கடந்த 10 ஆண்டுகளில் தாலுக்கா நகரங்களில் கூட 170 முதல் 250 பேர் அமரக்கூடிய மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் வந்துவிட்டன. ஒரு காலத்தில் 600 முதல் 1000 பேர் கூட அமரக்கூடிய திரையரங்குகள் சிங்கிள் ஸ்கிரீன்களாக புகழ்பெற்று விளங்கின.
இன்றும் கூட மூச்சைப் பிடித்துக்கொண்டிருக்கும் இந்த 70 எம்.எம் சிங்கிள் ஸ்கிரீன்கள் சில தமிழ்நாட்டில் உண்டு. இவை மாஸ் மசாலா படங்கள் வெளியாகும் இரு தினங்கள் மட்டும் முழுவது நிரம்பினால் பெரிய விஷயம். 180 பார்வையாளர்கள் என்கிற நிலைக்குத் திரையரங்குகள் சுருங்கத் தொடங்கிய காரணம் வெளிப்படையானதுதான்.
சினிமாவுக்கு செலவழிக்கும் டிக்கெட் கட்டணத்தை விட, உள்ளே விற்கும் பாப்கார்ன், பப்ஸ், காபி, குளிர்பானம் போன்றவற்றின் விலை ஒரு மடங்கு அதிகம். டிக்கெட் விலை 150 ரூபாய் என்றால் பாப்கார்ன் விலை குறைந்தது 300 ரூபாய் (சில நியாயமான திரையரங்குகள் அபூர்வ விதிவிலக்கு).
கேண்டீன் கொள்ளையின் புதிய பரிமாணமாக, சிக்கன் பர்கர் தொடங்கி அத்தனை ஆடம்பரமான சிற்றுண்டிகளும் கிடைக்கும் சர்வதேச ஜங்க் ஃபுட் – ஃபுட் கோர்ட் கலாச்சாரத்தை மாநகர மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் வளர்த்து வருகின்றன. இவற்றில் சாப்பிடுவதற்காகவே பணம் படைத்தவர்கள் திரையரங்கு செல்கின்றனர்.
பக்கத்து இருக்கையில் இருப்பவர் விதவிதமான உணவுகளை சாப்பிட்டபடி படம் பார்க்கும்போது தன் குடும்பத்துக்கு ஒற்றை பாப்கார்ன் கூட வீண் செலவு அல்லது பணச்செலவு வாழும் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கப் பிரிவினரில் பெரும்பான்மைப் பார்வையாளர்கள் திரையாரங்கு வருவதையே விட்டுவிட்டனர். அப்படியே அவர்கள் வந்தாலும் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஒரு முறை படம் பார்க்க 3000 ரூபாய் தேவைப்படுவதால் வருடத்துக்கு ஒருமுறை போதும் என்கிற ஃபெஸ்டிவல் சினிமா மனநிலைக்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
இதையும் தாண்டி சில படங்களுக்குக் கூட்டம் கூட்டமாகக் குடும்பமாகப் போய், இந்தப் படத்தை நம் குடும்பத்துக்குக் காட்டிவிட வேண்டும் என்று ஈர்க்கும் சில படங்கள் உண்டு. அண்மையில் அப்படியொரு படம் வெளியாகி குடும்பங்களை ஈர்த்தது என்றால் அது விக்ரம் பிரபுவும் புதுமுகங்களும் நடித்திருந்த ‘சிறை’ திரைப்படம்.
அந்தப் படம் ஏன் வெற்றிபெற்றது என்றால், வாழ்க்கைக்கு நெருக்கமாக, சிறு போலித்தனமும் இல்லாத கதாபாத்திரங்களைத் தங்கள் நிலத்தில், தங்களுக்கு மத்தியில் பார்ப்பதுபோல் உணர்ந்தார்கள். அப்படி உணர வைப்பதில் அப்படம் பேசும் சமூகத்தில் நிலவும் உண்மைக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு அந்தப் படத்தின் திரைக்கதையில் சரியான இடைவெளியில் இடம்பெற்றிருக்கும் ‘திரையரங்கத் தருணங்கள்’தான்! அது என்ன திரையரங்க தருணங்கள்?
