No menu items!

தேவிபாரதிக்கு சாகித்ய அகாதமி விருது கொடுத்தது சரியா? தொடங்கியது சர்ச்சை!

தேவிபாரதிக்கு சாகித்ய அகாதமி விருது கொடுத்தது சரியா? தொடங்கியது சர்ச்சை!

இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் நேற்று டெல்லியில் வெளியிடப்பட்டது. சர்ச்சை இல்லாமல் சாகித்ய அகாதமி விருதா? இந்த வருடம் என்ன சர்ச்சை? பார்ப்போம்…

விருதும் சர்ச்சையும்

சாகித்ய அகாதமி விருதும் சர்ச்சையும் பிரிக்க முடியாதது. அதிலும் இந்த வருடம் ஒரு வித்தியாசம். வழக்கமாக சாகித்ய அகாதமி விருது அறிவித்த  பின்புதான், இன்னாருக்கு கொடுத்தது சரியா, ஏன் இன்னாருக்கு கொடுக்கவில்லை என்று சண்டைகள் தொடங்கும். ஆனால், இம்முறை விருது அறிவிப்புக்கு முன்பே சண்டைகள் தொடங்கிவிட்டது.

சாகித்ய அகாதமி விருது அதிகாரபூர்வமாக நேற்றுதான் அறிவிக்கப்பட்டது. தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக 2023-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் தேவிபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தான் அதிகாரபூர்வமாக விருது அறிவிக்கப்பட்டாலும் சென்றவாரமே தகவல் கசிந்துவிட்டது. உடனே, அனைவரும் எழுத்தாளர் தேவிபாரதிக்கு வாழ்த்துகள் சொல்லத் தொடங்கினர். இந்நிலையில், ‘அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் முன்னரே எப்படி இன்னாருக்குதான் விருது என்று சொல்லலாம்? ஒருவேளை தேவிபாரதிதான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், தகவல் கசிந்துவிட்டதால், அவருக்கு விருது கொடுக்கக்கூடாது. விருது பட்டியலில் இரண்டாவதாக வரும் நபருக்கு விருது கொடுக்க வேண்டும்” என்று எழுத்தாளர் சோ. தருமன் சர்ச்சையை தொடங்கி வைத்தார்.

இதுபோதாதா? சோ. தருமனை வாசிங் மிஷினில் ஏற்றி தொவைக்கத் தொடங்கிவிட்டார்கள். அதேநேரம் சிலர் சோ. தர்மனுக்கு ஆதரவாகவும் களம் இறங்க, தேவிபாரதிக்கு விருது கொடுக்கலாமா கூடாதா என்று இரண்டு தரப்பாக பிரிந்து தமிழ் இலக்கிய உலகம் விவாதித்துக் கொண்டிருந்தது. இந்த விவாதம் காரணமாக தேவிபாரதிக்கு விருது அறிவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, தேவிபாரதிக்கே விருதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது, சாகித்ய அகாதமி அமைப்பு.

யார் இந்த தேவிபாரதி?

ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் தேவிபாரதி, கடந்த 40 ஆண்டு காலமாக எழுத்துலகில் இயங்கி வருபவர். ஈரோடு மாவட்டம் கஸ்பாப்பேட்டை என்னும் ஊரில் டிசம்பர் 30, 1957இல் பிறந்தார். கஸ்பாபேட்டை, ஈரோடு, அறச்சலுர் சென்னிமலை, வடுகபட்டி என ஐந்து ஊர்களில் பதினொன்றாம் வகுப்பு வரை படித்தார். பள்ளிப் படிப்பு முடித்தபின் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். 2006 ஜூனில் வேலையை உதறிவிட்டு சில காலம் திரைத்துறையில் பணியாற்றினார். அதன்பின் 2008 முதல் ஏழாண்டுகள் ‘காலச்சுவடு’ மாத இதழிலும் ஓராண்டுக் காலம் ‘புதுயுகம்’ தொலைக்காட்சியிலும் வேலை பார்த்தார்.

தேவிபாரதி இரு முறை மணம் புரிந்து மணமுறிவு பெற்றவர்.

