தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எடுத்து எரிவாயு சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் முறையை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கண்டறிந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வஞ்சிபாளையம் முருகம்பாளையத்தில் ஹன்க் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக், தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எரிவாயுவை பிரித்தெடுத்து, சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார்.
‘ஹன்க் காஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்பு அறிமுக நிகழ்ச்சி, அவிநாசி அருகே நேற்று நடந்தது. முதன்மை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் நடிகரும், ஹன்க்காஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்குநருமான சரத்குமார், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன் ஆகியோர் பங்கேற்று, புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கூறியதாவது: இயற்கையான முறையில், கார்பன் இல்லாத நிலையில் தண்ணீரை கொண்டு, அதிலிருந்து கிரீன் ஹைட்ரஜன் மூலம் நெருப்பை உருவாக்கி இதை தயாரித்துள்ளேன். சுமார் 20 ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாக இது சாத்தியப்பட்டுள்ளது. கார்பன் இல்லாத எரிபொருளாகவும், மிகவும் பாதுகாப்பானதாகவும் இது உள்ளது.
நாம் பயன்படுத்தும் ஒரு லிட்டர் குடிநீரில், 1,225 லிட்டர் ஹைட்ரஜன் எடுக்கலாம். இந்த ஹைட்ரஜனை கைராய்டு எலட்ரோலைட் மெம்ப்ரைன் இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுத்து, அதை சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் இருந்து பெறப்படும் காஸை, ஒரு குடும்பம் ஒரு மாத சமையலுக்கு பயன்படுத்தலாம்.
இதற்கான இயந்திரங்கள் இன்றைய நிலையில் ரூ.40 ஆயிரமாகும். இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக அங்கீகாரம் கோரி, மத்திய அரசிடம் விண்ணப்பித்ததுடன், மத்திய அரசின் எரிசக்தி துறையினரை சந்தித்து பல மணி நேரம் எடுத்துரைத்து, செயல்விளக்கங்களையும் காட்டியுள்ளோம்” என்றார்.
நிறுவனத்தின் முதன்மை இயக்குநரான நடிகர் சரத்குமார் கூறும்போது, “இந்த காஸ் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும். அங்கீகாரம் தொடர்பாக மத்திய அரசின் எரிசக்திதுறை அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். இதை வீடுகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களிலும் பயன்படுத்தலாம்.