தனது குருநாதர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பட்டறையில் இருந்து உருவாக்கப்பட்டவர் பாக்யராஜ். குருநாதர் காலமாகி ஒரு மாதத்துக்குள் அவரின் அற்புதமான சிஷ்யரான கே.பாக்யராஜும் மறைந்திருப்பது திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘திரைக்கதை மன்னன்’, வசனகர்த்தா, இயக்குநர், இசையமைப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகப் பரிமாணங்களை தன்னக்தே வைத்திருந்த கே.பாக்யராஜ் எப்போதுமே இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர்களுள் ஒருவராக நினைவுகூரப்படுவார். 1970, 1980, 1990-களில் தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை தனது கதைக்காகவும், வசனத்துக்காகவும், திரைக்கதைக்காகவும் வைத்திருந்தவர் கே.பாக்யராஜ் என்றால் மிகையில்லை.
கே.பாக்யராஜ் திரைபடம் ரிலீஸ் ஆகிறது என்றால், நிச்சயம் படத்தில் ஏதேனும் திருப்பங்களுடன் திரைக்கதை இருக்கும், சுவரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது, நகைச்சுவை, சென்டிமென்ட், பாடல்கள் என அனைத்தும் அற்புதமாக இருக்கும் என்று எண்ணி ரசிகர்கள் சென்று திரைப்படம் பார்த்த காலம் இருந்தது. முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் திரைப்படங்களுக்கு கடும் போட்டியளிக்கும் வகையில் பாக்யராஜின் திரைப்படங்களும் 1980-களில் ஓடின.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோயில் கிராமத்தில் 1953 ஜனவரி 7-ம் தேதி பாக்யராஜ் பிறந்தார். இவரின் இயற்பெயர் கிருஷ்ணசாமி பாக்யராஜ். 1977-ம் ஆண்டு பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பாக்யராஜ் பணியில் சேர்ந்து, ‘16 வயதினிலேயே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘கிழக்கே போகும் ரயில்’ படங்களில் பணியாற்றினார்.
இதில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படத்துக்கு வசனத்தையும் பாக்யராஜ் எழுதி இருந்தார். இந்த திரைப்படத்தில் வரும் “இந்த பொம்பளைங்களே இப்படித்தான் எஜமான்… குத்துங்க எஜமான், குத்துங்க…” என்ற வசனம் அந்த காலகட்டத்தில் இளைஞர்களிடையே கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் வைரலாக வலம்வந்த வசனமாகும்.
பாரதிராஜாவுடன் 3 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாக்யராஜுக்கு 4-வது படமான ‘புதிய வார்ப்புகள்’ படத்திலும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், இது அவரே எதிர்பாராத ஜாக்பாட்டாக அமைந்து, அவருக்குள் இருந்த நடிகர் எனும் திறமையை வெளிக்கொணர உதவியது.
பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிவப்பு ரோஜாக்கள்’ ஆகியவை மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், அவர் தயாரிப்பாளராக ‘புதிய வார்ப்புகள்’ மூலம் அறிமுகமானார். பாரதிராஜாவைப் பொறுத்தவரை தன்னுடைய படங்களுக்கு யதார்த்த நாயகர்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
தன்னுடைய ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்துக்கு கதாநாயகனைத் தேடி பாரதிராஜா அலைந்து கொண்டிருந்த நிலையில், திரைப்பட படப்பிடிப்பு தொடங்க ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்தபோது, பாக்யராஜை கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்தார். இது பாக்யராஜுக்கே படப்பிடிப்பு தொடங்கும் வரை தெரியாதாம்.
‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் மூலம் பாக்யராஜை முழுமையான வசனகர்த்தாவாகவும், கதாநாயகனாகவும் பாரதிராஜா அறிமுகம் செய்தார். ஆர்.செல்வராஜ் கதையில், பாக்யராஜ் வசனத்தில், பாரதிராஜா இயக்கிய ‘புதிய வார்ப்புகள்’ படம் 1979-ம் ஆண்டு சித்திரை முதல் நாளன்று வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி தமிழகத்தின் திரையரங்களில் சக்கைபோடு பேட்டது.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘புதிய வார்ப்புகள்’ நாவலின் தலைப்பை ஏற்று வந்த இந்தத் திரைப்படம் கிராமங்கள், சிறுபட்டி தொட்டிகளில் எல்லாமல் பாக்யராஜை கொண்டு சென்றது. அதிலும் இந்த திரைப்படத்தில் வந்த பாடல்களான ‘வான் மேகங்களே’, ‘இதயம் போகுதே’, ‘தம்தனதம்தன’ பாடல்கள் மக்கள் மனதில் ரீங்காரமிட்டன.
‘புதிய வார்ப்புகள்’தான் பாக்யராஜுக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்தது. பெரிய கண்ணாடி, மூக்கிலேயே பேசும் அவரின் குரல், டான்ஸ் ஆடத் தெரியாத அவரின் உடல் வாகு… இவை அனைத்தையும் ரசிகர்கள் எவ்வாறு ஏற்பார்கள் என்ற கேள்வி இருந்த நிலையில், அவரின் தனித்துவமான நடிப்பையும், வசனத்தையும் ஏற்றுக்கொண்டு அவரைக் கொண்டாடத் தொடங்கினர்.
பாரதிராஜா பட்டறையில் இருந்து வெளியேறி தனித்து இயங்கத் தொடங்கிய பாக்யராஜ் 1979-ல் இயக்குநராக பரிமாணம் எடுத்தார். பாக்யராஜ் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் நடிகர்களாக சுதாகர், சுமதி, கவுண்டமணி, கல்லாபெட்டி சிங்காரம், காந்திமதி ஆகியோரை வைத்து ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. திரைப்படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அதிலும் குறிப்பாக ‘காதல் வைபோகமே’ பாடல் சக்கைபோடு போட்டு மிகப் பெரிய வெற்றிப் படமாக மாறி வசூலை வாரிக் குவித்தது.
இந்தத் திரைப்படத்தில் கல்லாபெட்டி சிங்காரம், கவுண்டமணியின் காமெடி, பாக்யராஜின் வசனங்கள், சுதாகர், சுமதியின், பாக்யராஜின் நடிப்பு ஆகியவை படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருந்தது. குறிப்பாக “சரோஜா குப்பை கொட்டுறியா… கொட்டு கொட்டு” என்ற கவுண்டமனியின் வசனம், கல்லாபெட்டி சிங்காரத்தின் “கையைபிடித்து இழுத்தே வராதவே, கண்ணடிச்சா வரவா போறா”, “டேய் அழகப்பா என்ன பார்த்து இப்படி கேட்டுடியேடா” என்ற கிண்டலான வசனமும் அப்போது மிகப் பிரபலம்.
‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தில் பாக்யராஜின் ஒரு தலைக் காதல், தனது காதலி (சுமதி) துன்பப்படும்போது பாக்யராஜ் செய்யும் உதவி, வறுமையில் குடும்பம் படும் பாடு என அனைத்தையும் மிக இயல்பாக அமைத்திருந்தார்.
நடிகர் ராஜேஷை கதாநாயகனாக அறிமுகம் செய்து, ‘கன்னிப் பருவத்திலேயே’ படத்தை பாக்யராஜ் இயக்கினார். அதுவும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் பாக்யராஜ் வில்லன் பாத்திரத்தை ஏற்று நடத்திருந்தார்.
அடுத்ததாக, ‘ஒரு கை ஓசை’படத்தை தானே தயாரித்து, வாய் பேச முடியாத இளைஞராக மிகவும் கடினமான பாத்திரத்தை ஏற்று பாக்யராஜ் நடத்திருந்தார். நடிகை அஸ்வினியை நாயகியாக வைத்து எடுக்கப்பட்ட படமான பாக்யராஜ் நடிப்பில் வெளியான ‘ஒரு கை ஓசை’ ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
அதன்பின் ‘மெளன கீதாங்கள்’, ‘இன்று போய் நாளை வா’ திரைப்படங்கள், பாக்யராஜின் இயக்கத்துக்கு மகுடமாக அமைந்தன. அதிலும் ‘இன்று போய் நாளை வா’ திரைப்படத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பாக்யராஜ் அடிக்கும் லூட்டியும், கதாநாயகியாக வரும் ராதிகாவை காதலிக்க நண்பர்கள் 4 பேருக்குள் ஏற்படும் போட்டியும் படத்தை சுவராஸ்யத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றன. குறிப்பாக கல்லாபெட்டி சிங்காரத்தின் காமெடி, இந்தி வாத்தியாரின் “ஏக் ஹாவ் மே ஏக் கிசான் ரஹெ தாத்தா” என்ற வசனம், படத்தின் அறிமுகமே பாக்யராஜ் செய்யும் சேட்டைகள் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கியது.
