No menu items!

சோழர்களா? பல்லவர்களா? – யார் முக்கியமானவர்கள்?

சோழர்களா? பல்லவர்களா? – யார் முக்கியமானவர்கள்?

நோயல் நடேசன்


‘பொன்னியின் செல்வன்’ மட்டுமல்ல கல்கியின் எல்லாக் கதைகளையும் சிறுவயதில் படித்திருக்கின்றேன். எங்கள் எழுவைதீவுக்கு (இலங்கை) கல்கி தபாலில் வரும். ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’ முதலான தொடர்களை அம்மாவோடு போட்டியிட்டுப் படிப்பேன். அந்த பழைய தொடர்களை அம்மா புத்தகமாக தொகுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் முக்கியமாக நினைவுக்கு வருவது அதில் வரும் பாத்திரங்களான வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான், நந்தினி என்பன.

இலக்கியத்தை ருசிப்பது ஒன்று, அதை அறிந்துகொள்வது மற்றொன்று. நட்சத்திர உணவகத்தில் உண்பவனுக்கும் அந்த உணவைத் தயாரிப்பவரினதும் நிலைக்குச் சமானமானது. ஆங்கிலத்தில் மிருக வைத்தியம் படித்த நான், இலக்கியத்தை அறிந்துகொள்ள ஆங்கில இலக்கிய விளக்க உரைகளைக் கேட்டேன். தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதன்படி இலக்கியத்தில் முழுமையான அல்லது ஆங்கிலத்தில் (Round) வட்டமான பாத்திரங்கள் உருவாகும்போது, அவை மனதில் நிற்கும். தட்டையான (Flat) பாத்திரங்கள் கதை சொல்வதற்கு பாவிப்பது மட்டுமே. அதாவது நெருப்புக்குச்சி மாதிரி, மெழுகுவர்த்தியை கொளுத்தியபின் அதை எறிந்து விடுவோம்.

பொன்னியின் செல்வனை படிக்கும்போது அதனை நாவலாகப் பல குறைகளைக் காணலாம். ஆனாலும் இதுவரையில் கல்கியைப்போன்று நினைவில் நிற்கும் பாத்திரங்களை தற்கால இலக்கியத்தில், தமிழ்ப் புனைவு வெளியில் படைத்தவர்கள் எவருமில்லை. நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரளவு மனதில் நிற்கும் ஒரே பாத்திரம் மோகமுள்ளில் வரும் யமுனா மட்டுமே. இலங்கையில் எஸ்.பொ.வின் சடங்கில் வரும் செல்லப்பாக்கியம், அதனைப் படித்தவர்களின் மனதில் நிற்கும் பாத்திரம். இவைகள் எனது வாசிப்பு அனுபவத்தில் முழுமையான பாத்திரங்கள்.

நாவல் இலக்கியத்தில் 1800களில் வந்த கற்பனாவாத நாவல் அமைப்பு, அதன்பின் வந்த யதார்த்தம், 1900-1920இல் வந்த நவீன நாவல்கள் என பல படிகளில் வளர்ந்து விட்டது. 1960இல் பின்நவீனத்துவ நாவல்கள் வந்துவிட்டன. இதில் 1950இல் வெளியாகிய கல்கியின் நாவல் பின்தங்கியது என்றாலும், கல்கி தமிழர்களுக்காக எழுதும்போது, நவீனத்துவ நாவலாக கடவுளை நிராகரித்து எழுத முடியுமா? கல்கி, தான் வாழ்ந்த காலத்து மக்களுக்காக, தமிழகத்தின் வரலாறு கலந்த நாவல்களை எழுதினார். அவரது காலத்திற்குத் தேவையானதை எழுதினார். அந்தவிதத்தில் அவரது நாவல்கள் முக்கியமானது. அத்துடன் அவர், காலனி ஆதிக்கத்திலும் மொகாலய அரசின் ஆதிக்கத்திலும் 800 வருடங்களுக்கு மேலாக அரசாளப்பட்ட மக்களது வரலாற்றின் சில பக்கங்களை புரட்டுவதற்கு சாமானிய மக்களைத் தூண்டுகிறார். ஒரு சில அறிவுஜீவிகளுக்காக மட்டும் அவர் எழுதவில்லை. அந்த விதத்தில் அவர் கொண்டாடப்பட வேண்டியவர்.

