No menu items!

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கவின்?

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கவின்?

தமிழ் சினிமாவில் இப்போது ஒரு தொய்வு இருக்கிறது. எந்தப் படங்களும் பெரிதாக வசூல் செய்யவில்லை. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு சொல்லிக் கொள்ளுமளவிற்கு லாபம் தரவில்லை. கடந்த நான்கு மாதங்களாக இதே நிலைதான் நீடிக்கிறது.

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ இந்த இரு படங்களையும் தவிர்த்து வேறெந்த பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகவில்லை.

இந்த சூழலில்தான் மலையாள சினிமாவின் ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ படம் இங்கே வெளியாக இருபது கோடிக்கும் மேல் வசூலை வாரி எடுத்தது. புதிய படங்கள் எதுவும் பெரிதாக இல்லாத நிலையில், ‘கில்லி’ இப்போது மறு வெளியீட்டில் திரையரங்குகளில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் கவின் நடித்திருக்கும் ‘ஸ்டார்’ படத்திற்கு வியாபாரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள். ‘பியார் ப்ரேமா காதல்’ படத்தை இயக்கிய நளன்தான் ‘ஸ்டார்’ படத்தின் இயக்குநர்.

இந்தப் படத்தின் வியாபாரம் தொடங்கியதுமே, கவினின் முந்தையப் படமான ‘டாடா’வின் வெற்றியை முன்வைத்தே பேசியிருக்கிறார்கள். மேலும் கவினை ஒரு பெண் தோற்றத்தில் நடிக்க வைத்த காட்சிகளையும் வியாபார நேரத்தில் வெளியிட்டு இருக்கிறது ஸ்டார் படக்குழு. இந்த இரண்டு அம்சங்களும் நன்றாகவே எடுப்பட்டிருக்கிறதாம்.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து இருக்கின்றன.

இதன் திரையரங்க வெளியீட்டு உரிமையை கோவையைச் சேர்ந்த சுப்பையா என்பவர் வாங்கி இருப்பதாக கூறுகிறார்கள். இவர் இதன் உரிமைக்காக 7 கோடி கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

பின்னர் கோவை சுப்பையா இந்த படத்தின் உரிமையை விநியோகஸ்தர்களிடம் கொடுத்திருக்கிறார். இதன் மூலமான வியாபார முன் பணமாக மட்டும் சுமார் 8 கோடி வரை அவருக்கு கிடைத்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். பெரிய நடிகர் படங்களே வியாபாரத்தின் போது தட்டுதடுமாறுகையில், கவின் படம் இந்தளவிற்கு வியாபாரம் ஆகியிருப்பதுதான் கோலிவுட்டில் இப்போது லேட்டஸ்ட் டாபிக்காக மாறியிருக்கிறது.

மேலும் சிவகார்த்திகேயனுக்கு உள்ள அதே லவ்வர் பாய் இமேஜ்தான் கவினுக்கு இருப்பதால், இவர் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக இருப்பாரா என்ற எதிர்பார்பும் இப்போது உருவாகி இருக்கிறது.


லோகேஷ் கனகராஜை கிண்டலடித்தாரா வெங்கட் பிரபு

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் ‘கூலி’ படத்தின் முதல் பார்வை வெளியானது. இதில் ரஜினி நடித்த பழையப் படங்களின் வசனங்களும், சில காட்சிகளும் இடம்பெற்று இருந்தன.

இந்த கூலி முதல் பார்வைக்கு வரவேற்பும், விமர்சனங்களும் சேர்ந்தே கிடைத்தன.

இந்நிலையில் அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளை போன்ற இன்றைய இளையதலைமுறை இளைஞர் கதாபாத்திரங்களில் நடித்த கார்த்திக் குமார், ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். பின்னணி பாடகியும் ஆர்.ஜே-வுமான சுசித்ராவைக் காதலித்து திருமணம் செய்து, இப்போது பிரிந்து வாழும் அதே கார்த்திக் குமார்தான்.

தன்னுடைய வீடியோவில், ‘இப்பொது வரும் படங்களின் ட்ரெய்லர்கள் எல்லாமும் ஒரே மாதிரியாகதான் இருக்கின்றன. அவன் வரப் போறான். அதோ வர்றான். அவன் வந்தேவிட்டான் என இப்படி பில்டப் கொடுக்கிற மாதிரியாகதான் இருக்கின்றன. இதில் பழையப் படங்களின் வசனங்களையும் வைத்துவிடுகிறார்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த வெங்கட் பிரபு, அதை தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த சமூக ஊடகப் போராளிகள் பலர், லோகேஷ் கனகராஜை கிண்டலடிக்கும் நோக்கத்தோடுதான் இதை வெங்கட்பிரபு தன்னுடைய சமூக ஊடக கணக்கில் பகிர்ந்து இருக்கிறார். கூலி முதல் பார்வையை மறைமுகமாக கேலி செய்யவே இப்படி செய்திருக்கிறார் என்று சர்ச்சையைக் கிளப்பிவிட்டார்கள்.

