தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் எதிர்காலத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமூகத்துக்கு தரப் போகின்ற முதலீடு இது என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: இனி தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37 ஆயிரத்து 416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினந்தோறும் காலையில் சூடாக, சுவையாக, சத்தான சாப்பிட்டு, கிளாஸ் ரூமுக்குள்ளே தெம்பாக நுழைய இருக்கிறார்கள். இது ஒரு சூப்பரான சோஷியல் இன்வெஸ்ட்மென்ட். எதிர்காலத்தில், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமூகத்துக்கு தரப் போகின்ற முதலீடு இது.
காலையில் இங்கே வந்து குழந்தைங்கள் கூட உணவு சாப்பிட்டவுடனே, இந்தக் குழந்தைகளைப் போலவே, எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! எப்படி இன்றைக்கு முழுவதும் நீங்கள் ஆக்டிவாக இருப்பீர்களோ, அப்படி எனக்கும் இது ஆக்டிவான டே தான்! ஆக்டிவான டே மட்டுமல்ல, மனதுக்கு மிகவும் நிறைவான நாள்.
காலை உணவுத் திட்டத்தால் இருபது இலட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால், இதைவிட மனநிறைவு என்ன இருக்க முடியம்? அடுத்து, இது மகிழ்ச்சிக்குரிய நாளும்கூட. ஏனென்றால், பஞ்சாப் முதல்வர், எனது இளம் நண்பர் பகவந்த் மான் இங்கே வந்திருக்கிறார். இதற்கு முன்பு, இப்போது நாடே திரும்பிப் பார்க்கின்ற புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு, டெல்லியின் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் வந்தார். இப்போது இந்த திட்டத்திற்கு பகவந்த் மான் வந்திருக்கிறார். தன்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி வருகை தந்திருக்கக்கூடிய பஞ்சாப் முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் – சேராது இயல்வது நாடு” என்று சொன்னார் வான்புகழ் வள்ளுவர். அதாவது, பசியும், பிணியும், பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடாக பாராட்டப்படும் என்று சொல்லியிருக்கிறார்.
வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக இன்றைய நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. கல்வி அறிவை வழங்குவதால் மட்டும் பள்ளிகள் இருக்கக் கூடாது, அவர்கள் வயிற்றுப் பசியையும் போக்கவேண்டும் என்று நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றபோது, சென்னை மாநகராட்சியில் படிக்கக்கூடிய, பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காமராசர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.
இதன் தொடர்ச்சியாக காலை உணவுத் திட்டத்தை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடங்கினோம். இந்தத் திட்டத்தை துவங்குவதற்குக் காரணம் என்னவென்றால், ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களில், சென்னை, அசோக் நகர் மகளிர் பள்ளிக்கு சென்றபோது, அங்கிருந்த மாணவிகளிடம், “காலையில் என்ன சாப்பிட்டீர்கள்?” என்று சாதாரணமாக கேட்டேன். ஆனால், நிறைய குழந்தைகள் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள்.
சில மாணவிகள், “டீ மட்டும் குடித்துவிட்டு வந்துவிட்டேன்” – “பன் சாப்பிட்டேன்” – இது போல சொன்னார்கள். இதை மனதில் வைத்துத்தான் காலை உணவுத் திட்டம் தேவை என்பதை அரசின் கொள்கையாகவே அறிவித்தேன். 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில், மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
முதல்கட்டமாக, 1,545 பள்ளிகளில், ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்தார்கள். பிறகு, 25.08.2023 அன்று, கருணாநிதி பிறந்த திருக்குவளையில், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்தோம். 2024-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளில், ஊரகப் பகுதிகளில் இருக்கக்கூடிய அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இதுவரை, 17 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வந்தார்கள். இந்தத் திட்டத்தின் அட்டகாசமான சக்சஸ் மற்றும் இது கொடுக்கக்கூடிய அபாரமான ரிசல்ட்டைப் பார்த்து, இனி, நகர்ப்புற பகுதிகளில் செயல்படுகின்ற 2 ஆயிரத்து 429 அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்கிறோம்.
இதனால், கூடுதலாக 3 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற இருக்கிறார்கள். கிராண்ட் டோட்டலாக சொல்லவேண்டும் என்றால், இனி தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37 ஆயிரத்து 416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினந்தோறும் காலையில் சூடாக, சுவையாக, சத்தான சாப்பிட்டு, கிளாஸ் ரூமுக்குள்ளே தெம்பாக நுழைய இருக்கிறார்கள்.
