சுவிஸ் வங்கிகளில் இந்திய பெருமுதலாளிகள் செலுத்திய பணம் 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்குகள்(சுமார் ரூ.37,600 கோடி) அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமான உயர்வு என சுவிட்சர்லாந்து மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
சுவிட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்களின் பணம் மற்றும் நிதி சாா்ந்த விவரங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக ரகசியம் காக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக சா்வதேச நாடுகளை சாா்ந்த பணம் படைத்த பெருமுதலாளிகள் சுவிஸ் வங்கிகளில் கணக்குகளை வைத்துள்ளதாக தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா்கள் சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும், கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த வங்கிகளில் இந்தியா்களின் பணம், 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்து ரூ.30,500 கோடிக்கு மேல் சென்றதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
இந்தியாவில் உள்ள பெருமுதலாளிகள் தங்களது பணத்தை சுவிஸ் வங்கிகளில் செலுத்தி வருவது நாட்டின் முக்கியப் பிரச்னையாக பேசப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் காலங்களிலும் சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்பது முக்கிய வாக்குறுதியாக அளிக்கப்படும் அளவிற்கு இந்தப் பிரச்னை விவாதப் பொருளாக இருந்து வந்தது.
இதனிடையே, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியா்கள் செலுத்தி உள்ள பணம் குறித்த விவரங்களை மத்திய அரசு கோரியது. அதனடிப்படையில், சுவிஸ் வங்கிகளில் பணம் செலுத்தி உள்ளவா்களின் விவரங்களை மூன்று பட்டியல்களாக இந்திய அரசிடம் சுவிட்சா்லாந்து நாட்டின் மத்திய வங்கி ஒப்படைத்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.20,700 கோடியாக இருந்த இந்தியர்களின் சுவிஸ் வங்கிகளில் பணம் இருப்பு 2021 இல் 50 சதவிகிதம் அதிகரித்து அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது 2021-இல் தனிநபா் பண இருப்பு, நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் சாா்ந்த இருப்பு உள்பட அனைத்துப் பிரிவுகளின் கீழான பணம் புதிய உச்சமாக இந்திய மதிப்பில் ரூ.30,500 கோடிக்கு மேல் அதிகரித்த நிலையில், 2022-ஆம் ஆண்டு இறுதியில் 11 சதவீதமாக சரிந்து ரூ.30,000 கோடியாக குறைந்தது. நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023 இல் 70 சதவீதம் சரிந்தது.
இந்தியா்களின் பணம் அதிகபட்சமாக 2006-ஆம் ஆண்டு ரூ.68,912 கோடியாக இருந்தது. அதன் பிறகு, 2011, 2013, 2017, 2020, 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சமாக ரூ.11,026 கோடிக்கு குறைந்தது. 2018 இல் 11 சதவீதமும், 2017 இல் 44 சதவீதமும் குறைந்த பிறகு 2019 இல் 7 சதவீதம் அதிகரித்தது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் தனிநபர், கிளை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூலம் இந்தியர்கள் செலுத்தியுள்ள பணம் ஒரே ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 600 கோடியாக உள்ளது.
இது தனிநபர் வைத்துள்ள பணத்தில் இந்திய மதிப்பில் வெறும் 11 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 675 கோடியாக உள்ளது. இதில், அறக்கட்டளைகள் மூலம் ரூ.434 கோடியும், பத்திரங்கள் உள்ளிட்ட நிதி ஆவணங்கள் மூலம் ரூ.1,431 கோடியும் சுவிஸ் வங்கிகளில் இந்தியா்களின் பணம் இருப்பு உள்ளது.
இந்தியர்களின் பணம் இருப்பு இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
மேலும், இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமான உயர்வாக இருப்பினும், மொத்த நிதியில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உயர்ந்துள்ளது. இது இந்திய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான தரவு பகிர்வாக இருந்தாலும் வரி ஆய்வுக்கு உட்பட்டது.
ஒட்டுமொத்தமாக, சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளிநாட்டவா்களின் பணம் 2024-ஆம் ஆண்டில் ரூ.63,611.58 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள வெளிநாட்டினரின் பட்டியலில் பிரிட்டன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகள், ஜொ்மனி, பிரான்ஸ், ஹாங் காங், லக்சம்பர்க், சிங்கப்பூா், பஹாமாஸ், குர்ன்சி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. பட்டியலில் 2022-ஆம் ஆண்டு 44-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 67 வது இடத்திலும் 2024 ஆம் ஆண்டில் 48-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
வரி மோசடி மற்றும் ஏய்ப்புக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவை ஆதரிக்கும் சுவிஸ் வங்கி, இந்தியாவில் உள்ள பெருமுதலாளிகள் சுவிஸ் வங்கியில் செலுத்தியுள்ள பணத்தை ‘கருப்புப் பணம்’ அல்லது ‘சட்டவிரோத நிதி’ என்று கருத முடியாது. அதேபோல், மூன்றாம் நாடுகள், நிறுவனங்களின் கீழ் சுவிஸ் வங்கிகளில் இந்தியா்கள் செலுத்தியிருக்கும் பணமும் இதில் சோ்க்கப்படவில்லை என்று சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
வரி விவகாரங்களில் சுவிட்சர்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே தானியங்கி தகவல் பரிமாற்றம் 2018 முதல் நடைமுறையில் உள்ளது. இதனடிப்படையில் 2018 முதல் சுவிஸ் நிதி நிறுவனங்களில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து இந்திய பெருமுதலாளிகள் பணம் வைப்பு குறித்த தகவல்களை முதன்முறையாக 2019 செப்டம்பர் இல் இந்திய அதிகாரிகளுக்கு அளித்தது.
மேலும் இது தொடர்பான தகவல்களை ஒவ்வொரு ஆண்டும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.