No menu items!

உச்சகட்டச் சீரழிவில் ரயில்வே – எழுத்தாளர் ஜெயமோகன் சீற்றம்

உச்சகட்டச் சீரழிவில் ரயில்வே – எழுத்தாளர் ஜெயமோகன் சீற்றம்

நீண்ட தூர பயணங்களில் ரிலாக்ஸாகவும் அதிக செலவில்லாமலும் சென்றுவர வேண்டுமென்றால் ரயில்தான் சரி என்பது பொதுவாக நம்பிக்கை. ஆனால், இப்போது ரயில் பயணமும் சிக்கலாகி வருகிறது. ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டிக்குள் முன்பதிவு செய்யாத பயணிகள் புகுந்து இருக்கையை ஆக்கிரமித்து கொள்ளும் சம்பவங்கள் வட இந்தியாவில் சகஜம். இப்போது இது தமிழ்நாட்டில் ஓடும் ரயில்களிலும் அதிகரித்து வருகிறது. ஸ்லீப்பர் கோச்களை மட்டுமின்றி, ஏசி இரண்டாம் வகுப்பு, 3ஆம் வகுப்பு பெட்டிகளிலும் முன்பதிவு செய்யாதவர்கள் ஆக்கிரமிக்கும் வீடியோக்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இதற்கு என்ன காரணம்?

சமீப சில மாதங்களில் பெரும்பாலான ரயில்களில் இரண்டாம் வகுப்பு, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் எண்ணிக்கையைக் குறைத்து ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது இதற்கு முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது. அன் ரிசர்ட்வ் பெட்டிகள் குறைப்பால் முன்பதிவு செய்யாதவர்கள் இரண்டு பெட்டிகளுக்குள் மட்டும் அடைபட்டு கிடக்க வேண்டிய சூழல்; இன்னொரு பக்கம் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைப்பால், முன்பதிவு செய்தவர்களில் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இவர்கள் இருவருமே முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமிக்க வேண்டிய சூழல். இந்த நிலை மாறுமா?

ரயில் பயணம் இப்படி சீரழிவுக்கு உள்ளானது தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகன் தனது தளத்தில் எழுதியுள்ள கட்டுரை இங்கே…

“நான் ஆண்டில் சராசரியாக எழுபது முறை ரயிலில் பயணம் செய்கிறேன். மாதம் சாதாரணமாக மூன்று பயணங்கள். காரணம் ரயில் எனக்கு மிக வசதியானது.

ஒரு தேசம் சிறந்த பயண வசதிகளை அளிப்பதென்பது அதன் பொருளியல் முன்னேற்றத்திற்கான அடிப்படைகளில் ஒன்று. தேங்கிப்போன நாடுகளை அவற்றின் போக்குவரத்து வசதிகளைக் கொண்டே ஊகித்துவிடலாம். போக்குவரத்து என்பது ’வசதி’ அல்ல, பணம் வைத்திருப்பவர்களுக்கான ‘ஆடம்பரம்’ அல்ல. அது பொருளியல் நடவடிக்கைகளின் அடித்தளம். செய்தித் தொடர்பு ஒரு நாட்டின் நரம்பு இணைப்பு; போக்குவரத்து குருதிநாள இணைப்பு. ஏழைகளின் வாழ்வு முன்னேற முதல் தேவை அவைதான்.

நம் நாட்டில் செய்தித்தொடர்பு வளர்ச்சி ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவானபோது இங்குள்ள போலி மனிதாபிமானிகள் ‘மக்களுக்குச் சோறில்லை, செல்போன் தேவையா?’ என்ற பிலாக்கணத்தையே பாடினர். ஆனால் நவீனச் செய்தித்தொடர்பு நம் வேலைவாய்ப்பில், பொருளியலில் எத்தனை பெரிய புரட்சியை உருவாக்கியது என்பதை கண்கூடாகக் காண்கிறோம். அதேபோன்ற புரட்சி போக்குவரத்தில் நிகழவில்லை.

பாக்டோராவில் இருந்து டெல்லி, மும்பை, தென்நகர்கள் எதற்கும் நேரடி ரயில் இணைப்பு இல்லை. கல்கத்தாவுக்கு காரில் சென்று அங்கிருந்து பேருந்துகள் வழி மேற்கொண்டு பயணம் செய்யவேண்டும். அப்பயணிகளின் வாழ்க்கையில் ஒரு கொடுங்கனவாக அது அமையும். கல்கத்தா பேருந்துகளில் பயணம் செய்வதென்பது ’கான்ஸன்ட்ரேஷன் காம்ப்’களில் கொலைக்களங்களுக்கு கைதிகளை கூட்டிச்செல்வதுபோல் இருக்கும்.