தேவிபாரதி மாணவராக இருக்கும்போதுதான் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிரான இடதுசாரி மார்க்ஸிய லெனினிய இயக்கங்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டார். அக்காலகட்டத்தில் இடதுசாரி இதழ்களில் அரசியல் கட்டுரைகள் எழுதினார். இடதுசாரி இயக்கங்களின் வீதி நாடகங்களிலும் பங்குகொண்டார். அவற்றுக்காக நாடகங்களும் எழுதியிருக்கிறார். இந்நிலையில், 1992-ல் சோவியத் ருஷ்யாவின் உடைவு தேவிபாரதியின் அரசியல் நம்பிக்கைகளையும் மாற்றியமைத்தது. இதனைத் தொடர்ந்து தேவிபாரதி இடதுசாரி இயக்கங்களுடன் தன் தொடர்புகளை முறித்துக்கொண்டார்.

இடதுசாரி இயக்கங்களில் இருந்து விலகிய பின், தேவிபாரதி படித்த, டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு அவர் மேல் தீவிரச் செல்வாக்கைச் செலுத்தியது. தொடர்ந்து காந்தியின் எழுத்துக்களைக் கூர்ந்து வாசிக்கத் தொடங்கினார்.

தேவிபாரதியின் முதல் சிறுகதை 1979-ல் பிரசுரமானது. ஆனால், 1994இல் ‘காலச்சுவடு’ இதழில் வெளியான ‘பலி’ என்னும் சிறுகதையே தேவிபாரதிக்கு பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது.

தேவிபாரதி நான்கு நாவல்களும் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகளும் தேவிபாரதி எழுதியுள்ளார். இவரது படைப்புகள், எளிய மக்களின் வாழ்வியலை அச்சுப் பிசகாமல் பிரதிபலிப்பவை. உளவியல் நெருக்கடிகளை சமூகப் பின்னணியில் நிறுவி ஆராயும் படைப்புகள் என விமர்சகர்கள் இவரது படைப்புகளை குறிப்பிடுகிறார்கள்.

தேவிபாரதியின் படைப்புகளில் மிகச் சிறந்ததாக ‘நிழலின் தனிமை’ நாவலும் காந்தியை பற்றிய ‘பிறகொரு இரவு’ சிறுகதையும் குறிப்பிடப்படுகிறது.

தேவிபாரதியின் வாழ்க்கை பற்றி ‘தன்னறம்’ இலக்கிய அமைப்பு ஆவணப்படம் வெளியிட்டுள்ளது.

விருது பெறும் நாவல்?

‘நீர்வழிப் படூஉம்’ என்ற நாவலுக்காத்தான் எழுத்தாளர் தேவிபாரதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேவிபாரதியின் மூன்றாவது நாவல் இது.

இந்நாவல் குறித்து, “எல்லோராலும் கைவிடப்பட்ட உடையாம்பாளையத்தின் மரண வீடொன்றில் நாவல் தொடங்குகிறது. அங்கே பிணமாகக் கிடத்தப்பட்டிருக்கும் காரு மாமாவே நாவலின் பிரதானப் பாத்திரம். துயர் மிகுந்த கடைசிக் காலத்தை அனுபவித்து, தனியனாக இறந்துபோகும் காரு மாமாவின் நிலைக்கு என்ன காரணம்? அவரின் உற்ற சொந்தங்கள் எவரெவர்? சாவுக்கு அத்தனை பேர் கூடிய நிலையில் வாழும்போது அவர் தனித்திருக்கக் காரணம் என்ன? இப்படி அவர் வாழ்ந்த வாழ்வின் மீது அந்த மரணத் தருணத்தில் அடுக்கடுக்காய்க் கேள்விகளை எழுப்புகிறது இந்நாவல். பின்னர், புதிர்களை ஒவ்வொன்றாய் அவிழ்த்து, மேலும் பல புதிய கேள்விகளை எழுப்பிச் செல்கிறது.

