சுனிதா வில்லியம்ஸை விண்வெளியில் இருந்து பூமிக்கு கொண்டுவருவதற்காக பால்கன் 9 ராக்கெட் இன்று காலை சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் இருவரும் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
இருவரும் 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.
தொடர் தாமதங்கள் காரணமாக 10 நாட்கள் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்யச் சென்ற சுனிதா வில்லியம்ஸும், பேரி வில்மோரும் சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கி உள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை பூமிக்கு அழைத்து வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் என்டூரன்ஸ் விண்கலம் கடந்த 12-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் விண்கலம் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இருவரை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் பணியில் இறங்கியது. இதற்காக நேற்று முன்தினம் பால்கன் 9 விண்கலம் 4 விஞ்ஞானிகளுடன் சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பால்கன் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதில் உள்ள ஹைட்ராலிக் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதால் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பால்கன் 9 ராக்கெட் இன்று காலை சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டது.