ஒரு குடிகாரன் நாளில் பாதி நேரம் ஒயின் ஷாப் டேலிளீலே கிடந்து தனது குழந்தைகளை மறக்கிறான். அவன் ஒரு நாள் குடித்து விட்டு செய்யும் சேட்டையால் கடத்தப்பட்ட ஒரு பெண் குழந்தையை போலீஸ் கண்டு பிடிக்கிறது. அந்த ஒரு நாளைக்குள் அந்த குடிகாரன் சந்திக்கும் மனிதர்களும் பிரச்சனைகளுமே முழு படமாக விரிகிறது.
படத்தில் புதுமுகமாக பிரிதிவிராஜ் ராமலிங்கம் நடித்திருக்கிறார். மனிதர் அழுக்கு முகத்துடன் தாடியுடன் படம் நெடுகிலும் வந்தாலும் பல உணர்வுகளை முகத்தில் காட்டும் விதம் படத்தில் உயிர்ப்பாக இருக்கிறது. வாடகை வீட்டு ஓனருடன் சண்டைக்குப் போவதும், கல்லூரி காதலியின் வீட்டுக் கதவை தட்டி பிறந்த நாள் கேக் வெட்டச் சொல்லி ரகளை பண்ணுவதும், கணவன் முருகதாஸ் போலீஸ் நிலையம் போவதும் காமெடி கலாட்டாவுடன் தொடங்குகிறது.
மன நந்தினி, காளி வெங்கட், விஜய் முருகன், வேல ராமமூர்த்தி, பகவதி பெருமாள் ஆகியோர் கதாபாத்திரத்துடன் அழுத்தமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
குடிக்கும் காட்சிகள் ஆங்காங்கா இருந்தாலும், கடத்தப்பட்ட பெண் குழந்தை என்ன ஆனது என்கிற பதட்டத்தை படம் முழுவது வைத்து கதையோடு நம்மை ஒன்ற வைத்து விட்டார் புதுமுக இயக்குனர் என்.அரவிந்தன். கதைக்கு ஏற்ற லொகேஷன், திருப்பூரில் வேலை செய்யும் அடிதட்டு மக்களின் அன்றாட நிலை எல்லாமே கதைக்கள் வந்து போவது யாதார்த்தமாக இருக்கிறது.
இன்ஸ்பெக்டராக வரும் கலை இயக்குனர் விஜய் முருகன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காளி வெங்கட் நிறைவு. வேல ராமமூர்த்தி சொல்லும் தத்துவம் மனதைத்தொடுகிறது. குடிகாரர்களுக்கு அது புதிய போதையை ஏற்றும். மதன் குணதேவ் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் கச்சிதம். கோவிந்த் வசந்தாவின் இசை இனிமை.
எந்தவித முன்னணி நாயகர்களும் கதாநாயகிகளும் இல்லாமல் நம்மை இரண்டு மணிநேரம் கட்டிப் போட்டு வைத்திருந்தது ஆச்சரியம்தான். கார்த்திக் நேத்தா வசனம் மனதில் அறைகிறது. பிரமாண்ட படங்களுக்கு மத்தியில் வலியான படம்.