“அந்தப் பைத்தியக்கார அயோக்கியர்களுக்கு இன்று என்ன நடக்கிறதென்று பாருங்கள்” என தனது சமூக வலைதளப் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் உச்சமடைந்துள்ள நிலையில் ஈரானை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.சமீபகாலமாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிடுவதைத் தவிர்த்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ட்ருத் சோசியல் எனப்படும் சமூக வலைதளப் பக்கத்தில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்.
இன்று காலை அவர் வெளியிட்ட பதிவில், “ஈரானின் பயங்கரவாத ஆட்சியை ராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், மற்ற அனைத்து நிலைகளிலும் அழித்து வருகிறோம். ஆனால், நியூயார்க் டைம்ஸ் போன்ற தோல்வியுற்ற பத்திரிகைகளை நீங்கள் படித்தால் நாம் வெற்றி பெறவில்லை என்று நீங்கள் தவறாக நினைக்கக்கூடும்.
ஈரான் கடற்படை அழிந்துவிட்டது, அவர்களின் விமானப்படையும் இப்போது இல்லை, ஏவுகணைகள், டிரோன்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் தலைவர்களும் பூமியிலிருந்து அழித்தொழிக்கப்பட்டனர்.
நம்மிடம் ஈடு இணையற்ற துப்பாக்கிகள், கணக்கற்ற வெடிமருந்துகள் மற்றும் ஏராளமான நேரம் கைவசம் உள்ளது. அந்தப் பைத்தியக்கார அயோக்கியர்களுக்கு இன்று என்ன நடக்கிறதென்று பாருங்கள்.
கடந்த 47 ஆண்டுகளாக அப்பாவி மக்களை அவர்கள் கொன்று குவித்துள்ளனர். இப்போது, அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக அவர்களை நான் கொல்கிறேன். எவ்வளவு பெருமையான ஒன்று. இந்த விஷயத்தில் மக்களாகிய உங்களின் கவனத்திற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.



