No menu items!

முட்டை தினம் –  மஞ்சள் கரு ஆபத்தா?

முட்டை தினம் –  மஞ்சள் கரு ஆபத்தா?

இன்று உலக முட்டை தினம். குழந்தைகள் முதல் முதியோர் வரை, எளியவர் முதல் பெரும் செல்வந்தர் வரை அனைவரும் உண்ணத்தகுந்த எளிமையான சத்துள்ள உணவு, முட்டை. எந்த முட்டையை எப்படி சாப்பிட வேண்டும்? முட்டையின் மஞ்சள் கரு ஆபத்து என சொல்லப்படுவது உண்மையா? அரசு பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தரும் டிப்ஸ் இங்கே…

பறவை இனங்களைப் பொருத்தவரை அவற்றுக்கு மனித இனங்களின் பெண்களைப் போலவே சினைப்பையில் இருந்து சினைமுட்டை வெளியேறும். மனித இனத்தில் பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை ஒரு முட்டை வெளியேறுகிறது. அதை ஆணின் விந்தணு கருவுறச் செய்தால், கரு தாயின் கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டு தாயிடம் இருந்து சத்துகள் / ரத்தம் / ஆக்சிஜனை பெற்று சிசுவாக வளர்கிறது. ஆனால், கோழி இனத்தில் அதன் முட்டை ஒவ்வொரு நாளும் வெளியேற்றப்படுகிறது. காரணம், பறவை இனத்திற்கு சிசுவை அதன் கர்ப்பபையில் வைத்து வளர்க்குமாறு இயற்கை இல்லை. மாறாக, அதன் குஞ்சு தாயின் உடலுக்கு வெளியே வளர்ந்து உயிர்பெற்று வருமாறு அதன் இயற்கை உள்ளது.

மனித இனத்தைப் பொருத்தவரை பெண்ணின் கர்ப்பப்பையில் கரு உண்டாக ஆணின் விந்தணு அவசியம். ஆனால், பறவையினங்களைப் பொருத்தவரை, சேவலுடன் கோழி இணை சேர்ந்தாலும் சேராவிட்டாலும் தினந்தோறும் முட்டை போட்டுக் கொண்டே இருக்கும். சேவலுடன் இணை சேர்ந்த பின் இடப்படும் முட்டையில் (விந்தணு + முட்டை = கரு) இருக்கும். இது குஞ்சு பொரிக்கும். இணை சேராமல் போடப்படும் முட்டையில், சினை முட்டை மட்டும் இருப்பதால் அது குஞ்சு பொரிக்காது.

அதனாலேயே கோழிக்குஞ்சு வளர்வதற்கு ஏற்ற அத்தனை சத்துகளும் உணவும் முட்டையில் வைத்து, ஒரு தோடு போன்ற பொருளால் கடினமாக பேக்கிங் செய்யப்பட்டு இடப்படுகிறது. இந்த முட்டையை சரியான வெப்பத்தில் அடைகாத்தால் குஞ்சு பொரிக்கும். அதில் இருந்து கோழிக் குஞ்சு வெளியே வரும்.

இவ்வாறாக நடுவில் மஞ்சள் கரு, அதற்கு மேல் வெள்ளைக் கரு கோட்டிங், அதற்கு மேல் கடினமான ஓடு என்று வெளியேறும் இந்த முட்டையின் வெள்ளைக் கருவை மட்டுமே உண்ண வேண்டும் என்றும் மஞ்சள் கருவை தீண்டுவது தவறு என்றும் கூறப்படுவது அபத்தமானது.

முட்டையின் மஞ்சள் கருவை தூரப்போட்டு விட வேண்டும் என்று கூறுவது அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் பிழையான அறிவுரையாகும். பழங்களை தோலை மட்டும் சாப்பிட வேண்டும், உள்ளே உள்ள பகுதியை தூக்கி எரிந்து விட வேண்டும் என்று யாரும் கூறினால் ஏற்போமா?

ஐந்தறிவு மட்டும் பெற்ற அஃறிணை உயிரினமான கோழி, தனது கோழிக் குஞ்சு உயிர் பிழைக்க, எப்படி மனிதத் தாய் தனது பிள்ளைக்கு உணவை கரிசனத்துடன் பேக் செய்து அனுப்புவாளோ, அதைப் போல தனது உடலில் இருந்து பல சத்துகளை அந்த முட்டைக்குள் வைத்து பேக் செய்கிறது. அதில், அதாவது முழு முட்டையில் மனிதனின் தேக நலனுக்கும் இன்றியமையாத தேவையான புரதம் (புரோட்டீன்), கொலஸ்ட்ரால், கொழுப்புச் சத்து இருக்கிறது.

