No menu items!

சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு பதிலளிக்க அவகாசம்

சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு பதிலளிக்க அவகாசம்

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6 -ஆவது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16-ஆம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் கு.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த தீர்மானத்தால், இரண்டு மண்டலங்களிலும் பணியாற்றும் 2,042 நிரந்தர பணியாளர்கள், வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவார்கள். மாநகராட்சி தரப்பில்,1,953 தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த நிறுவன விதிகளின்படி பணியமர்த்தப்படுவார்கள் என கூறினாலும், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தொழிலாளர் நீதிமன்ற அனுமதியின்றி, தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநராட்சி தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர், பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில், 2000 பேர் தெருக்களில் போராடி வருகின்றனர். குப்பையைப் போல் அவர்கள் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது மாநகராட்சி தரப்பில், தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையைபுதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

பொதுமக்கள் பாதிப்பு: இதனிடையே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்குரைஞர் வினோத் என்பவர் அவசர முறையீடு செய்தார். இதனை மனுவாக தாக்கல் செய்தால் செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...