மாஸ் மசாலா சினிமாவோ அல்லது ஒரு தரமான மிடில் சினிமாவோ, அவற்றில் ‘தியேட்டர் மோமெண்ட்ஸ்’ (Theater Moments) என்பது, ஒரு திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் ஒரே உணர்வில் ஒன்றிணைந்து, உற்சாகமாகவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ எதிர்வினையாற்றும் தருணங்கள் இடம்பெற்ற காட்சிகளைக் குறிக்கும்.
இது திரையில் நடக்கும் ஒரு கூட்டு திரையனுப நிகழ்வு! இந்தத் தருணங்கள் திரையில் உலவும் கதாபாத்திரங்களுக்கு நிகழும் தருணங்களாக இருந்தாலும் அவற்றைத் திரையரங்கில் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கிடையே அந்தத் தருணங்கள் ஏற்படுத்தும் சில வினாடிகள் பெரிய மேஜிக் எனலாம்.
‘சிறை’ படத்தில், சிறையிலிருந்து நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் அப்துல் காணாமல் போய்விடும் காட்சி ஒரு ‘திரையரங்க தருணம்’ என்றால், அவன் மீண்டும் ஒரு காவல் நிலையத்தில் கிடைப்பது மற்றொரு திரையரங்க தருணம்.
அந்தக் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மூணாறு ரமேஷ், கைதியைத் தொலைத்த காவலர்களைப் பார்த்துப் பேசும் அந்த வசனம் ஒரு திரையரங்க தருணம், கேம்ப்பில் காவலர்களை மீறி நீதிபதியைச் சந்திப்பது ஒரு திரையரங்க தருணம் என்றால், அடுத்த விசாரணையில் அந்த நீதிபதி இடமாறுதலில் சென்றுவிடப் புதிய நீதிபதி கருணையில்லாமல் பேசுவது அடுத்த திரையரங்க தருணம்.
கிராமத்தில் அப்துல் தன்னுடைய காதலி கலையரசியின் அப்பாவைக் கோபத்தில் தள்ளிவிட்டு, அவரால் தாக்கப்பட்ட தன் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றிவிட்டு காலையில் கவலையுடன் வெளிவரும்போது தெரியவரும் கலையரசியின் அப்பாவுடைய மரணம் ஒரு திரையரங்க தருணம், கிளைமாக்ஸில் பேருந்துக்குக் கீழே சிக்கிய கலையரசி உயிருடன் இருக்கிறாளா என்பது ஒரு திரையரங்க தருணம்.
இஸ்லாமியச் சமூகத்தின் மீது திட்டமிட்டுக் கட்டமைக்கப்படும் வெறுப்பு, சமூகத்தில் எந்த அளவுக்கு ’நியூ நார்மல்’ ஆக பொதுப்புத்தி உள்வாங்கத் தொடங்கியிருக்கிறது என்கிற உண்மையை பட்டவர்த்தனப்படுத்தும் ஒரு படைப்பில், காவல்துறையின் பணியடுக்கில் கீழ்நிலையில் பணிபுரியும் காவலர்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதைத் திறந்து வைக்கும் ஒரு படத்தில், காவல் பணியில் உண்மையான பணி நிறைவு என்பது எதிலிருந்து கிடைக்கும் என்பதை விக்ரம் ஏற்ற கதிரவன் மற்றும் அவருடைய மனைவி கதாபாத்திரங்கள் வழியாக முன்மொழிகிறது இப்படம்.
இதில், நீதிமன்றங்கள் விசாரணை கைகளை அவர்கள் நிரபராதிகளாகவே இருந்தாலும் ‘வாய்தா’ என்கிற பெயரில் எவ்வளவு காலம் சிறையில் வாட வைக்கின்றன என்கிற நீதிமன்ற விசாரணை முறையின் போதாமையை மௌனமாகச் சாடும் படத்தில், இயல்பாகப் பூக்கும் காதலை இன்னும் கிராமிய வாழ்க்கை சாதியின் பெயரால் எப்படி நசுக்கிச் சிதைக்கிறது என்பதைச் சொல்லும் படத்தில், தன் வாழ்வின் சாபங்களுக்கெல்லாம் பெண்ணே காரணம் எனத் தப்பித்து வாழும் ஆண் மைய உலகை அமைதியாக அம்பலப்படுத்தும் ஒரு சமூகக் கதையமைப்பு கொண்ட படத்தை த்ரில்லர் திரைக்கதையாக மாற்றும்போது, அதில் எவ்வளவு திரையரங்க தருணங்களை உருவாக்க முடியும் என்பதற்கு ‘சிறை’ ஒரு சிறந்த உதாரணம்.
