திறமையான இந்தியர்களை ஜெர்மனியும் பிரிட்டனும் தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்1பி விசாவுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அந்நாட்டு அரசு திடீரென உயர்த்தியது. இந்திய மென்பொறியாளர்கள் அமெரிக்க நிறுவனங்களில் சேர்வதை தடுக்க மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது என கருதப்படுகிறது. அமெரிக்க அரசின் இந்த முடிவுக்கு அந்த நாட்டின் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, திறமையான இந்தியர்களை தங்கள் நாட்டுக்கு ஈர்க்க ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனியும் பிரிட்டனும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் அகெர்மான், தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புகள் ஜெர்மனியில் உள்ளதாகக் கூறி, இந்தியர்கள் ஜெர்மனிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ஜெர்மனியில் இந்தியர்கள் பணிபுரிய அழைப்பு விடுப்பதற்கு இது சரியான தருணம்.
ஜெர்மனியில் அதிக அளவில் பொருள் ஈட்டுபவர்களில் இந்தியர்கள் உச்சத்தில் இருக்கிறார்கள். ஜெர்மனியில் பணிபுரியும் இந்தியர்கள், ஜெர்மனியில் பணிபுரியும் ஜெர்மானியர்களைவிட அதிகம் பொருள் ஈட்டுகிறார்கள். உண்மையில் இது ஒரு நல்ல செய்தி. எங்கள் சமூகத்துக்கும் எங்கள் நாட்டுக்கும் இந்தியர்கள் அதிக பங்களிப்பை அளிப்பதாலேயே அவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். கடின உழைப்பின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். சிறந்த வேலைகள் சிறந்த நபர்களுக்குச் செல்வதிலும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
ஜெர்மனியின் கார்களைப் போன்றது எங்கள் நாட்டின் இடப்பெயர்வு கொள்கை. அது நம்பகத்தன்மை வாய்ந்தது, நவீனமானது, எதிர்பார்க்கக்கூடியது. குறுக்கும் நெடுக்குமாக பயணப்படாமல் நீங்கள் நேர்கோட்டில் செல்ல முடியும். நாங்கள் எங்கள் அடிப்படைக் கொள்கைகளை ஒரே இரவில் மாற்றுவதில்லை. அதிக திறமையுள்ள இந்தியர்களை ஜெர்மனிக்கு வரவேற்கிறோம். ஜெர்மனிக்கு வர நீங்கள் முடிவெடுத்தால் உங்களுக்கு ஆச்சரியமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.
இதேபோல், பிரிட்டனும் திறமையான இந்தியர்களுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. பிரிட்டன் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், “உயர் திறன் கொண்ட பணியாளர்கள் பிரிட்டனுக்கு வருவதற்கான வழிகளை அரசு எளிதாக்கும். அமெரிக்காவைப் போல முரண்பாடுகள் நிறைந்ததாக இல்லாமல், லண்டன் உலகளாவிய திறமைகளை வரவேற்பதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.