No menu items!

பெட்ரோல் பங்குகளுக்கு பீதியுடன் படையெடுக்க வேண்டாம் – பாரத் பெட்ரோலியம்

பெட்ரோல் பங்குகளுக்கு பீதியுடன் படையெடுக்க வேண்டாம் – பாரத் பெட்ரோலியம்

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும் அதன் விலை கணிசமாக உயரக்கூடும் என்றும் வதந்தி பரவியதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

சென்னை, திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளுக்குச் சென்று பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்பி வருகிறார்கள். சிலர், 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன் போன்றவற்றை எடுத்துச் சென்று கூடுதலாக வாங்கிச் செல்கிறார்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாடிக்கையாளர் ஒருவர், ‘‘ஏற்கனவே வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டருக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

அடுத்ததாக, பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அதன் விலையும் வேகமாக உயரும் என்றும் பலரும் கூறி வருகிறார்கள். அதன் காரணமாகவே, எனது காரின் பெட்ரோல் டேங்க்கை நிரப்பிக்கொள்ள இங்கு வந்துள்ளேன். கார் பயன்பாடு அதிகம் என்பதால், எரிபொருள் கிடைக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்’’ என தெரிவித்துள்ளார்.

இரு சக்கர வாகனத்தில் வந்து தண்ணீர் கேனிலும் பெட்ரோலை நிரப்பிக் கொண்டுச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், ‘‘எங்கள் காருக்காக வாங்கிச் செல்கிறேன். நாங்கள் வெளியூர் செல்ல இருக்கிறோம். அதன் காரணமாகவே, வாங்கிச் செல்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவும் அவற்றின் விலை கடுமையாக உயரக்கூடும் என்ற அச்சம் காரணமாகவும் மக்கள் பெட்ரோல் பங்க்குகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இதேபோல், வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி சிலிண்டரைப் பெறுவதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு எல்பிஜி சிலிண்டர் ஏஜென்சிகளின் அலுவலக வாயில்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவற்றைப் பெற்று வருகின்றனர்.

வதந்திகளை நம்ப வேண்டாம்: இந்நிலையில், இது குறித்து பாரத் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது என்றும், இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்படும் என்றும், எனவே மக்கள் தங்கள் வாகனங்களில் எரிபொருட்களை நிரப்பிக்கொள்ளுமாறும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை.

இந்தியாவில் எரிபொருள் இருப்பு போதுமான அளவு உள்ளது. சர்வதேச அளவிலான எந்த ஒரு குறுகிய கால நெருக்கடியையும் எதிர்கொள்ள இந்தியாவால் முடியும். இந்தியா ஹோர்முஸ் ஜலசந்தி பாதையை மட்டும் நம்பி இருக்கவில்லை. மாற்று வழிகளும் நம்மிடம் உள்ளன.

எனவே, மக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம்; பெட்ரோல் பங்குகளுக்கு பீதியுடன் படையெடுக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அமைப்புகளுடன் இணைந்திருங்கள்” என்று தெரிவித்துள்ளது.

பாரத் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியில், ‘‘எல்பிஜி பற்றாக்குறை குறித்த வதந்திகள் தேவையற்ற கவலையை ஏற்படுத்தக்கூடும். எல்பிஜி பற்றாக்குறை குறித்த வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ தேவையில்லை. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களும் அரசாங்கமும் சிலிண்டர்கள் வீடுகளுக்கு இடையூறு இல்லாமல் சென்றடைவதை உறுதிசெய்ய தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. சரிபார்க்கப்பட்ட தகவல்களை நம்புவோம்; வதந்திகளைத் தவிர்ப்போம்’’ எனத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...