No menu items!

ரம்ஜான் – முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

ரம்ஜான் – முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகை – தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

நிலாவை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ரம்ஜான் நோன்பு ஒன்றாகும். அதன்படி, 30 நாட்கள் நோன்பின் முடிவில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

நடப்பாண்டிற்கான ரம்ஜான் பண்டிகை மார்ச் 21-ம் தேதி (நாளை) கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனிடையே, ரம்ஜான் பண்டிகையையொட்டி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்துச் செய்தியில்: நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் இஸ்லாமாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்.

வரலாற்றில் நாம் கண்ட பெரும் புரட்சியாளர்களில் ஒருவரும், சமத்துவத்தின் திருவிளக்குமான நபிகள் நாயகத்தின் நெறியில் வாழ்ந்து வரும் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு என்றும் அரணாக நமது திமுகவும், திமுக அரசும் திகழ்ந்து வருகின்றது. கல்வி, வேலை வாய்ப்புகள், பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம், மதச் சுதந்திரம் என அனைத்து நிலைகளிலும் சிறுபான்மைச் சகோதரர்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறது.

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவரும் போதெல்லாம் மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவற்றை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருவதுடன், சட்டமன்றத் தீர்மானங்கள் வாயிலாகவும் நமது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி வருகிறோம். மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்று நாம் செயல்படுவதால்தான், அனைத்துத் தரப்பு மக்களும் நம்மைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள்.

இந்தியாவில் பிற மாநிலங்களில் எல்லாம் வெறுப்பு விதைகள் தூவப்பட்டு, நாள்தோறும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையிலும் தமிழ்நாடு நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற வழியில் நடைபோடும் நமது அரசு அனைவரது பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிசெய்துள்ளது.

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில், பல சிறப்பு அறிவிப்புகளையும், சென்னையில் ஹஜ் இல்லம், தொன்மையான பள்ளிவாசல்கள் – தர்காக்கள் புனரமைப்பு, இசுலாமிய மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட திட்டங்களையும் நிறைவேற்றி வந்திருக்கிறோம். இப்படி என்றும் உங்களில் இருந்து பிரிக்க முடியாத சொந்தமாக உறவாடும் அன்போடு, ஈகைப் பண்போடு ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி : திருக்குர்ஆன் புனித நூல் அருளப்பட்ட மேன்மை மிகு ரம்ஜான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித குலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.

இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று பழனிசாமி கூறியுள்ளார்.

வைகோ: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “நன்மை தீமைகளைப் பிரித்து அறிந்து, நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்ட ரம்ஜான் மாதம், மாற்றம் தருகின்ற மாதம்; உள்ளங்களில் உண்மை ஒளி படர்ந்திடும் மாதம்.

இந்தத் திங்களில்தான் இஸ்லாத்திற்கு மகுடங்களைச் சூட்டிய வெற்றிகள் தேடி வந்து கிடைத்தன. இஸ்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையை எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் அசைக்க முடியாத ஒரு மார்க்கமாக நிறுவிய பத்ருப் போர்க்கள வெற்றி; மக்கா யுத்த களத்தின் வெற்றி, மங்கோலிய டார்ட்டாரியர்களை இஸ்லாமியர்கள் வெற்றி கொண்டது, சிலுவைப் போர்களில் இஸ்லாமியர்களுக்குக் கிடைத்த வெற்றி, ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய போர்க்களத்தின் வெற்றி எல்லாமே இந்த ரம்ஜான் மாதத்தில்தான்.