இதனால் பதறிப் போன வெங்கட்பிரபு சுதாரித்து கொண்டு தன்னிலை விளக்கம் ஒன்றையும் கொடுத்திருக்கிறார். ‘அப்படியெல்லாம் இல்லவே இல்லை. இது என்னைப் போன்ற எல்லா கமர்ஷியல் இயக்குநர்களுக்கும் பொருந்தமான ஒன்றுதான். கார்த்திக் குமார் சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கிறது. கமர்ஷியல் படங்களை ஒரே மாதிரியாக எடுப்பதைதான் அவர் அப்படி கூறியிருக்கிறார்’’ என்று கூறியிருக்கும் வெங்கட் பிரபு, மற்றொரு கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்.

’அதெல்லாம் சரி, கமர்ஷியல் படங்களாக இல்லாமல் வித்தியாசமான படங்களாக கொடுத்தார் ரசிகர்கள் ஏற்று கொள்ள தயாரா?’ என்று சர்ச்சையை திருப்பி, தன்னிடம் கேள்வி கேட்டவர்களிடமே எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்.


சந்தோஷமாக இருக்கணுமா – மிருணாள் தாகூர் டிப்ஸ்

அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த மிருணாள் தாகூரின் வெற்றிப் பயணத்தில், சமீபத்தில் வெளியான ‘ஃபேமிலி ஹீரோ’ படம் வேகத்தடையைப் போட்டிருக்கிறது.

இது போன்ற வாழ்க்கையின் மறக்க முடியாத, கசப்பான தருணங்களையும், அனுபவங்களையும் இந்நேரத்தில் மிருணாள் தாகூர் பகிர்ந்திருக்கிறார். ‘முன்பு சில நாட்கள் நான் தூக்கத்தில் இருந்து முழிக்கவே கூடாது என நினைத்தது கூட உண்டு. படுக்கையில் இருந்து எழுந்திரிக்க விரும்பியது இல்லை. ஆனால் அதையும் செய்திருக்கிறேன். இது மற்றவர்களுக்காக அல்ல. எனக்காக மட்டுமே அப்படி செய்திருக்கிறேன்.
ஒரு நாள் ரொம்ப மனம் ரொம்ப பாரமாக இருக்கும், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள், ஒரு வாரம், சில வாரங்கள், சில மாதங்கள் கூட அப்படி இருந்து இருக்கிறது. ஆனால் உங்கள் குடும்பத்தினரை தவிர்த்து வேறு யாரும் உங்கள் மீது அக்கறை காட்டப் போவதில்லை.

இப்படியொரு நிலையில், கெட்ட நாட்கள் இருந்தால், நிச்சயமாக நல்ல நாட்களும் இருக்கும் என்பதை உங்களுக்கு நீங்களே நினைவுப் படுத்தி கொள்ளவேண்டும்.

உடல் கேலி, உருவக் கேலியும் ரொம்ப வலி மிகுந்தவை. முன்பு எனக்கென்று நான் வைத்திருந்த சில வரையறைகளை இப்போது மாற்றிவிட்டேன். உடலை அணைத்து கொண்டு இருக்கும் உடைகளை அணிவதில் எனக்கு ஒரு தயக்கம், பயம் இருந்தது. ஆனால் இப்போது என்னுடைய வளைவு அழகுகளைக் காட்டும் உடைகள் என்றாலும் கொண்டு வாருங்கள் என்று கூற ஆரம்பித்துவிட்டேன். க்ராப் டாப்ஸ் தான் என்றாலும் கொடுங்கள் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். கர்தஷியான்கள்தான் அழகை வரையறுக்க வேண்டுமா என்ன? சாலைகளில் நடந்து போகிற ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் அழகிய வளைவுகளுடன் அழகாக இருக்கிறார்கள்.

நடிகை மோனா சிங் தனது சினை முட்டைகளை உறைய வைத்து பாதுகாக்கும் முடிவை எடுத்திருக்கிறார். உண்மையில் ரிலேஷன்ஷிப் என்பது இன்றைக்கு ரொம்பவே கஷ்டமானது. அதனால்தான் உங்களுடைய பணியின் சூழலைப் புரிந்து கொள்கிற சரியான பார்ட்னர் வேண்டும் என்பது அவசியமானதாக இருக்கிறது. இதனால் சினை முட்டையை உறையை வைத்து பாதுகாப்பதைப் பற்றி நானும் யோசித்து கொண்டிருக்கிறேன்.’’ என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் மிருணாள் தாகூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...