No menu items!

ஹோமோ செக்ஸ்: வாலிபர்களை சமைத்து சாப்பிட்ட கும்பகோண வைத்தியர்

ஹோமோ செக்ஸ்: வாலிபர்களை சமைத்து சாப்பிட்ட கும்பகோண வைத்தியர்

கும்பகோணத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி (வயது 50), தன்னிடம் சிகிச்சைக்கு வரும் வாலிபர்களுக்கு போதை மருந்து கொடுத்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளதும், அதில் சிலரை கொன்று வீட்டில் புதைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலை செய்யப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளது.

என்ன நடந்தது? கேசவமூர்த்தி சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் ராஜன் (வயது 27). சென்னையில் தனியார் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்த அசோக் ராஜன் கடந்த 11ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து சொந்த ஊரான சோழபுரத்திற்கு சென்றுள்ளார். தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், 12ஆம் தேதி அவசர வேலையாகச் சிதம்பரம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றவர் நேரமாகியும் திரும்பவில்லை.

அசோக்ராஜன் திரும்பாத நிலையில் அவரது செல்போனுக்கு குடும்பத்தார் தொடர்புகொண்டனர். அப்போது அசோக் ராஜனின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், பதற்றம் அடைந்த அசோக் ராஜனின் குடும்பத்தினர் அசோக் ராஜனைத் தேடத் தொடங்கினர். 2 நாட்களாக தேடியும் எதுவும் தெரியாத நிலையில் சோழபுரம் காவல் நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி புகார் அளித்தனர்.

இதனிடையே, சோழபுரம் அருகே உள்ள மணல்மேடு கீழத்தெருவை சேர்ந்த நாட்டு வைத்தியரான கேசவமூர்த்தி என்பவர் வீட்டிற்குக் கடந்த 13ஆம் தேதி அசோக்ராஜன் சென்றதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது. கேசவமூர்த்தி வீட்டிற்குச் சென்று அவர்கள் விசாரித்த போது, “கடந்த 13ஆம் தேதி இரவு அசோக்ராஜன் என்னை வந்து பார்த்தார். தனக்கு ஆண்மைக் குறைவு உள்ளதால் வாழப் பிடிக்கவில்லை எனக் கூறி கதறி அழுதார். நான் தஞ்சையில் உள்ள தனக்குத் தெரிந்த மருத்துவரை அணுகுமாறு அவரை அனுப்பி வைத்தேன். நான் அந்த மருத்துவரிடம் நேரில் சென்று விசாரித்துவிட்டு உங்களுக்கு விவரத்தைச் சொல்கிறேன்” எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

15ஆம் தேதி அசோக்ராஜன் குடும்பத்தினரை மீண்டும் சந்தித்த கேசவமூர்த்தி, அவர் தஞ்சைக்கு செல்லவில்லை எனவும், எங்குச் சென்றார் என்பதைத் தேடிக் கண்டுபிடிப்போம் எனவும் கூறி ஆறுதல் சொல்லியுள்ளார்.

மறுநாள், 16ஆம் தேதி அசோக்ராஜன் வீட்டிற்கு ஆடுதுறை தபால் நிலையத்திலிருந்து அசோக்ராஜன் எழுதியதாக ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், “எனக்கு ஆண்மைக் குறைவு இருக்கிறது. அதனால் இந்த உலகத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், அந்த கையெழுத்து அசோக் ராஜனுடையது இல்லை. இதனால் அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம் வலுத்தது. மேலும் அந்த கடிதத்தில் அசோக் ராஜன்  கூறியதாக கேசவமூர்த்தி சொன்ன தகவல் எழுதப்பட்டிருந்ததால், சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர், கடிதத்தை போலீசாரிடம்  ஒப்படைத்து கேசவமூர்த்தியிடம் விசாரிக்குமாறு கூறினர்.

