No menu items!

கூவத்தூர் பார்முலா: நெல்லை மேயர் பதவி தப்பியது எப்படி?

கூவத்தூர் பார்முலா: நெல்லை மேயர் பதவி தப்பியது எப்படி?

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் ஒரு கவுன்சிலர்கூட மாநகராட்சிக்கு வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

நெல்லை பிரச்சினையின் பின்னணி என்ன?

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில், திமுகவினர் 44 வார்டுகளிலும், திமுக கூட்டணிக் கட்சியினர் 7 வார்டுகளிலும் கவுன்சிலர்களாக உள்ளனர். திமுக கவுன்சிலர்களில் பெரும்பகுதியினர், கட்சியின் முன்னாள் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம் பதவிக்கு வந்தவர்கள். எனவே, அவர்கள் தற்போது வரை அவருக்கு விசுவாசமாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில், மேயர் சரவணன் பதவிக்கு வந்த பிறகு, அவருக்கும் அப்துல் வகாபுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இவர்களுடைய மோதல் போக்கால் எம்எல்ஏ ஆதரவு திமுக கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தும், வளர்ச்சிப் பணிகளை முறையாக செய்யவில்லை என்று கூறியும் திமுக கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தினர்.

நெல்லை மேயரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் பலர் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்தும் முறையிட்டனர். மேயரை மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதினர். எல்லாவற்றுக்கும் உச்சமாக திமுக மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் முயற்சியிலும் திமுக கவுன்சிலர்களே இறங்கினர்.

இதனையடுத்து இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஈடுபட்டார்.  ‘தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ள மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும்’ என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால், அமைச்சரின் சமரசத்தை திமுக கவுன்சிலர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தங்கம் தென்னரசு இரு தரப்பினரிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினை தீராத நிலையில், இந்த விவகாரத்தில் பிரச்சினையைத் தூண்டுவதாகத் தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் பவுல்ராஜ், மன்சூர், ரவீந்தர், கவுன்சிலர் இந்திரா மணியின் கணவர் சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனாலும் பிரச்சினை முடியவில்லை.

இதற்கிடையில், மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்டு, மாநகராட்சி ஆணையர் தாக்கரேவிடம் கடந்த மாதம் கடிதம் கொடுத்தனர். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஜன. 12ஆம் தேதி நடைபெறும் என்று ஆணையர் அறிவித்தார்.

இதனையடுத்து, திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக கவுன்சிலர்களை அழைத்து மீண்டும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம். மைதீன்கான், அப்துல்வகாப் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என்று கவுன்சிலர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் கவுன்சிலர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும் தெரிகிறது. மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால், அது திமுக அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ஆனாலும், எதிர்ப்பு கவுன்சிலர்கள் இறங்கி வராததால், திமுக மேயர் பதவி தப்புமா என்ற எதிர்பார்ப்புடனே இன்று நெல்லையில் மக்கள் நாளைத் தொடங்கினர்.

மேயர் பதவி தப்பியது எப்படி?

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதையடுத்து, இன்று காலை 11 மணிக்கு மாமன்ற கூட்டத்தில் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நெல்லை மாநகர ஆணையாளர் தாக்கரே சுபம் ஞான தேவராவ் மாமன்ற கூட்ட அரங்கிற்கு காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மாமன்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தாக்கரே சுபம் ஞான தேவராவ் தெரிவித்துச் சென்றார்.

அதன்படி, 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் ஆரம்பமான நிலையில் ஒரு கவுன்சிலர்கூட மாநகராட்சிக்கு வரவில்லை. அரைமணி நேரம் ஆகியும் எந்த ஒரு கவுன்சிலரும் வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது. இதனை ஆணையர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். போதிய ‘கோரம்’ (உறுப்பினர்கள் பலம்) இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது என்றார். மேலும், மாமன்ற விதிப்படி அடுத்த ஓராண்டுக்கு மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இயலாது என்றும் கூறினார்.

திமுக கவுன்சிலர்கள் எங்கே போனார்கள்?

ஆணையர் அறிவித்தபடி இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், திமுக கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று மீண்டும் இறங்கினார்.

“அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் விருதுநகரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே,கூடுதல் உடைகளை எடுத்துக்கொண்டு அப்துல்வகாப் எம்எல்ஏவின் அலுவலகத்துக்கு வாருங்கள்” என திமுக கவுன்சிலர்கள் 20 பேருக்கு தொலைபேசியில் நேற்று அழைப்புகள் சென்றன.

இதையடுத்து, மண்டலத் தலைவர்கள் மகேஸ்வரி (திருநெல்வேலி), ரேவதி (தச்சநல்லூர்), இக்லாம்பாசிலா (மேலப்பாளையம்) மற்றும் கவுன்சிலர்கள் சிலர் நேற்று காலை எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்து விருதுநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதேநேரத்தில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தனியாக விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், குழப்பம் ஏற்பட்ட நிலையில், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரிலேயே, நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஆலோசிக்க அவர்களும் விருதுநகருக்கு சென்றதாகத் தகவல் வெளியானது.

விருதுநகருக்கு இரு பிரிவாக அழைத்துச் செல்லப்பட்டுள்ள திமுக கவுன்சிலர்கள் இன்று மாலை வரை அங்கேயே தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் பங்கேற்க வாய்ப்புகள் இல்லை என்று திமுக வட்டாரங்கள் இன்று காலையிலேயே தெரிவித்தன. இதனையடுத்து, ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்களை பங்கேற்க விடாமல் செய்யும் வகையில், அவர்கள் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்’ என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...