நமது உடலில் வளர்சிதை மாற்ற விளைவுகளுக்கும்; செல்கள், திசுக்கள், தசைகள், எலும்புகளின் புணர் நிர்மானத்திற்கும்; உடலில் ஏற்படும் காயங்கள் (உள் காயங்கள், வெளிக் காயங்கள்) ஆறுவதற்கும் புரதச்சத்து தேவை. முட்டையில் உடலால் மிக எளிதாக முழுமையாக கிரகிக்கக் கூடிய அளவில் புரதச்சத்து நிரம்பியுள்ளது.

நமது உடலில் இருக்கும் ட்ரில்லியன் கணக்கான செல்களின் வெளிப்புறச் சுவர் – கொழுப்பினால் ஆனது. நமது மூளையில் முக்கால்வாசி கொழுப்புதான். எனவே, நமக்கு கொழுப்பு சத்து தேவை.

சரி, கொலஸ்ட்ரால்…

கொலஸ்ட்ரால் என்றாலே மாரடைப்பு வந்துவிடும் என்ற அச்சம்… எனவே, கொலஸ்ட்ரால் என்றால் பயம். முட்டையின் மஞ்சள் கரு மேல் மட்டும் பழி வந்ததுக்கு அதில் கலந்திருக்கும் கொலஸ்ட்ரால் மட்டுமே காரணம்.  கொலஸ்ட்ராலுக்கு பயந்து முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உண்ணும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், உண்மை என்ன?

கொலஸ்ட்ராலும் நம் உடலுக்கு இன்றியமையாத தேவையான சத்து. நமது ஒவ்வொரு செல்களின் பாதுகாப்பு அரண்களான ப்ளாஸ்மா மெம்ப்ரேன் எனும் சுவர் பாஸ்ஃபோ லிபிட் எனும் கொலஸ்ட்ரால் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் உயிர் பிழைக்க உதவும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அனைத்துக்கும் கொலஸ்ட்ரால் தேவை. நம் இனம் தளைத்தோங்க உதவும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கு, அதாவது ஆண்மைக்கும் பெண்மைக்குமான ஹார்மோன்கள் உருவாவதற்கு கொலஸ்ட்ரால் தேவை.

இது ஒருபக்கம் இருக்க, முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் மட்டுமல்ல விட்டமின் ஏ (கண் நலம்), கால்சியம் / விட்டமின் டி (எலும்பு நலம்), பொட்டாசியம் / மெக்னீசியம் (இதய நலம்), விட்டமின் பி6 / பி12 (நரம்பு மண்டல நலன்) ஆகிய அனைத்து நல்லவைகளையும் பேக் செய்து வைத்துள்ளது தாய் கோழி. இத்தனை இருக்கும்போது அதில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்ற ஒரு காரணத்தைக் கூறி மஞ்சள் கருவை குப்பையில் வீசுவது சரியல்ல.

மேலும், முழு முட்டை மூலம் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலினால் மாரடைப்பு மரணங்கள் அதிகமாகின்றன என்பதற்கான திடகாத்திரமான அறிவியல் சான்றுகளும் இதுவரை இல்லை. மருத்துவ நூல்களிலும் முட்டையின் மஞ்சள் கருவை ஒதுக்கிவிட்டு பரிந்துரை செய்யும் வழிகாட்டுதல்கள் காணப்படவில்லை.

மேலும், மூளை வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் தேவையான கோலின், நமது உடலால் சமைக்க இயலாத முக்கியமான அமினோ அமிலங்கள் அனைத்தும் முழு முட்டையில் அதிகமாக நிரம்பியுள்ளன. எனவே, முட்டை என்றால் மஞ்சள் கருவுடன் கூடிய முழு முட்டையை உண்பதே சரி.

நான் கடந்த ஏழு வருடங்களாக ஒரு வேளை உணவாக மூன்று முட்டைகள் சாப்பிட்டு வருகிறேன். முட்டைகளில் புரதமும் கொழுப்பும் உள்ளதால் வயிறு நன்றாக நிரம்பி பசி உணர்வு கட்டுப்படுகிறது. அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்ற நிலை இருப்பதில்லை.

எல்லாவற்றையும்விட முக்கியம் முட்டையில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அறவே இல்லை. எனவே, எடையைக் குறைக்க நினைப்போர் தாரளமாக தாங்கள் உண்ணும் காலை உணவான இட்லி தோசைக்குப் பதிலாக மூன்று முழு முட்டைகளை தாங்கள் விரும்பிய விதங்களில் உண்பது நல்ல பலன் அளிக்கக்கூடும்.

குறிப்பாக முதியோர்களுக்கு இளையோரை விட புரதத்தின் தேவை அதிகமென்பதால் நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று முட்டைகள் சாப்பிட்டு புரதச்சத்துத் தேவையை அடைய முடியும்” என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...