இதனையடுத்து கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அசோக்ராஜனை கொலை செய்துவிட்டு கேசவமூர்த்தி நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அசோக்ராஜனுக்கு முன்னரும் சில கொலைகளை கேசவமூர்த்தி செய்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் தரப்பில், “கேசவமூர்த்திக்கு தற்போது ஐம்பது வயதாகிறது. முன்னதாக, ஆண்மை குறைபாடு இருந்த காரணத்தால், கடந்த 2008ஆம் ஆண்டு சென்னையில் ஒரு நாட்டு மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மருத்துவரிடமே நாட்டு மருத்துவம் குறித்து கற்றுள்ளார். கேசவமூர்த்திக்கு ஓரினச் சேர்க்கையில் ஆர்வம் இருந்துள்ளது. இதற்காக மற்ற ஆண்களை சம்மதிக்க வைக்கவும் அவர்களுக்கு ஆசைகளை தூண்டுவதற்கும் நாட்டு மருத்துவம் மூலம் முயற்சிக்க முடிவு செய்துள்ளார். 2009இல் இதற்காக நாகூரில் உள்ள ஒருவரிடம் ஒரு வகையான மூலிகை செடி குறித்து கற்றுக்கொண்டுள்ளார். இந்த மூலிகை செடியை கேசவமூர்த்தி பொடியாக்கி, அந்த மருந்துக்கு ‘கிறுக்கி முறுக்கி’ என்று பெயரிட்டு, தனது இச்சைக்கு இணங்குபவர்களுக்கு கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் மூலிகை பொடியை மாத்திரையாக தயாரித்தும் பயன்படுத்தி வந்துள்ளார்.

அசோக்ராஜனுடனும் கேசவமூர்த்தி தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டாரென சொல்லப்படுகிறது. இதில் அசோக்ராஜனுக்கு, கேசவ மூர்த்தி நாட்டு மருந்து கொடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி கேசவமூர்த்தியை சந்தித்த அசோக்ராஜன், தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கேசவமூர்த்தி இரண்டு மூலிகை மாத்திரைகளை அசோக்ராஜிற்கு கொடுத்து தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சுயநினைவை இழந்த அசோக்ராஜின் மர்ம உறுப்பை வெட்டி, கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். உடலில் இதர பாகங்களான இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை வீட்டிலேயே மசாலாவுடன் சமைத்து உணவாக சாப்பிட்டு, நாய்களுக்கும் போட்டு ரசித்துள்ளார்.

இதேபோல், கடந்த 2021இல் நவம்பர் 27ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போன முகமது அனஸ் (வயது 26) என்பவருடனும் கேசவமூர்த்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. அசோக்ராஜன் போல், முகமது அனஸும் தனக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து வருகின்றனர் என்று தெரிவித்த போது கோபப்பட்ட கேசவமூர்த்தி, இரண்டு மாத்திரைகளை கொடுத்து அனஸை மயக்கமடைய வைத்துள்ளார். பின்னர் யூடியூப்பில் போஸ்ட மார்டம் செய்வதை பார்த்து முகமது அனஸ் உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை வீட்டின் கொல்லைப் புறத்தில் புதைத்து, குறிப்பிட்ட பாகங்களை சமைத்து சாப்பிட்டு தான் கொலை செய்ததை மறைத்து உள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.

திருவிடைமருதூர் டி.எஸ்.பி . ஜாபர்  சித்திக் தலையிலான போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் இன்று கேசவமூர்த்தியை அழைத்துக் கொண்டு அவரது வீட்டிற்குச் சென்று, அசோக்ராஜனை புதைத்த இடத்தை அடையாளம் கண்டுள்ளனர். கோட்டாட்சியர் பூர்ணிமா முன்னிலையில் அசோக் ராஜன் உடலைத் தோண்டி எடுத்து மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர் அசோக் ராஜன் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கேசவமூர்த்தியின் டைரியை கைப்பற்றியுள்ள போலீசார், அதில் எழுதப்பட்டுள்ள 194 பெயர்கள் பட்டியலை ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேசவமூர்த்தியின் வீட்டை ஆய்வு செய்த போலீசாருக்கு பற்களுடன் கூடிய தாடை எலும்பு பகுதிகள் கிடைத்துள்ளது. இவை கேசவமூர்த்தி கொலை செய்த முகமது அனஸ் சம்பந்தப்பட்டதா என பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...