No menu items!

Exit Poll மோசடி? லட்சக்கணக்கான கோடி ஊழலா?  – மோடியை குறி வைக்கும் ராகுல்

Exit Poll மோசடி? லட்சக்கணக்கான கோடி ஊழலா?  – மோடியை குறி வைக்கும் ராகுல்

தேர்தலுக்கு பிந்தைய போலியான கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்படி வலியுறுத்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதும் குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு சரியா?

கருத்துக் கணிப்பு முடிவும் பங்குச் சந்தை ஏற்றமும்

இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி முடிந்தது. இதனையடுத்து, அன்று மாலையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பான்மை கருத்துக் கணிப்பு முடிவுகள், பாஜக பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்தது.

என்டிஏ கூட்டணி, 353 முதல் 368 வரை வெல்லும் என ஏபிபி சி-வோட்டரும், 381 வரை வெல்லும் என இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியாவும், 371 வரை வெல்லும் என இந்தியா நியூஸ் டைனமிக்ஸும், 386 வரை வெல்லும் என இந்தியா டிவி சிஎன்எக்ஸும், 377 தொகுதிகளை என்டிஏ கூட்டணி கைப்பற்றும் என என்டிடிவி ஜான்கிபாத்தும் கருத்து கணிப்புகளை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், ஜூன் 4ஆம் தேதிக்கு முன்பு பங்குகளை வாங்கினால், அதன் விலை அடுத்தடுத்த நாட்களில் உயரும் என்று பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதானிக்கு சொந்தமான என்டிடிவிக்கு பேட்டியளித்திருந்தார்கள்.

மோடி, அமித்ஷா பேட்டி மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காரணமாக பங்கு சந்தைகள் திடீரென ஏற்றம் கண்டன. கருத்துக் கணிப்புகள் வெளியான பின்னர் ஜூன் 3ஆம் தேதி பங்கு சந்தை சென்செக்ஸ் சுமார் 2,000 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது. நாளின் முடிவில் சென்செக்ஸ் சுமார் 2,500 புள்ளிகள் ஏற்றம் பெற்றிருந்தது. அதேபோல நிஃப்டி ப்ரீ- ஓப்பனிங்கில் (pre-opening) சுமார் 1,000 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது. நாளின் இறுதியில் சுமார் 700 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது.

இப்படி பங்குச் சந்தை ஏற்றம் பெற்றதற்கு ஆளும் அரசாங்கத்தின் கொள்கைகள்தான் காரணம் என கூறப்பட்டது. பாஜக ஆட்சியில் இருந்தால் அதன் கொள்கைகளும் அப்படியே இருக்கும் என்பதால் அதன் அடிப்படையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர் என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகின. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, 240 இடங்களில் வென்ற பாஜக, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க இருக்கிறது. ஆட்சியமைக்க 272 எம்பிகள் ஆதரவு தேவை என்னும் நிலையில், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக நம்பியிருக்கிறது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு மாறாக தற்போது கூட்டணி ஆட்சி என முடிவுகள் வந்திருப்பதால் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதனால் பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது. கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதற்கும் தேர்தல் முடிவுகள் வெளியானதற்கும் இடையே, இப்படி பங்குச் சந்தையில் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்தால், முதலீட்டாளர்கள் 30 லட்சம் கோடி வரை இழந்துள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோடியும் அமித் ஷாவும் ஏன் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சொன்னார்கள்?

கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதற்கும் தேர்தல் முடிவுகள் வெளியானதற்கும் இடையே, பங்குச் சந்தையில் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்தால், முதலீட்டாளர்கள் 30 லட்சம் கோடி வரை இழந்துள்ளதைத்தான் ராகுல் காந்தி குற்றச்சாட்டாக முன்வைத்திருக்கிறார். முதலீட்டாளர்களின் இந்த இழப்புக்குக் காரணம், தேர்தலுக்கு பிந்தைய போலியான கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் பங்கு சந்தையில் நடந்த மிகப்பெரிய ஊழல் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச்சந்தைகளில் திட்ட ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை. பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவு அன்று முதலீட்டாளர்கள் ரூ.30 லட்சம் கோடியை இழந்துள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக வெற்றியை மிகைப்படுத்தியது ஏன்? பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும்படி 5 கோடி குடும்பங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஏன் ஆலோசனைகளை வழங்கினர்? முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவதுதான் அவர்களின் வேலையா? ரிசல்ட் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக முதலீடு செய்து 5 கோடி குடும்பங்களை ஏமாற்றி பெரும் லாபம் சம்பாதித்த பாஜகவுக்கும் போலியான கருத்துக் கணிப்பாளர்களுக்கும், சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் என்ன தொடர்பு? இது இதுவரை இல்லாத மிகப் பெரிய பங்குச் சந்தை மோசடி. எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

‘ஜூன் 4ஆம் தேதிக்கு முன்பு பங்குகளை வாங்கினால், அதன் விலை அடுத்தடுத்த நாட்களில் உயரும் என்று மோடியும் அமித்ஷாவும் அதானிக்கு சொந்தமான என்டிடிவிக்கு பேட்டியளித்தது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்’ என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...