அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி மேயர் பதவிக்கான தேர்தலில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) போட்டியிடுகிறார்.
அமெரிக்காவின் 100 முக்கிய நகரங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் வாஷிங்டன் டிசி மேயர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக ஆளும் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு மேயர் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துவிட்டது. இந்தச் சூழலில் குடியரசுக் கட்சி சார்பில் ஸ்டாசியா ஹால் என்பவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரினி சம்பத் மற்றும் ஜானிஸ் லெவிஸ் ஜார்ஜ், கென்யன் மெக்டபே, கேரி குட்வெதர், ராபர்ட் எல் கிராஸ், ரோண்டா ஹாமில்டன் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜனநாயகக் கட்சியில் பலர் மனு தாக்கல் செய்திருப்பதால் ஜூன் 16-ம் தேதி உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இறுதி செய்யப்படுவார். இதில் ரினி சம்பத் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 1975-ம் ஆண்டு முதல் வாஷிங்டன் டிசி மேயராக, ஜனநாயகக் கட்சி தலைவர்களே பதவி வகித்து வருகின்றனர். எனவே நவம்பர் 3-ம் தேதி நடத்தப்படும் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ரினி சம்பத் யார்? – தமிழகத்தின் தேனியில் கடந்த 1994-ம் ஆண்டு ரினி சம்பத் பிறந்தார். அவருக்கு 6 வயது இருக்கும் போது அவரது பெற்றோர், தமிழகத்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறினர். தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவு தொடர்பாக ரினி சம்பத் பட்டம் பெற்றுள்ளார்.
கல்லூரி படிக்கும் போது கடந்த 2015 – 2016-ம் ஆண்டில் அவர் மாணவர் சங்கத் தலைவராக பதவி வகித்தார். தற்போது அவர் அரசு ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். சாலை, குடிநீர், சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு தொடர்பாக அவர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
தமிழ் தாய்மொழி: அண்மையில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் ரினி சம்பத் பேசுகையில், ‘‘தமிழ் எனது தாய் மொழி. எனது தாத்தா, பாட்டி 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தனர். அவர்களுடைய ஊக்கத்தால் எனது பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறினர். எனது தந்தையின் துணிச்சலான முடிவால் அமெரிக்க தலைநகரில் வசித்து வருகிறேன். நான் கல்லூரியில் படிக்கும் போது இனரிதீயாக விமர்சிக்கப்பட்டேன்.



