சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வரவேற்கிறோம். இனி வரும் காலங்களில் எந்த பெயரும் சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு.என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, விசிக தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, “கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயர்கள் சாதிப் பெயர்களுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவர்கள் கொண்டிருந்த அடையாளத்தை பின்பற்றுவதால் சாதியை வளர்க்கிறோம் என்று ஆகாது.
கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை ‘ஜி.டி பாலம்’ என்று பெயர் வைத்து புதிய தலைமுறையிடம் கொண்டு போய் சேர்த்தால் மகிழ்ச்சி தான். ஆனால் ‘ஜி.டி.நாயுடு பாலம்’ என்ற பெயரில்தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்று அரசு ஒரு முடிவை எடுத்திருப்பதால், அது சாதியை வளர்ப்பதற்கானதாக இருக்காது என நம்புகிறோம்.
இனிவரும் காலங்களில் எந்தப் பெயரும் சாதி அடிப்படையில் இருக்கக் கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு. இன்னும் சில சாதிப் பெயர்களில் உள்ள “ன்” என்ற விகுதியை மாற்றி “ர்” விகுதியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். பின்னர் சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரிடம் நன்றி கூறினோம். நியமன தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.