இஸ்லாமியப் பெருமக்களுக்கு விதிக்கப்பட்ட புனிதமான ஐம்பெருங் கடமைகளில் நிகரற்ற கடமை, தவிர்க்க இயலாத கடமை ரம்ஜான் நோன்புதான் என்று திருக்குர் ஆன் அழுத்தந் திருத்தமாகச் சொல்லுகின்றது. புனித ரம்ஜான் மாதத்தின் முப்பது நாட்களிலும் பொழுது புலரும் வேளையில் இருந்து அந்தி சாயும் நேரம் வரை பசி பொறுத்து உணவு உண்ணாமல், தாகத்தைத் தாங்கி தண்ணீர் அருந்தாமல் புலன்களை இச்சைகளைக் கட்டுப்படுத்தி நோன்பு தவம் இருத்தலை நிறைவு செய்கின்ற வகையில் ரம்ஜான் பெருநாள் அமைகின்றது.

காய்ந்த குடல்கள், காலியான வயிறுகள், பசியின் அகோரத்தைப் புரிய வைக்கின்ற ரம்ஜான் மாதம் தருகின்ற படிப்பினை, வறியோர்க்கு உதவிக் கரம் நீட்டுங்கள் என்பதாகும். அதன்படி, ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப் பெருநாளில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு, மதிமுக சார்பில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று வைகோ கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், ”ரம்ஜான் எனும் நோன்புப் பெருநாள் இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நேர்மையான வாழ்க்கை வாழ்பவர்கள் இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாத்தின் 5 கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் இருந்து சூரிய மறைவு வரை உண்ணாநோன்பு இருந்து இறுதியில் கொண்டாடப்படும் ஈகைத் திருநாளே ரம்ஜான் திருநாள்.

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் பிரார்த்தனைகள் செய்வதும், திருக்குர்ஆனைப் பாராட்டுவதும், பாராது ஒப்புவிப்பதும் மற்றும் நல்ல செயல்களையும் தொண்டுகளையும் மேற்கொள்வதும் தனிச் சிறப்பு. மகிழ்ச்சி, சகோதரத்துவம் மற்றும் தானம் நிறைந்த ரம்ஜான் பண்டிகையானது உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் புனிதப் பண்டிகையாகும்.

ரம்ஜான் மாதத்தில் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டு, அன்பை பரிமாறி, உதவிகள் செய்து, இஸ்லாத்தை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் போற்றுதலுக்குரியவர்கள். இஸ்லாமியர்கள் நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இல்லாமை நீங்கவும், இன்பங்கள் பெருகவும், வளம் நிறையவும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

முன்னாள் எம்.பி.திருநாவுக்கரசர்: கடந்த ஒரு மாதமாக உண்ணா நோன்பிருந்த இஸ்லாமியப் பெருமக்கள் ‘ஈதுல் பித்ர்’ என்னும் ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி திளைக்கின்றனர்.

ரம்ஜான் மாதம் புனித மாதமாக போற்றப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் ‘திருக்குர்ஆன்’ இறக்கம் செய்யப்பட்டது. ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சகோதரத்துவம், சமத்துவம், ஈகை, சகவாழ்வு ஆகிய வாழ்வு வழிமுறைகளை பின்பற்றி இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

‘உங்களுக்கு முன்பிருந்தோருக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது போல், உங்களுக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது’ என்ற திருக்குர்ஆன் வசனத்தின் கருத்து போல், விரதம் எனும் நோன்பு ஒரு பொதுவான அம்சமாக அனைத்து மதங்களிலும் உள்ளது என்ற பொது உண்மையை, இஸ்லாம் உலக மக்களுக்கு உணர்த்துகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வழியில் ஜகாத் என்னும் ஏழை வரியை பொது நிதியகங்களில் செலுத்தி, ஏழைகள் முதியவர்கள், விதவைகளுக்கு உதவியும் , மருத்துவம், கல்வி, திருமணம், உணவு மற்றும் தொழில் துவங்கும் உதவிகள் என அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இம்மாதம் உதவுகிறது.