அதைத் தொடர்ந்து ‘விடியும்வரை காத்திரு’, ‘அந்த 7 நாட்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’, ‘டார்லிங், டார்லிங், டார்லிங்’ திரைப்படங்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தார். அந்தக் காலக்கட்டத்தில் பாக்யராஜ் திரைப்படங்கள் என்றாலே கல்லாபெட்டி சிங்காரத்தின் நகைச்சுவை காட்சிகள் சற்று தூக்கலாகவே அமைந்திருந்தது. ‘கல்லாபெட்டி’ சிங்காரத்தின் நகைச்சுவைத் திறனையை ஒவ்வொரு படத்திலும் பாக்யராஜ் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.
குறிப்பாக ‘டார்லிங், டார்லிங், டார்லிங்’, ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’, ‘இன்று போய் நாளை வா’, ‘அந்த 7 நாட்கள்’ ஆகிய படங்களில் கல்லாபெட்டி சிங்காரத்தின் நகைச்சுவை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. ‘ஒரு கை ஓசை’, ‘பாமா ருக்மணி’, ‘மெளன கீதங்கள்’ படத்திலும் அவர் இருப்பார். கல்லாபெட்டி சிங்காரம் 1966-ம் ஆண்டு ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ திரைப்படத்தில் அறிமுகமாகி நடத்து வந்தாலும், 1979-ம் ஆண்டு ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படம்தான் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக மாறியது.
இயக்குநர் என்ற நிலையில் இருந்து நடிப்புக்குள் வந்தபின், பாக்யராஜ் தனது அளவுகோலை நன்கு அறிந்து வைத்திருந்தார். தன்னுடைய உடலமைப்புக்கும், இயல்புக்குக்கும் எந்த மாதிரியான கதாப்பாத்திரங்கள் பொருந்தும் என்பதை உணர்ந்து, அந்தக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.
பாக்யராஜ் தானே இயக்கி நடித்த பல திரைப்படங்களில் கதாநாயகன் வேடம், அவருக்கே உரியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகரும் நடத்திருந்தால்கூட சிறப்பாக நடத்திருக்க முடியாது என்று பேசவைத்துவிடுவார்.
கதாநாயகன் என்றால் தமிழ்த் திரையுலகத்தில் கடைபிடிக்கப்பட்ட இலக்கணத்தையும், மரபுகளையும் உடைத்து, நடிப்புதான் பிரதானம், வசனம் மற்றும் வலுவான திரைக்கதை இருந்தால் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்பதை பாக்யராஜ் தனது படங்கள் வாயிலாக நிரூபித்தார்.
ஒருவித அப்பாவித்தனம், கேலி – கிண்டல் பேச்சு, ஏமாற்றுத்தனம் போன்ற குணங்கள் கொண்ட பாத்திரங்கள்தான் பெரும்பாலும் அவரின் கதையில் இருந்தன. குறிப்பாக ‘சின்ன வீடு’, ‘முந்தானை முடிச்சு’, ‘எங்கள் சின்ன ராசா’, ‘ராசுக்குட்டி’, ‘இது நம்ம ஆளு’, ‘ஆராரோ ஆரிரரோ’, ‘பவுணு பவுணுதான்’, ‘அம்மா வந்தாச்சு’, ‘சுந்தர காண்டம்’, ‘வீட்ல விசேஷங்க’, ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ போன்ற திரைப்படங்களில் பாக்யராஜுக்கு ஏற்ற அப்பாவித்தனமான வேடம் இருந்தது.



