No menu items!

சரத்பாபு மரணம் – அது என்ன Multiple myeloma நோய்? Doctor Explains

சரத்பாபு மரணம் – அது என்ன Multiple myeloma நோய்? Doctor Explains

நடிகர் சரத்பாபு மறைவு தொடர்பாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘மல்டிபிள் மைலோமா பாதிப்பு காரணமாக உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழந்து’ சரத்பாபு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. சரத்பாபுவுக்கு இந்த பாதிப்பு இருந்ததை நடிகை சுஹாசினியும் உறுதிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  மல்டிபிள் மைலோமா என்பது என்ன? இது எனலாம் ஏற்படுகிறது?

இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பார்கவி இளங்கோவன் அளித்த பேட்டி இங்கே…

“புற்றுநோய் என்பது நமது உடலுறுப்புகளிலுள்ள சிலவகைச் செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்து பெருகி உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் ஒரு நோயாகும்.  

நமது உடல் உயிரணுக்களால் ஆனது. உடலில் செல்கள் வளர்ந்து பின்னர் ‘செல் பிரிதல்’  முறை மூலம் உடலுக்குத் தேவையான புதிய செல்கள் உருவாகும். அவ்வாறு உருவான செல்கள் நாள்பட முதிர்ந்து அல்லது சிதைந்து இறந்துவிடும், அவற்றின் இடங்களில் புதியசெல்கள் உருவாகும். இவ்வாறு தொடர்ந்து நிகழ்வதால்தான் மனிதவுடல் உயிர்ப்புடன் இருக்கிறது.

சில நேரங்களில் இந்த தொடர் சங்கிலி நிகழ்வு உடைந்து, ஒரு செல் மட்டும் தோன்றவேண்டிய இடத்தில் ஓராயிரம் செல்கள் தோன்றிப் பெருகலாம். இவ்வாறு, வரம்பின்றிப் பெருகும் செல் குவியங்கள் திசுக் கட்டிகள்  அல்லது புற்றுக்கட்டிகள் எனப்படும். இப்படி செல்கள் பல்கி பெருகி உருவாகும் புற்றுக்கட்டிகள் அருகிலுள்ள திசுக்களுக்கும் பரவும் அல்லது படையெடுக்கும். உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் சென்று புதிய புற்றுக்கட்டிகளை உருவாக்கலாம்.

புற்றுநோயின் நிலையைப் பொறுத்து பல்வேறு வகைகளாக பிரிக்கப்படுகிறது. புற்றுநோய் செல்கள் உருவாகவில்லை என்றாலும் உடல் உறுப்புகளில் உள்ள அசாதாரண செல்கள் புற்றுநோய் உயிரணுக்களாக மாறும் ஆற்றலைக் கொண்டிருக்கக்கூடும். இது நிலை ஜீரோ (0).

நிலை ஒன்று என்பது புற்றுநோய் உடல் உறுப்பில் ஒரு பகுதியில் மட்டுமே உருவாகியிருக்கும். இது புற்றுநோயின் ஆரம்ப கட்டம்.

நிலை இரண்டு என்பது புற்றுநோய் முதல் கட்டத்தை விட பெரிதாக வளர்ந்துள்ளது; அதேநேரம் மற்ற பகுதிக்கு பரவவில்லை.

இரண்டாம் நிலை கடந்து புற்றுநோய் கட்டியின் தாக்கம் அருகிலுள்ள பகுதிக்கும் பரவும் நிலை மூன்று.

நிலை நான்கு என்பதுதான் இறுதிகட்டம். இந்த நிலையில் புற்றுநோய் கட்டியானது பிற உடல் பாகங்களுக்கும் பரவி இருக்கும்.

இந்த ஐந்து நிலைகளில் எந்த நிலையில் ஒருவருக்கு புற்றுநோய் தாக்கம் கண்டுபிடிக்கப்படுகிறது, சிகிச்சை தொடங்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் மல்டிபிள் மைலோமா. இது உடலின் பிளாஸ்மா (குருதிநீர்) அணுக்களில் ஏற்படும் புற்றுநோய். இந்த அணுக்கள் பொதுவாக எலும்பு மஜ்ஜையில் காணப்படும். எலும்பு மஜ்ஜையில் பிளாஸ்மா அணுக்களின் குவிதல் காரணமாக மல்டிபிள் மைலோமா ஏற்படுகிறது. இது இரத்த அணுக்களின் உற்பத்தியை பாதிக்கக்கூடியது.

எதனால், மல்டிபிள் மைலோமா ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் இன்னும் ஆராய்ச்சிகளால் உறுதி செய்யப்படவில்லை. பொதுவாக புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது என்பதிலேயே உடல் பருமன், புற்று நோய் குடும்ப வரலாறு உட்பட ஐந்து சதவிகித காரணங்கள்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீது 95 சதவிகிதம் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது.

ஒருவருக்கு மல்டிபிள் மைலோமா பாதிப்பு இருந்தால், தொடர்ந்து உடலில் இடுப்புப் பகுதி அல்லது முதுகுப் பகுதியில் எலும்பு வலி, இரத்த சோகை, அடிக்கடி உண்டாகும் நோய்தொற்றுகள், வயிற்று வலி, தீவிர தாகம், மலச்சிக்கல், தூக்கக் கலக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தாலே மல்டிபிள் மைலோமா என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், தொடர்ந்து இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஏனெனில், ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அதிகம். மல்டிபிள் மைலோமாவின் தீவிர நிலையில் வருபவர்கள், அதுவும் வயதானவர்கள் என்றால் சிகிச்சையை அவர்கள் உடல் தாங்காது. மேலும், புற்று உடலின் பல உறுப்புகளுக்கும் பரவி அந்த உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்படும்.

எனவேதான், வருடத்துக்கு ஒருமுறை புற்றுநோய் ஸ்கீரினிங் டெஸ்ட் செய்துகொள்ள வற்புறுத்துகிறோம். இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ள, ஜீரோ நிலையில் இருக்கும் செல்களைக்கூட கண்டுபிடித்து அழித்துவிடலாம்.

மல்டிபிள் மைலோமாவுக்கு சிகிச்சைகள் உள்ளது. கீமோதெரபி தான் மல்டிபிள் மைலோமாவின் மிகவும் பொதுவான சிகிச்சை. இதில் சில பக்க விளைவுகள் இருக்கும் என்றாலும் புற்றுநோய் உயிரணுக்களைக் கொல்லவும் கட்டி வளர்வதை தடுக்கவும் கீமோதெரபி  மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

மைலோமாவின் தீவிர நிலையில், ஸ்டெம்செல் மாற்று அறுவை மூலமும் சரி செய்யலாம். இதில் சேதமடைந்த எலும்பு மஜ்ஜை திசுக்களுக்கு பதிலாக ஆரோக்கியமான ஸ்டெம் செல்கள், ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்படும். இதன் விளைவாக புதிய உயிரணுக்கள் வளர்ந்து எலும்பு மஜ்ஜை சேதத்திலிருந்து மீள வாய்ப்புண்டாகும்” என்கிறார் டாக்டர் பார்கவி இளங்கோவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...