நோன்பு உடலையும், உள்ளத்தையும் மேலும் புனிதமாக்குகிறது. இப்புனித நாளில் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், மகிழ்வும் பெருகிடவும், அனைவரும் நல்ல உடல் நலமுடன் வாழவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்களை உளமாற தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்: பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுங்கள், துன்புற்றவர்களுக்கு உறுதுணையாக இருங்கள், அயலார்களிடம் அன்பு செலுத்துங்கள் போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும் உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி தூய்மை உணர்வோடு ரம்ஜான் நோன்பு இருந்த இஸ்லாமியச் சகோதர, சகோதரிகள் அனைவரின் எண்ணங்களும் விருப்பங்களும் ஈடேரற்றும் என இந்நாளில் பிரார்த்திப்போம்.

ரம்ஜான் மாதத்தில் புனித நோன்பினை மேற்கொண்டு இறை உணர்வுடன் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை உணர்வு மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தீர்ந்து உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திட வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது புனித ரமலான் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று தினகரன் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: ”இஸ்லாமிய பெருமக்களின் மிக உன்னதமான பண்டிகை ரம்ஜான். ஒழுக்கம், தியாகம், மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் முஸ்லிம் சமூகத்தின் பண்புகள் பாராட்டத்தக்கது. அன்பு, பகிர்வு மற்றும் சகோதரத்துவத்தை நடைமுறையில் கடைபிடிக்கும் இவர்களின் வாழ்க்கை முறை அனைவருக்கும் முன் மாதிரியாக விளங்குகிறது.

இம்மாதத்தில் நோன்பு ஏற்பது அவர்களது முக்கிய கடமைகளில் ஒன்றாகும். சமூக நல்லிணக்கம், தர்மம், சகோதரத்துவம், தன்னடக்கம் போன்ற உயரிய பண்புகளை பின்பற்றுவதில் இவர்களது பங்கு மகத்தானது. இதுவே ரம்ஜான் பண்டிகையின் உன்னத நோக்கமாக அமைகிறது.

பன்முக கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கென்று ஒரு கருத்தியலை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கிற வகையில் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறுபான்மை மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மதச் சுதந்திரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மற்றும் பாகுபாடு தொடர்கிறது. இந்தியாவில் மத சிறுபான்மையினர் மீது பொது சிவில் சட்டம், வக்பு வாரிய சட்டம் ஆகியவற்றை திணித்து மிகப்பெரிய அச்சுறுத்தலை பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது

சிறுபான்மையினர் எதிர்கொள்கிற ஆபத்தில் இருந்து அவர்களை பாதுகாக்க தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடு முழுவதிலும் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை காக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, அனைத்து மக்களையும் சாதி, மத, பேதமில்லாமல் சமமாக கருதுவது தான் மதச்சார்பின்மை என்பதை ரம்ஜான் பண்டிகை செய்தியாக தமிழக காங்கிரஸ் கட்சி கூற விரும்புகிறது.

எனவே, இந்த ரம்ஜான் பெருநாளில் அனைவருக்கும் கொடை வழங்கி, அவர்களுடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள், தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், ஏற்றமும் பெறவும், சகோதரத்துவம் தழைக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரம்ஜான் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று செல்வப்பெருந்தகை என்று கூறியுள்ளார். எம்.எல்.ஏ.)

பாமக தலைவர் அன்புமணி: நன்மைகள் தான் மனிதத்தை உயர்த்தும் என்ற உன்னத தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரம்ஜான் மாதத்தில் தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்பதால், அதைக் குறிக்கும் வகையில் தான் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் நோன்பிருந்து நபிகளையும், குரானையும் போற்றுகின்றனர். இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது ரம்ஜான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இது பற்றி இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு என்று குறிப்பிடுகிறார். அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள். உலகிற்கு பயனளிக்கக் கூடிய இத்தகைய மாற்றத்தை மனிதனிடம் ஏற்படுத்துவது தான் ரம்ஜான் திருநாளாகும்.