ரயில் பயணம் மிகப்பெரிய சிக்கலாக ஆகிக்கொண்டே இருக்கிறது. வந்தே பாரத் போன்ற ‘ஆடம்பர’ ரயில்களை அறிவித்து பெரிய பாய்ச்சல் நிகழ்வதுபோல பாவலா காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வந்தே பாரத் என்பது ஒரு மோசடி. ஒரு மணிநேரம் மிச்சமாகும் பயணத்துக்கு இருபது சதவீதம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் பெட்டிகள் மிகமோசமாக தயாரிக்கப்பட்ட டப்பாக்கள். பலவும் இதற்குள் பழுதாகிவிட்டிருக்கின்றன. குறிப்பாக வளைவான கழிப்பறை கதவுகள் மூடமுடியாமலுள்ளன. பொருள்வைக்கும் நிலைகள் உடைந்துவிட்டன. அவ்வளவு மோசமான தயாரிப்புகள் அவை.

இன்னொரு மோசடி, தத்கால் என்னும் தற்சமய இருக்கைப் பதிவு. ஏராளமான இருக்கைகள் தத்கால், பிரிமியம் தத்கால் என ஒதுக்கப்பட்டு இருமடங்கு மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேரடிப் பதிவில் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகின்றன.

வட இந்தியா செல்லும் ரயில்களில் ‘ஸ்லீப்பர் கோச்சு’களில் பயணம் செய்யமுடியாத நிலை கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளதுதான். டிக்கெட் இல்லாதவர்கள், அல்லது பொதுப்பெட்டிகளுக்கு டிக்கெட் எடுத்தவர்கள் பெருங்கூட்டமாக ஏறி முன்பதிவு இருக்கைகளை நிரப்பிவிடுவார்கள். எவரும் தட்டிக்கேட்க முடியாது. படுக்கை வசதி முன்பதிவு செய்திருந்தாலும் இருக்கைகூட கிடைக்காத நிலை உருவாகலாம். டிக்கெட் பரிசோதகர் வருவதே இல்லை. வந்தாலும் அவரால் ஒன்றும் செய்யமுடியாது.

குறிப்பாக ஒரிசா, கல்கத்தா, அஸாம் செல்லும் ரயில்களில் ஒரு ஸ்லீப்பர் பெட்டியில் டிக்கெட்டே இல்லாத இருநூறு முந்நூறுபேர் ஏறுவது அன்றாடம் காண்பது. ஒருமுறை ஈரோடு ரயில்நிலையத்தில் நானும் நண்பர்களும் நின்றபோது கவனித்தோம். ஸ்லீப்பர் கோச்சுகளில் நெருங்கிப் பிதுங்கும் கூட்டம். வழிகளை மூடி தொங்கிக் கிடந்தனர். கடைசியாக ஒருவர் பெரிய ஒரு பிளாஸ்டிக் டிரம்முடன் தொற்றிக்கொண்டார்.

இவர்கள் டிக்கெட் எடுக்க பணமில்லா ஏழைகள் அல்ல. டிக்கெட் ஒன்றும் அவ்வளவு அதிகம் இல்லை. ஒருநாள் ஒருவர் மது அருந்த செலவிடப்படும் தொகைக்கு ஐநூறு கிலோமீட்டர் பயணம் செய்யலாம். டிக்கெட் எடுக்கத் தேவையில்லை என நினைக்கிறார்கள். ஒருவர் டிக்கெட் எடுத்தால் மற்றவர்கள் ஏளனம் செய்வார்கள் என ஒருவர் சொன்னார். பயணத்தில் பல நூறு ரூபாய்க்கு குடித்தபடியே இருப்பார்கள். டிக்கெட் எடுத்தாலும் இதேபோல தொங்கித்தான் செல்லவேண்டும் என்றால் எடுப்பது வீண்தான்.

சென்ற பத்தாண்டுகளில் இந்தக் கும்பல் குளிர்வசதிப் பெட்டிகளிலும் ஏற ஆரம்பித்துவிட்டார்கள். இப்போதெல்லாம்  முதல்வகுப்பு குளிர்வசதிப் பெட்டியிலேயே ஏறி வழி முழுக்க நிரம்பி அமர்ந்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் முன்பதிவு செய்த பயணிகள் புலம்புகிறார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை. எந்தப் பதிலும் ரயில்வே நிர்வாகத்தால் சொல்லப்படுவதில்லை.

இப்போது தென்னிந்திய ரயில்களிலும் இந்த வழக்கம் தொடங்கிவிட்டது. முதலில் இங்கே வேலைக்கு வந்த வட இந்தியப் இளைஞர்கள் இப்படி நம்மூர் முன்பதிவுப் பெட்டிகளில் நிறைந்தார்கள். அவர்களை ரயில்வே ஒன்றும் செய்வதில்லை என்று கண்டு இப்போது உள்ளூர் இளைஞர்களும் ஸ்லீப்பர் கோச்சுகளில் நிறைகிறார்கள்.