நல்ல கதை இருந்தும் சிறு படங்கள் இன்று திரையரங்கை விட்டு வந்த வேகத்தில் ஓட்டம் பிடிப்பதற்கு ‘திரையரங்க தருணங்கள்’ திரைக்கதையில் அமைக்கப்படாததே காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மாஸ் மசாலா படங்கள், நட்சத்திர நாயகன் மாஸ் என்ட்ரி (Mass Entry) கொடுத்து திரையில் தோன்றும் முதல் காட்சி அவரது ரசிகர்களுக்கு எல்லாக் காலத்திலும் சிறந்த திரையரங்க தருணமாக விளங்குகிறது. அப்படிப்பட்டக் காட்சிகளில் அவருடைய ரசிகர்கள் கூட்டாக அடிக்கும் விசில்களும் அரங்கம் அதிரும் கைத்தட்டல்களும் அந்தத் தருணத்தை மறக்க முடியாததாக மாற்றுவதை நீங்களும் உணர்ந்து ரசித்திருப்பீர்கள்.
மசாலா படங்கள் இதுபோன்ற தருணங்களைக் கொண்டே திரைக்கதை பின்னப்படுகின்றன. மாஸ் படங்களின் இடைவேளை திருப்பம் (Interval Block), கதையின் போக்கையே மாற்றும் ஓர் அதிரடியான திரையரங்க தருணமாக மாறிவிடுகிறது. இது ரசிகர்களைப் படத்தின் அடுத்த பாதிக்கு ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது.
அதேபோல் எதிர்பாராத திருப்பங்களும் (Unexpected Twist and turns) அட்டகாசமான திரையரங்க தருணமாக மாறிவிடுகின்றன. படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு நபர் வில்லனாக மாறுவது அல்லது இறந்ததாக நினைத்த கதாபாத்திரம் மீண்டும் வருவது போன்ற தருணங்களும் மசாலா படங்களில் அல்லது சட்டகப் படங்களில் திரையரங்க தருணமாக மாறிவிடுகிறது. இதைத் தாண்டி நகைச்சுவை காட்சிகள், அவற்றில் இடம்பெறும் வசனங்கள் கூட திரையரங்கம் அதிரும் வகையில் அனைவரும் ஒரே நேரத்தில் சிரிக்கும், கைத்தட்டல் வாங்கும் திரையரங்க தருணமாக மாறிவிடுவதும் உண்டு.
சிரிப்புக்குத் திரையரங்க தருணத்தை உருவாக்கும் ஆற்றல் இருக்கும்போது, கண்ணீருக்கு இருக்காத என்ன? ! ஒரு படத்தின் மிக முக்கியமான, சோகமான அல்லது வெற்றிகரமான காட்சியில், திரையரங்கு மொத்தமும் அமைதியாகி ரசிகர்களின் கண்களில் கண்ணீர் பெருகும் தருணமும் திரையரங்க தருணமாகிவிடும்.
ஒரு நல்ல திரையரங்க தருணத்தின் வீரியத்தை ரசிகர்கள் உணரச் செய்வதில், தொய்வு ஏற்படும் சமயத்தில் வரும் நம்பகமாகத் திருப்பம், அதில் நடிகர்களின் புத்திசாலித்தனமான நடிப்பு மற்றும் பேசும் வசனம், அந்தக் காட்சியை உயர்த்திப் பிடிக்கும், ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகிய அம்சங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
திரையரங்க தருணம் திரையரங்கில் ரசிகர்கள் அனைவராலும் ஒரு குழுவாக உணரப்படுவதற்கு, அவர்களை நோக்கித் திடீரென்று ஒரு காட்சி வீசுவதை விட, அதற்கு முன்பே ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு அக்காட்சியை இடம்பெறச் செய்யும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.



