அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா – அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் விவாகாரத்துப் பெறப்போவதாக எழுந்தது உண்மையில்லை, புரளி என்று இருவரும் ஒன்றாகத் தோன்றி உறுதி செய்துள்ளனர்.
சில நாள்களாக பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்காத நிலையில், இந்த விவாகரத்துப் புரளி விஸ்வரூபம் எடுத்திருந்தது.
இந்த நிலையில்தான், மிச்சல் ஒபாமா தன்னுடைய சகோதரருடன் இணைந்து நடத்துக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின்போது, ஒபாமாவும் தோன்றி பேசினார்.
அப்போது, இருவரும் தங்களுக்கே உரிய நகைச்சுவை மற்றும் சாதாரண பேச்சு வழக்கில், தங்களுக்கு இடையே விவாகரத்து என்பது வெறும் புரளிதான், நாங்கள் நீடித்த, மிகவும் அன்பான வாழ்க்கையை தொடர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்துள்ளனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய மிச்சல், இவர் எனது கணவர் என்று அன்போடு கூறினார். அப்போது, மிச்சலின் சகோதரர் கிரெய்க், இருவரையும் ஆரத் தழுவினார். உங்கள் இருவரையும் ஒரே அறையில் இன்று பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது என கிரெய்க் கூற, அதற்கு சிரித்தபடி, மிச்சல், ஆமாம், எனக்குத் தெரியும். நாங்கள் விவாகரத்துப் பெறாவிட்டாலும், பெற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள் என்றார்.
முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் இறுதிச் சடங்கு மற்றும் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் மிச்சல் பங்கேற்காத நிலையில், விவாகரத்து புரளி எழுந்திருப்பது குறித்து மௌனம் கலைத்த ஒபாமா, இது பற்றி வெளியில் பேச்சு இருப்பது எனக்கு முதலில் தெரியாது. இது தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும்போதும் தெரியாமலே இருந்துள்ளது. பிறகு ஒருவர் என்னிடம் இதுபற்றி கேட்டபோதுதான், எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்றேன்? என்கிறார்.
அந்தச் சம்பவம் பற்றி விவரித்த கிரெய்க், விமான நிலையம் ஒன்றில், தனி நபர் ஒருவர், ஒபாமாவை பார்த்து என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கோபமாகக் கேட்டுள்ளார். அப்போதுதான் இந்த விவகாரம் ஒபாமாவுக்குத் தெரிந்துள்ளது.
அடுத்து பேசிய மிச்சல் ஒபாமா, என் வாழ்நாளில், ஒரு கணம்கூட, விவாகரத்துப் பற்றி நான் சிந்தித்ததே கிடையாது. எவ்வாறு என்னுடைய கணவரை விட்டுப் பிரிவதைப் பற்றி நினைப்பேன். நாங்கள் இருவரும் மிகவும் கடினமான நேரத்திலும் ஒன்றாக இருந்திருக்கிறோம். மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்திருக்கிறார்.