உலகத்தில் முதன்முதலாக, எகிப்தில் அந்த நாட்டின் அரசால் ராணுவம் வைத்திருக்க முடிந்ததற்குக் காரணம், நைல் நதியின் நீர்வளமே. அரச பாதுகாப்புக்கு மேலாகப் பெரிதளவில் படையெடுப்பு நடத்த முழு நேர ராணுவம் வைத்திருந்தால், அதற்குப் பணம் வேண்டும். வேதனம் கொடுக்கவேண்டும். அல்லாதபோது விவசாயிகளே பகுதி நேரப் படைவீரர்களாவர்.

தென் இந்தியாவில் பல பட்டங்களுடன் அரச படையில் இருப்பவர்கள் பகுதி நேரப் படைவீரர்கள், மழைக்காலத்தில் விவசாயம் செய்பவர்கள். அவர்களது சேவையின் நிமித்தம் அரசு காணிகளைப் பெறுவார்கள். தொண்டமான், சேர்வை, நாயகர், படையாச்சி எனப் பட்டங்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அவை பிற்காலத்தில் சாதிப் பெயராகியது. இது உலகமெங்கும் நிலவுடைமை சமூகத்தில் நடந்தவையாகும். அரசர்கள் நில உடமை சமூகத்தின் முக்கோணத்தின் உயரத்தில் இருப்பவர்கள். அவர்களது பாதுகாப்பு அந்த சமூகத்தைப் பாதுகாப்பதிலேயே இருந்தது.

சோழர்களது நடவடிக்கைகள் கோவில்களிலும் நீர்நிலைகளைப் பெருக்குவதிலும் இருந்தது ஆச்சரியமில்லை. தற்கால பாராளுமன்ற ஜனநாயக சமூக கண்ணோட்டங்களால் அக்காலத்தை விமர்சிப்பது சிறுபிள்ளைத்தனம்.

சோழ அரசு, தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் தோன்றிய அரசுகளில் முக்கியமானதாகும். சோழ நாட்டின் நீர்வளமே அந்நாட்டால் ராணுவத்தை வைத்திருக்கக் கூடியதாக இருந்தது. காவிரி நீரின் மீதே சோழர்கள் சாம்ராச்சியம் அமைத்தனர். நாட்டில் செல்வம் பெருக உபரியான பண்டங்களால் வர்த்தகம் உருவாகிறது. சோழர் காலத்தில் பல தென் ஆசிய நாடுகளோடு வியாபாரம் நடக்கிறது. இவைகள் விரிவடைந்த காலம் சோழர் காலம் எனினும் தொடக்கியவர்கள் பல்லவர்களே.

என்னைப் பொறுத்தவரை பல்லவர்களே தமிழ்நாட்டில் பல கோவில்கள் உருவாக காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள். அவர்கள் அமைத்த கைலாசநாதர் கோவிலை காஞ்சிபுரத்தில் பார்த்தேன். எல்லா கோவில்களுக்கும் தாய் கோவிலாக நரசிம்ம பல்லவனால் அது அமைக்கப்பட்டது. தஞ்சைப் பெரிய கோவிலைச் சோழர்கள் அமைக்க இந்த கைலாசநாதர் கோவிலே முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. வெளிநாட்டு வர்த்தகம் மாமல்லபுரத்தில் ஏற்பட்டதற்கு இன்றும் அங்குள்ள கலங்கரை விளக்கம் சாட்சி. இந்தியக் கலாச்சாரத்தை தென்கிழக்காசியாவிற்கு எடுத்துச் சென்றவர்கள் அவர்களே

பல்லவர்களைக் கொண்டாடாமல் இருப்பதற்குப் பலருக்குப் பல காரணம் இருக்கலாம். ஆனால், தெற்காசியாவில் 6ஆம் நூற்றாண்டிலிருந்து தென் இந்தியக் கலாச்சாரத்துடன் இந்திய மதங்களான சைவம், பௌத்தம் உட்பட, கட்டிடக்கலையும் பரவியது பல்லவர் காலத்திலேதான். வட இந்திய மதமான வைணவம், தென்னாசியவிற்கு பெரிதாகச் செல்லவில்லை என்பதையும் அறிந்து கொள்க.