அண்மையில் கேரளத்தில் இருந்து வட இந்தியா சென்ற ஒரு ரயிலில் டிக்கெட் இல்லாத வட இந்திய இளைஞர்களிடம் டிக்கெட் கேட்ட ஒரு பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு உயிரிழந்தார். உருப்படியான எந்த நடவடிக்கையும் ரயில்வே சார்பில் எடுக்கப்படவில்லை என்று ஒரு டிக்கெட் பரிசோதகர் சொன்னார். ஆகவே இனிமேல் அவர்களிடம் டிக்கெட் கேட்பதில்லை என முடிவெடுத்துள்ளனராம். ’போலீஸ் வேண்டுமென்றால் நடவடிக்கை எடுக்கட்டும், எங்களால் முடியாது. எங்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்றார் ஒரு டிக்கெட் பரிசோதகர்.

இந்த டிக்கெட் இல்லா பயணிகள் பெரும்பாலானவர்கள் குடித்து போதையில் இருக்கிறார்கள். முன்பதிவு செய்து டிக்கெட் எடுத்தவர்களை பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். அடிக்கிறார்கள். பெண்களிடம் அத்து மீறுகிறார்கள். பொருட்களை திருடிச் செல்கிறார்கள். ரயில் கழிப்பறைப் பகுதிகளில் இவர்கள் வாந்தி எடுத்து வைத்திருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன்.  அண்மையில் ஒரு பெண்மணி அழுது புலம்பி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்ததைக் கண்டேன்.

இச்சீரழிவுக்கு முதன்மையான காரணம் ஒன்று உண்டு, இதைச் சொன்னால் உடனே பிரிவினைவாதம் என்பார்கள். நம் ரயில்கள் முழுக்க பெரும்பாலான ஊழியர்கள் இந்தி பேசும் வட இந்தியர்கள். ரயில்வேக் காவலர்கள் வட இந்தியர்கள். வட இந்தியர்களைப் பற்றிய எந்த புகாரையும் அவர்கள் பொருட்டாக நினைப்பதில்லை என்பதுடன், அப்படி புகார் சொல்வதை வட இந்தியர்களுக்கு எதிரான மனநிலையாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.

எனக்கே அந்த அனுபவம் உண்டு. நான் தமிழகத்தில் பயணம் செய்த ரயிலில் இருந்த கடைநிலை ஊழியர்கள் கதவருகே சாமான்கள் வைக்கும் பகுதியில் இழுப்புப் பலகையை இழுத்துப்போட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். ரயில் என் நிறுத்தத்தை வந்தடைந்து விட்டது. அவர் எழுந்தால்தான் கதவை திறக்க முடியும். எழுப்பினால் எழவில்லை, மூன்றுபேரும் நல்ல போதை. நான் டிடியிடம் சொன்னேன். அவர் ‘இந்தியில் பேசு’ என என்னை அதட்டினார். அவர்களிடம் அவர் ஒன்றும் சொல்லவில்லை. மூச்சிரைக்க பெட்டியுடன் மறுபெட்டிக்கு ஓடி பாய்ந்து இறங்கிக்கொண்டேன்.

ரயில் பெட்டிகளை தூய்மை செய்வதில்லை. கழிப்பறைகள் தூய்மை செய்யப்படுவதில்லை. கம்பிளிகள் புழுதி படிந்துள்ளன. ரயில் நின்றதும் வரும் இந்திபேசும் கும்பல் கம்பிளிகளை இழுத்து வெறுந்தரையில் போடுவதை காணலாம். அந்தக் கம்பிளிதான் மீண்டும் தரப்படுகிறது. அண்மையில் புதியதாக வைக்கும் தலையணைகளை ஒரு பையன் தரையிலேயே போட்டு வைத்திருந்தான். அவனிடம் எந்த மொழியில் சொல்ல என எனக்குப் புரியவில்லை

எந்தப் புகாருக்கும் ரயில்வே பதில் அளிப்பதே இல்லை. நான் ரயிலில் பயணம் செய்ய தொடங்கிய இந்த நாற்பதாண்டுகளில் இதுதான் ரயில்வே உச்சகட்டச் சீரழிவில் இருக்கும் காலம். புகார்கள் சொல்ல எண்கள், மின்னஞ்சல்கள் எல்லாம் உண்டு. எல்லாவற்றிலும் இயந்திரப் பதில்கள் மட்டுமே கிடைக்கும். நம்பமுடியாத ஆச்சரியமும் உண்டு, அரைமணிநேரம் கழித்து ‘உங்கள் புகார் சரிசெய்யப்பட்டது’ என்ற பதில் வந்துசேரும்.

இப்போது அரசியல்வாதிகள் ரயிலில் பயணம் செய்வதில்லை, வசதியான கார்களோ விமானமோதான் அவர்களின் தெரிவு. ஆகவே இதையெல்லாம் பாராளுமன்றத்தில் பேச இன்று எவருமே இல்லை. நம் எம்பிக்கள் எவரேனும் பாராளுமன்றத்தில் ரயில் பயணிகளின் அவலம் பற்றி ஒரு முறையேனும் பேசினால் நல்லது. அதை வடக்குக்கு எதிரான குரலாக உடனே மடைமாற்றி விடுவார்கள். ஆனாலும் பேசியே ஆகவேண்டும்” என்கிறார் ஜெயமோகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...