No menu items!

விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்

விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்

அகமதாபாத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியுடன் கிரிக்கெட்டில்   இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக். கடந்த 3 தொடர்களாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அசுரவேக ஃபினிஷராக இருந்த தினேஷ் கார்த்திக்குக்கு அந்த அணியின் வீர்ர்கள் பிரியா விடை கொடுத்தனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக அளவிலான ஏற்றங்களையும், வீழ்ச்சிகளையும் சந்தித்த வீரர் என்று தினேஷ் கார்த்திக்கைச் சொல்லலாம். 2004 -ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தடம் பதித்த நாளில் இருந்து ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல அவரது கிரிக்கெட் பயணம் இருந்துள்ளது.

தினேஷ் கார்த்திக்கின் அப்பா கிருஷ்ணகுமார், ஓஎன்ஜிசியில் பணியாற்றினார். சிறுவயது முதலே தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் ஆசைகளுக்கு அவர் துணையாக இருந்துள்ளார். அவரும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது இதற்கு முக்கிய காரணம்.   கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதனை படைக்க வேண்டும் என்பது கிருஷ்ணகுமாரின் ஆசை. ஆனால்  குடும்ப சூழ்நிலையால் அவரால் கிரிக்கெட்டைத் தொடர முடியவில்லை. தனக்கு நேர்ந்தது, தனது மகனுக்கு நேரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த கிருஷ்ணகுமார் அவரது ஒவ்வொரு முயற்சியிலும் உடன் நின்றார்.

தினேஷ் கார்த்திக் பயிற்சி பெறுவதற்காகவே, தன் வீட்டை ஒட்டியுள்ள நிலத்தை அந்த காலத்திலேயே பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி, அதில் பேட்டிங் பயிற்சிக்காக நெட் அமைத்துக் கொடுத்தார் கிருஷ்ணகுமார். இது அவரது பேட்டிங் திறமைகளை வளர்க்க உதவியாக இருந்த்து.  சிறு வயதிலேயே சென்னையில் நடக்கும் பள்ளி கிரிக்கெட் போட்டிகளில் தன் முத்திரையைப் பதித்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் உலகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மாவட்ட அணி, மாநில அணிகளைக் கடந்து இந்திய அணியில் இடம் பிடித்தார். 2004-ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் சீரிஸ்தான் அவரது முதல் தொடர்.

பேட்டிங்கில் திறமைவாய்ந்த விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் இருப்பதால், இந்திய அணியில் அவர் நிலைத்து நிற்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே தோனி எனும் கிரிக்கெட் சூறாவளி இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமாக தினேஷ் கார்த்திக்கின் பயணத்துக்கு தடை வந்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக தோனி உருவெடுக்க, எப்போதாவது அவர் காயம் அடைந்தாலோ, அல்லது முன்னணி பேட்ஸ்மேன்கள் யாராவது ஆட முடியாமல் போனாலோதான் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு என்ற நிலை உருவானது. அதே நேரத்தில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் ஏற்பட ஒரு கட்டத்தின் அவரது வாழ்க்கை ஸ்தம்பித்து நின்றது.

ஆனால் அதெல்லாம் கொஞ்சம் நாட்களுக்குதான். போராடும் குணத்தை உடையவரான தினேஷ் கார்த்திக், வெகு சீக்கிரமாகவே  அந்த சிக்கல்களை கடந்தார். நின்று நிதானமாக பேட்டிங் செய்யும் குணம் வாய்ந்த அவர், இன்றைய உலகுக்கு அது செட் ஆகாது என்பதை உணர்ந்துகொண்டார். டி20 காலத்துக்கு ஏற்ப, அதிரடியான பேட்டிங் ஸ்டைலுக்கு மாற்றினார்.

ஆனால் அப்போதும் அவருக்கு ரிஷப் பந்த் வடிவத்தில் சிக்கல் வந்தது. தோனி ஆடாத போட்டிகளில் தினேஷ் கார்த்திக்குக்கு பதில் ரிஷப் பந்த் ஆட வைக்கப்பட்டார். ஆனால் அதையும் தினேஷ் கார்த்திக் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கிரிக்கெட் ஆட வாய்ப்பு கிடைக்காத சமயங்களில் வர்ணனையாளராக மாறினார். தனக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருந்தார்.

ஒரு கட்ட்த்தில், தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் பயணம் அவ்வளவுதான். இனி அவர் வர்ணனையாளராகத்தான் கிரிக்கெட் பயணத்தை தொடர வேண்டும் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, 2022 ஐபிஎல் தொடரில்  ஒரு ஃப்னிஷராக புதிய அவதாரம் எடுத்தார்  தினேஷ் கார்த்திக். அந்த ஆண்டில் 5.5 கோடி ரூபாய்க்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக், அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரராக உருவெடுத்தார். இதன்மூலம் 2022-ல் நடந்த டி20 உலகக் கோப்பை அணிக்கு தேர்வானார். ஆனால் அந்த தொடருக்கு பின் இஷான் கிஷன் தலையெடுக்க, தினேஷ் கார்த்திக்கின் இடம் கேள்விக்குறியானது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஐபில்லில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெற்றுள்ள பல வெற்றிகளுக்கு தினேஷ் கார்த்திக் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

இந்த சூழலில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியுடன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றுள்ளார்.

38 வயதான தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 2008-ம் ஆண்டுமுதல் அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் ஆடியிருக்கும் தினேஷ் கார்த்திக், முதலாவது ஐபிஎல் தொடரில் அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடினார். இப்போது ஆர்சிபி அணிக்காக அவர் ஆடி வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக அவர் விலகியிருக்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, முழுநேர வர்ணனையாளராக மாற தினேஷ் கார்த்திக் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் தினேஷ் கார்த்திக்கை ஒரு அதிரடி வீர்ராக பார்த்த நாம், இனி அவரை ஒரு அதிரடி வர்ணனையாளராக பார்க்கலாம். அவரது இந்த பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...