No menu items!

வேல ராமமூர்த்திக்கு டாட்டா: ‘எதிர்நீச்சல்’ ஆதி குணசேகரன் சிக்கல்!

வேல ராமமூர்த்திக்கு டாட்டா: ‘எதிர்நீச்சல்’ ஆதி குணசேகரன் சிக்கல்!

‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்துவுக்குப் பதில் வேலராமமூர்த்தி நடிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த பாத்திரத்துக்கு டாட்டா காட்டியுள்ளார்கள். இதற்கு என்ன காரணம்? வேல ராமமூர்த்தி கால்சீட் பிரச்சினையா அல்லது அவரது நடிப்புக்கு ‘எதிர்நீச்சல் ரசிகர்களிடையே வரவேற்பு இல்லையா?’

நடிகர் மாரிமுத்து திடீர் மரணம் தமிழ் சமூகத்தில் உருவாக்கிய அதிர்வலை அவருக்கு நெருக்கமான நண்பர்களே எதிர்பார்க்காதது. இதுதொடர்பாக ‘வாவ் தமிழா’ யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தொலைக்காட்சித் தொடர் இயக்குநரும் மாரிமுத்துவின் நீண்ட கால நண்பருமான மணிபாரதி, ‘உண்மையிலேயே இது பெரிய ஆச்சர்யம்தான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போன்றவர்கள் எல்லாம் அஞ்சலி செலுத்தும் அளவு மாரிமுத்து வளர்ந்துள்ளார். இது எங்களுக்கு அவர் மரணத்துக்கு பின்புதான் தெரியும்’ என்றார்.

மாரிமுத்துவின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், எதிர்நீச்சல் தொடர்தான். இந்த தொடரில் அவர் நடித்த `ஆதி குணசேகரன்’ கதாபாத்திரத்திற்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

இந்நிலையில், மாரிமுத்து மறைந்த பின்னர், அந்த பாத்திரத்தில் நடிக்க எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஒப்பந்தமானார். சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் முன்னுக்கு வந்து, பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் வேல ராமமூர்த்தி, சீரியலிலும் தன் முத்திரையை பதிக்க ஆர்வமாக இருந்தார்.

ஆனால், வேல ராமமூர்த்தி நடிப்பில் தொடர் வெளியான முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்கள் வரத் தொடங்கின. ‘எதிர்நீச்சல்’ ரசிகர்கள் அவரை மாரிமுத்துவுடன் ஒப்பிட்டு கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர்.

இது தொடர்பாக, எழுத்தாளரும் தொலைக்காட்சித் தொடர் வசனகர்த்தாவுமான பா. ராகவன், ‘மாரிமுத்து இயற்கையாகவே இறந்தார். ஆதி குணசேகரனைத்தான் வேல ராமமூர்த்தி கொன்றுவிட்டார்” என்று பதிவிட்டிருந்தார்.

எழுத்தாளர் விநாயக முருகன், ‘முத்தையா படங்களுக்குதான் வேல ராமமூர்த்தி பொருத்தமா இருப்பார். சீரியலுக்கு இல்ல’ என்று கூறினார்.

பாலசுப்ரமணியன் சுதாகர், ‘ஆதிகுணசேகரன் பாத்திரத்துக்கு மாரிமுத்துவுக்கு அடுத்து இளவரசு அல்லது பொன்வண்ணன் மிகப் பொருத்தமாய் இருந்திருப்பார்கள். வேலராமமூர்த்தி செட்டாகவில்லை’ என்றார்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதி குணசேகரன் கைதாகி சிறைக்குச் செல்வது போலக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதனையடுத்து, இனி ஆதி குணசேகரனின் தம்பிகளையும் வீட்டு மருமகள்களையும் சுற்றி, குறிப்பாக தொடர் நாயகியான ஜனனியின் தங்கைக்குத் திருமணம் செய்து வைப்பதை நோக்கித்தான் தற்போதைய கதை ஓட்டம் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேல ராமமூர்த்தி நடிப்புக்கு வரவேற்பு இல்லாததால்தான் அவரது பாத்திரம் ஜெயிலுக்குப் போனது போலக் காட்டிவிட்டார்கள் என்று `எதிர்நீச்சல்’ ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

அதேநேரம், வேல ராமமூர்த்தியின் ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் பாரிஸில் படப்பிடிப்பில் இருப்பதாகப் பதிவிட்டு வருகிறார். இதனை குறிப்பிட்டு, வேல ராமமூர்த்தி தொடர்ந்து படங்களில் பிஸியாக இருப்பதால்தான் ‘எதிர்நீச்சல்’ தொடரில் இப்படி செய்துள்ளார்கள் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

உண்மை எதுவோ…

மாரிமுத்து மரணம் அவரை மட்டுமல்ல ஆதிகுணசேகரன் பாத்திரத்தையும் கொன்றுவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...