மாமல்லனா – ராஜராஜசோழனா எனக்குப் பிடித்தவர்கள் என்றால் எனது வாக்கு மாமல்லனுக்கே. மாமல்லன் படை எடுத்து சாளுக்கியரை வென்றான். ஆனால், ராஜராஜ சோழன் (சோழர்கள்) மற்றைய தமிழனாகிய பாண்டியரை கருவறுத்தான். இது குதர்க்கமாக இருந்தாலும் இது உண்மையே.

உண்மையில் அரசகுலங்களிலோ, ஏன் இன்றைய நவீன அரசிலோ, இனம் – மொழி என்ற பேதம் கிடையாது. சோனியாவை ராஜீவ்காந்தி மணம் செய்தது போன்று, எங்கு அழகிய பெண் இருந்தாலும் அல்லது அரசுக்கு ஆதரவு தேடியும் திருமண பந்தம் செய்வார்கள். இக்காலத்திலும் தமிழ் நாட்டில் நடக்கும் வரலாறும் அதுவே. விடுதலைப் புலிகளின் காலத்தில் மெல்பனில் தமிழ்த் தேசியத்தை நாளும் பொழுதும் வானொலியில் பேசியவர் சிங்களப் பெண்ணை கந்தர்வ மணம் செய்தார். தமிழ் இனத்திற்காக உயிர் கொடுக்க நினைத்தவர்களது இரண்டாம் தலைமுறையில் சிங்களவர்களை மணந்தவர்கள் பலர். பேரக் குழந்தைகளில் இன மொழிக் கலப்பு பார்க்க முடியுமா?

சரி, குறுகிய இனவாதம், மார்க்சியவாதம், பிராமணசதி எனப் பேசும் அறிவாளிகளைக் கடந்து மணிரத்தினம் எடுத்த திரைப் படத்திற்கு வருவோம்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நாவலின் கதையிலிருந்து விலகாது முடிந்தவரையில் காட்சியாக எடுத்துள்ளார்கள். குறை கூறுபவர்கள் இருக்கிறார்கள். தற்காலத்தில் பல தெலுங்கு (உதாரணமாக RRR) திரைப் படங்களை மிகவும் விறுவிறுப்பாக எடுத்தார்கள். அதேபோன்று ஏன் தமிழில் எடுக்கவில்லை என யோசித்தேன். அந்தவகையில் எனது பொச்சம், பொன்னியின் செல்வனால் தீர்ந்தது. இதில் சண்டைக் காட்சிகள் பிரமாதம் .

ஜெயமோகனது வசனங்கள் பிரமாதம். வந்தியத்தேவன், குந்தவை- நந்தினி – ஆழ்வார்கடியான் பேசும் வசனங்கள் இக்காலத்திற்கேற்ப இருக்கின்றது. வசனங்களை வித்தியாசமாக எழுதுவது முக்கியமான கலை. அது எல்லா எழுத்தாளராலும் முடியாது. ஜெயமோகனுக்கு காளிதாசனைப்போல் கிடைத்திருக்கிறது. நீங்கள் வேண்டுமானால், சிவாஜி நடித்த ‘ராஜராஜ சோழன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கர்ணன்’ வசனங்களைப் பாருங்கள் அக்கால நாடக வசனங்கள்போல் இருக்கும் – இப்போது சகிக்காது.