நோன்புக் காலத்தில் மற்றவர்களுக்கு உதவுதல், காலையில் உட்கொள்ளும் உணவையும், மாலையில் நோன்பு திறந்ததும் உட்கொள்ளும் உணவையும் அனைவரும் பகிர்ந்து உண்ணுதல், மோதலில் ஈடுபடாமல் இருத்தல், தீயவற்றை பேசாதிருத்தல் ஆகியவற்றை நோன்புக் காலத்தில் இஸ்லாமியர்கள் தவறாமல் கடைபிடிக்கின்றனர். அந்த வகையில் இஸ்லாமியர்களை உன்னதமாக்கும் திருநாளே ரம்ஜான்.

இஸ்லாம் போதிக்கும் இந்த நற்குணங்கள் அனைத்தும் உலகமெங்கும் நிறைய வேண்டும். உலகின் மிகப்பெரிய சாத்தானான மது ஒழிக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என்று கூறி மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன்” என்று அன்புமணி கூறியுள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் முஸ்தபா: இஸ்லாமியப் பெருமக்கள், புனித ரம்ஜான் மாதத்தின் முப்பது நாட்களும் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து, உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தி, அனைவரிடத்தும் அன்பு பாராட்டி, ஏழை, எளியோருக்கு உணவளித்து, பள்ளிவாசல்களில் நடைபெறும் சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

நோன்புக் காலத்தில் மற்றவர்களுக்கு உதவுதல், காலையில் உட்கொள்ளும் உணவையும், மாலையில் நோன்பு திறந்ததும் உட்கொள்ளும் உணவையும் அனைவரும் பகிர்ந்து உண்ணுதல், யாரிடமும் மோதலில் ஈடுபடாமல் இருத்தல், தீய வார்த்தைகளைப் பேசாமல் இருத்தல் ஆகியவை நோன்புக் காலத்தில் எவரும் கட்டாயப்படுத்தாமலேயே இஸ்லாமியர்கள் கற்றுக் கொள்ளும் பாடங்கள். அந்த வகையில் ரம்ஜான் என்பது மனிதர்களை அனைத்து வகையிலும் பக்குவப்படுத்தும் ஓர் இனிய திருநாள் என்பதில் ஐயமில்லை.

மத்திய அரசால் இஸ்லாமிய மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே பிரிவினை வாதத்தை உருவாக்கி, மக்களிடையே மத மோதல் ஏற்படுத்த மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது. அதே போன்று தமிழக மக்கள் நலன் கருதாமல், குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து திமுக-வும் அரசை நடத்தி வருகிறது. இதில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த நல்ல வாய்ப்பு மக்களுக்கு அமைந்து இருக்கிறது.

ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரோத அரசை வீட்டு அனுப்ப ஈத் பெருநாளில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.” என்று முஸ்தபா கூறியுள்ளார்.

இந்திய தேசிய லீக் மாநில தலைவர் நாகூர் ராஜா: நபிகள் நாயகம் வழங்கிய போதனைப்படி இஸ்லாம் சமுதாய மக்கள் ஒரு மாத காலம், பகல்பொழுது முழுவதும் நீர்கூட அருந்தாமல் கடுமையாக நோன்பிருந்து ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் கொண்டாடுகின்றனர்.

இஸ்லாம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் அனைத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறியைப் போதித்த அண்ணல் நபிகள் பெருமான், இனத்திமிரை, ஜாதித் திமிரை, நிறத் திமிரை, குலத் திமிரை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன் என்று அன்றே சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னத லட்சியங்களுக்காக வீர முழக்கமிட்டவர். அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே, உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு எனப் போதித்து மனித நேயம் வளர்க்க வழி காட்டியவர்.

ரம்ஜான் திருநாளை ஒரு கொண்டாட்டம் என்பதை விட முப்பது நாட்கள் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து மேற்கொள்ளப்படும் பயிற்சி என்பது தான் பொருத்தமானதாகும். இஸ்லாமியப் பெருமக்கள், இப்புனித ரம்ஜான் மாதத்தின் முப்பது நாட்களும் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து, உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, அனைவரிடத்தும் அன்பு பாராட்டி, ஏழை, எளியோருக்கு உணவளித்து, பள்ளி வாசல்களில் நடைபெறும் சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனியத ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...