செல்ல மகன். துடிப்பான இளைஞர். நேரடி அரசியலில் ஈடுபடவில்லையென்றாலும் அப்பா அழகிரி திமுகவில் இருந்த போது அப்பாவுடன் இணைந்து கட்சிப் பணி ஆற்றியவர்.

திரைப்படங்களை தயாரிக்கும் கிளவுட் நைன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். படத் தயாரிப்பு மட்டுமல்லாமல் திரைப்படங்களை விநியோகிக்கும் நிறுவனமாகவும் க்ளவுட் நைன் இருக்கிறது. வாரணம் ஆயிரம், நான் மகான் அல்ல, பையா போன்ற படங்களை விநியோகித்தது தயாநிதி அழகிரியின் நிறுவனம்தான். மங்கத்தா, தமிழ்படம், வடகறி போன்ற திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறது இவரது நிறுவனம்.

மனைவி அனுஷா வழக்கறிஞர் படிப்பு படித்திருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்.

அப்பா அழகிரி திமுகவில் நீக்கப்பட்டப் பிறகு அரசியலில் அதிக ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார். சித்தப்பா மு.க.ஸ்டாலினுடன் அப்பாவுக்கு பிரச்சினைகள் இருந்தபோதும் தயாநிதி அதை பொருட்படுத்தவில்லை. சித்தப்பா ஸ்டாலின் மேல் அவருக்கு பிரியம் உண்டு. அதுபோல் உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி போன்றவர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தார்.

கடந்த சில நாட்களாக வெள்ள பாதிப்பில் சென்னை இருந்தபோது அதற்கான நிவாரணப் பணிகளில் தயாநிதி அழகிரி ஈடுபட்டிருந்தார். எக்ஸ் தளத்தில் நிவாரணம் தேவைப்படுபவர்களுக்கான செய்திகளை பகிர்ந்துக் கொண்டிருந்தார்.

நேற்று காலையில் வீட்டில் இருந்தபோது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரை சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தயாநிதி அழகிரிக்கு மூளை ரத்தநாளங்களில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக  மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து வெளிவரும் உறுதிப்படுத்தப்பட்டாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் Brain Stroke என்றும் கூறுகிறார்கள். தயாநிதிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தயாநிதி அழகிரி மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் கிடைத்ததும் முதல்வர் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்திருக்கிறார். அங்கிருந்த அழகிரி குடும்பத்தினரிடம் அமர்ந்து பேசியிருக்கிறார். தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.

இப்போது தயாநிதி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் இருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துடிப்பான இளைஞர் தயாநிதி அழகிரி திடீரென்று மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...