திரையில் வரும் கார்த்தி, ஜெயராம் இருவரது பாத்திரங்களும் நாவலிலும் நன்றாக இருக்கிறது. இருவரும் யதார்த்தமாக நடிக்கிறார்கள். மற்றைய பாத்திரங்களிலும் எதுவும் குறை சொல்லமுடியாது. திரிஷாவை ஏற்றுக்கொள்ளலாம். என்னிடம் கேட்டிருந்தால் ஐஸ்வர்யாவிற்குப் பதில், நயன்தாராவைச் சிபாரிசு செய்திருப்பேன். நயன்தாராவுக்கு நடிப்பும் வரும். ஐஸ்வர்யாவிடம் இருப்பது அழகு மட்டுமே; அது மருந்துபோல் காலாவதியாகும் தன்மையுடையது.

எனக்குப் பிடித்தது கடற்போரில் கேமராவின் இயக்கம். அந்த படப்பிடிப்பு ஆங்கிலப் படங்களை மிஞ்சுகிறது.

இலங்கைக் காட்சிகள் தாய்லாந்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், பேசப்படும் சிங்கள மொழி சரியாக வந்திருக்கிறது. இந்த விதத்தில் சிங்கள இயக்குநர் பிரசன்ன விதானகேயையும் சிங்கள நடிகரையும் பாவித்திருப்பது வழமையான தமிழ்நாட்டு வகையறாவிலிருந்து வேறுபடுகிறது.

கட்டாயம் குறை சொல்வது என்றால், என்னளவில் கம்சனின் வதமாக வரும் பாட்டுக் காட்சியும் அரண்மனையின் முன்றலில் நடக்கும் நாட்டியமும்தான். தேவையற்றதாக மட்டுமல்ல, பொருந்தாமலும் தொய்வு தெரிந்தது. டிஜிட்டல் திரைத்துறையை, தெருக்கூத்து காலத்திற்குப் பின்னோக்கி எடுத்துச் சென்றது போலிருந்தது.

நல்ல திரைப்படத்திற்கு இசை முக்கியம். ஆனால், பாட்டுத் தேவை இல்லை எனக் கருதுகின்றேன். அதை ஏ.ஆர். ரகுமானிடம் முன்பொரு தடவை மெல்பனில் சொல்லியிருந்தேன். அதற்கு அவர், “தமிழர்களுக்கு ஒன்றிற்குப் பதிலாக இரண்டு கிடைக்கிறது“ என அவர் பதிலிறுத்தாலும் எனது கருத்து மாறவில்லை. அப்படி பாட்டு வந்தால் பின்னணியில் மட்டும் வரவேண்டும் என்பது என் எண்ணம்.

‘பொன்னியின் செல்வன்’, ஆயிரக்கணக்கானவர்களின் மிகப் பெரிய கூட்டு முயற்சி. அத்துடன் தமிழுக்குப் புதிதானது. இனிமேல் எடுக்கப்படும் படங்களுக்கு இது ஒரு அளவு கோலாக இருக்கும்.

நாவலுக்கு உண்மையாகவும் அதேநேரத்தில், சிறப்பாக திரைக்காட்சிக்கு ஏற்ப ஒழுங்கமைப்பது இலகுவான காரியமல்ல. இதனாலேயே பலர் நாவல்களை நமது தமிழில் படமெடுப்பதில்லை. மணிரத்தினத்தின் முயற்சி வெற்றிபெற்றால், பலர் இந்த முயற்சியில் இறங்குவார்கள் என்பது எனது நினைப்பு .

தற்போதைய நெட்பிளிக்ஸ் – அமசோன் காலத்தில் பல தரமான நைஜீரியா, பிலிப்பைன்ஸ் , ஐரோப்பிய படங்கள் வீட்டுக்குள் வந்து சேருகின்றன. உலகம் பரந்த திறந்த வெளியாக உள்ளது. நல்ல படங்கள் தமிழில் வராவிடில் மற்றைய மொழி, நாட்டுப் படங்களை மக்கள் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.

திரைக்கு வந்துள்ள ‘பொன்னியின் செல்வன்’, இரண்டு விடயங்களுக்கு உதாரணமாக இருக்கும் என நம்புகிறேன். இனிவரும் பொது ரசனைக்கான (General Entertainment) படங்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ அளவுகோலாக இருப்பது தவிர்க்கமுடியாது; அதேபோன்று நாவல்களைப் படமாக்குவது கடினம் என்றும் தட்டிக்கழிக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...