No menu items!

கூமாபட்டியை டிரெண்டாக்கி வருத்தப்பட்ட தங்கபாண்டி

கூமாபட்டியை டிரெண்டாக்கி வருத்தப்பட்ட தங்கபாண்டி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூமாபட்டி கிராமம் இணையதளத்தில் டிரெண்டாகி உள்ளது.

இதையடுத்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக அந்த கிராமத்துக்கு படையெடுத்து வரும் நிலையில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ரூ.10 கோடி ஒதுக்கியும் கூட பிளவக்கல் பெரியார் அணை மேம்படுத்தப்படவில்லை என கூமாபட்டியை டிரெண்ட்டாக்கிய இளைஞர் வருத்தப்பட்டர். இதையடுத்து இன்று விருதுநகர் கலெக்டர் குட்நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார்.

கூமாபட்டி.. கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், திரெட்ஸ் என்று அனைத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகி வருகிறது. இந்த கூமாபட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்புக்கு அடுத்து அமைந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்து கூமாபட்டி கிராமம் உள்ளது. இந்த dark_ night_ tn84 என்ற இன்ஸ்டா ஐடியில் தங்கபாண்டி என்பவர் தொடர்ந்து கூமாபட்டி பற்றி வீடியோ வெளியிட்டு வந்தார். கூமாபட்டி என்பது அவரது சொந்த ஊராகும். அந்த கிராமத்தில் உள்ள அணை, கிணறு மற்றும் இயற்கை சூழலை வீடியோவாக தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

அந்த வீடியோக்களில் அவர் “மன அழுத்தமா? விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க.. லவ் பெயிலியரா? தேர்வில் தோல்வியா? கவலையை விடுங்க.. கூமாப்பட்டிக்கு வாங்க.. கூமாபட்டி ஒரு தனித் தீவு… இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்..” என்று அவர் கூறினார். இது டிரெண்ட்டானது.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்கள் கூமாபட்டி நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். இயற்கையை ரசிக்கும் இளைஞர் படைகள் கூமாபட்டி நோக்கி அணிவகுக்க தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் கூமாபட்டி கிராமத்தை டிரெண்ட்டாக்கிய இளைஞர் நேற்று தனது வருத்தத்தை பதிவு செய்தார். பிளவக்கல் பெரியாறு அணையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் பணி எதுவும் நடக்கவில்லை என்று அவர் கூறினார்.

இதுபற்றி அவர், ‛‛பிளவக்கல் அணை கடந்த 5 ஆண்டுகளாக முடங்கி உள்ளது. இந்த அணைக்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உள்ளே போய் பாருங்கள். எந்த மேம்பாட்டு பணியும் நடக்கவில்லை. தமிழக பத்திரிகையாளர், அரசு அதிகாரிகள் பிளவக்கல் அணை எப்படி உள்ளது? என்ன செய்துள்ளனர்? அணையை புதுப்பித்து உள்ளார்களா? என்பதை நீங்களே பாருங்கள். தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது

தமிழகத்தில் இருந்து கூமாபட்டிக்கு இன்று படையெடுத்து வருகிறார்கள். ஆனால் கூமாபட்டி முடங்கி இருக்கிறது. ஒரு பக்கம் பார்த்தால் குளிப்பதற்கு திறந்து இருந்தாங்க. ஆனால் இன்று காலையில் (அதாவது நேற்று) மூடிவிட்டார்கள். கூமாபட்டி உலகளவில் டிரெண்ட்டாகி வரும் நிலையில் குளிப்பதற்கான பகுதியை மூடிவிட்டனர்” என்றார்.

இந்நிலையில் தான் ரூ.10 கோடி மேம்பாட்டு பணி தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் முக்கிய விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டரின் எக்ஸ் வலைதள பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛தமிழ்நாடு முதலமைச்சர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் பிளவுக்கல் பெரியாறு அணையில்ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...