காரு மாமாவின் மனைவி ராசம்மாள், ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறாள். போகும்போது தன் பிள்ளைகளையும் கூடவே அழைத்துச் சென்றுவிடுகிறாள். அவள் வெளியேறியதற்கான காரணம் எங்குமே விளக்கப்படுவதில்லை. ஆனால், அது காரு மாமாவுக்குப் புரிந்திருக்கிறது. அவளின் எல்லாப் பிழைகளையும் மீறி அவளை நேசிக்கிறார். அவளுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் வேண்டிக்கொள்கிறார். ராசம்மாவால் தன் சகோதரன் பட்ட துன்பம் அனைத்தையும் கண்ட பின்னரும்கூட காரு மாமாவின் சகோதரிகள் ராசம்மாவை ஏற்றுக்கொள்கிறார்கள். அவள் பிள்ளைகளை உச்சிமோந்து உருகுகிறார்கள்.

இந்நாவலை காரு மாமா என்ற தனிமனிதன் ஒருவனின் கதை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. காரு மாமாவே பிரதானப் பாத்திரம் என்றாலும் ஒப்பாரிப் பாடல்களைப் பயிற்றுவிக்கும் லிங்க நாவிதர், கண்களில் அன்பைத் தேக்கி நடமாடும் சாவித்திரி, திருமங்கலத்து அத்தையின் மூத்த மருமகன், பெரியம்மாக்கள், பிள்ளைகள் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவத்துடன் இந்நாவலில் படைக்கப்பட்டிருக்கின்றனர். இது இவர்கள் அத்தனை பேரும் பட்ட கதை.

காரு மாமாவின் வாழ்வின் ஊடாகக் குடிநாவிதச் சமூகத்தின் உள்ளார்ந்த துயரத்தையும் பேசுகிறது இந்நாவல். கடைசி வழியனுப்புதலுக்குக்கூட அடுத்தவர் கையை நம்பியிருக்க வேண்டிய நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள். வாழ்வின் அத்தனைப் படிநிலைகளிலும் வறுமையும் துயரும் நிழல்போல அவர்களைத் தொடர்கின்றன. மீளாத் துயருக்கு நடுவிலும் தங்களை ஆற்றுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அவர்களே தேடிக் கண்டுகொள்கிறார்கள். அதில் தமிழ்த் திரைப்படங்கள் வகிக்கும் பங்கு குறிப்பிடத் தக்கது.

திரைப்படங்கள் பற்றி நாவலில் வரும் குறிப்புகள் மிக முக்கியமானவை. பீம்சிங்கின் திரைப்படங்களைக் கண்டு கண்ணீர் உகுப்பதன் வழியே தம் இடர்மிகு வாழ்வின் அழுத்தங்களைக் கொஞ்ச நேரம் இறக்கி வைத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தின் சமூக அரசியல் வரலாற்றை எழுதும் யாரொருவரும் ஏன் திரைப்படங்களை ஒதுக்கிவிட்டு எழுதிவிட முடியாது என்பதற்கான விடை இந்நாவலில் இருக்கிறது.

வாழ்வின் தீராத் துயரங்களுக்கிடையேயும் மனிதர்களிடத்தே தூர்ந்து போகாது நிலைத்திருக்கும் அன்பையே தன்னுடைய பார்வையாக தேவிபாரதி இந்நாவலில் முன்வைக்கிறார்.

தேவிபாரதியின் முதல் நாவலான ‘நிழலின் தனிமை’ குற்றம் – தண்டனை – மன்னிப்பு என்பதற்குள் சுழலும் என்றால் ‘நீர்வழிப் படூஉம்’ நாவலோ அதன் தொடர்ச்சியாகக் குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என்று செல்கிறது. அவருடைய புகழ்பெற்ற ‘பலி’, ‘பிறகொரு இரவு’ போன்ற சில சிறுகதைகளிலும் இதே போன்றதொரு அடிச்சரடைக் காண முடியும். இந்நாவலின் மனிதர்கள் அவர்களின் அத்தனைத் தவறுகளுக்கும் மன்னிக்கப்படுகிறார்கள்; அவர்களின் அத்தனைக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்; வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டும் வாழ்வில் தங்களுக்கான ஆசுவாசத்தை நிபந்தனையற்ற மன்னிப்பின் வழியாகவும் எதிர்பார்ப்பற்ற அன்பின் வழியாகவும் தேடிக்கொள்கிறார்கள். நீர்வழிப் படூஉம் புணைபோல் இந்நாவல் அன்பின் வழி சேர்கிறது” என்கிறார் எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன்

இந்நாவலை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...