ஆண்டொன்றுக்கு 600 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இதை செலவு என்று நான் சொல்ல மாட்டேன். இது ஒரு சூப்பரான சோஷியல் இன்வெஸ்ட்மென்ட். எதிர்காலத்தில், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமூகத்துக்கு தரப் போகின்ற முதலீடு இது.
என்னரும் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை நம்பி, அவர்களின் திறமை மேல், அறிவு மேல், ஆற்றல் மேல் நம்பிக்கை வைத்து, தமிழ்நாடு அரசு இந்த முதலீட்டை செய்கிறோம். நீங்கள் எல்லோரும் நன்றாக படித்து, முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் பணியாற்றினால், அதுதான் இந்தத் திட்டத்தின் உண்மையான வெற்றி.
இன்னும் கொஞ்சம் இறுமாப்போடு சொல்ல வேண்டும் என்றால், இனிமேல், பள்ளிக்கு வருகின்ற குழந்தைகள், பசி காரணமாக வாடிய முகத்துடனும், சோர்வுடனும் இருக்க மாட்டார்கள். புன்னகையும், நம்பிக்கையும், ஆர்வமும், சுறுசுறுப்பும் நிரம்பிய முகங்களைத்தான் இனி பார்க்கப் போகிறோம்.
காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, நான் இதை க்ளோசா…மானிட்டர் செய்து கொண்டு வருகிறேன். மாநில திட்டக்குழு மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பசி இல்லாத நிலை, பிள்ளைகள் வயிறு நிறைகிறது என்று மட்டும் இந்தத் திட்டத்தை சிம்ப்பிளாக பார்க்க முடியாது. இதனால், உணவுண்ணும் பழக்க வழக்கங்களில் இம்ப்ரூவ்மெண்ட் வந்திருக்கிறது.
பாசிட்டிவான பழக்க வழக்கங்களை வளர்ப்பதில் பிள்ளைகள் ஆர்வம் காட்டுகிறார்கள். மற்ற குழந்தைகளுடன் ஈசியா, ஜாலியா பழகுகிறார்கள். குழந்தைங்களின் ஹெல்த் டெவலப் ஆகியிருக்கிறது. ஸ்கூலுக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள். க்ளாஸ் ரூமில் கவனம் மற்றும் ஈடுபாடு அதிகமாகி இருக்கிறது. வகுப்பில் தோழமை உணர்வு மேம்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருக்கிறது.
எதிர்பாராத பல நன்மைகளையும் இந்தத் திட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. காலை உணவை பள்ளிகளே வழங்குவதால், ஒரு குடும்பத்தில் அம்மா – அப்பா இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள் என்றால், அவர்களுடைய பணிச்சுமை குறைந்திருப்பதுடன், குழந்தைகள் ஸ்கூலில் வயிறார சாப்பிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையையும், நிம்மதியையும் தருகிறது.
அவ்வளவு ஏன்… டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2024 வரை, அரசுப் பள்ளிகளில், குழந்தைகளிடையே ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது. ஹாஸ்பிடலுக்குச் செல்வதும் குறைந்திருக்கிறது. இன்னும் சொல்கிறேன். காலை உணவுத் திட்டத்தால், அட்டெண்டன்ஸ் கூடியிருக்கிறது. கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று வாய்ப்புகள் அதுவும் குறைந்திருக்கிறது. இப்படி, நிறைய பாசிட்டிவாக இருப்பது ஆய்வு மூலமாக நமக்கு தெரிய வந்திருக்கிறது.
ஒரு திட்டம் மிக மிகச் சிறப்பானது என்றால், மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றுவார்கள். அப்படித்தான், காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்களும், பிற நாடுகளுமே கூட தொடங்கவும், செயல்படுத்தவும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கனடா போன்ற வளர்ந்த மேலை நாடுகளிலும், காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக நாம் இதை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம் என்பது நமக்கெல்லாம் இருக்கின்ற பெருமை.
இந்த நேரத்தில் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கின்ற மற்றொரு முக்கியமான திட்டத்தையும் சொல்ல விரும்புகிறேன். அது, “ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம். இந்த திட்டத்தால் என்ன பயன் என்றால், இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் முதல் பகுதியில், ஆறு மாதம் வரையிலான 14 ஆயிரத்து 901 குழந்தைகளில், 13 ஆயிரத்து 262 குழந்தைகளையும், இரண்டாம் பகுதியில், ஆறு மாதத்தில் இருந்து ஆறு வயது வரையிலான 92 ஆயிரத்து 15 குழந்தைகளில், 61 ஆயிரத்து 651 குழந்தைகளையும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம்.