No menu items!

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 05

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 05

இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம். வரும் நாட்களில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அளவு; பணம் இருந்தாலும் வாங்க பொருட்கள் இருக்காது எனும் நிலை வரும் என்று ஆட்சியாளர்களே எச்சரிக்கிறார்கள். ஏன் இலங்கை இப்படியொரு நெருக்கடிக்குள்ளானது? இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? வரும் நாட்கள் எப்படி இருக்கும்? இந்த மினி தொடரில் விளக்குகிறார் ஈழத் தமிழ் மூத்த பத்திரிகையாளர் கருணாகரன்…

இலங்கையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட – நம்பப்பட்ட – காலிமுகத்திடல் போராட்டம் (Galle face Revolation)   அப்படியே சுருங்கி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மிகப் பெரிய எழுச்சியைக் கொண்ட Galle face Revolation, யாருமே எதிர்பார்த்திராத வகையில் ராஜபக்சவினரை அதிகாரத்திலிருந்து அகற்றியது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியில் அசைக்கவே முடியாது என்றிருந்த கோட்டபயாவை நாட்டை விட்டே ஓட வைத்தது. ஆனாலும் இறுதியில் அது மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை பிரமராக்கி, இப்பொழுது ஜனாதிபதியாக்கியுள்ளது.

எதிர்பார்த்திராத – பொருத்தமற்றவருக்கு – பெரிய பரிசை அளித்திருக்கிறது. இதற்கு ஒரு வகையில் (எதிர்பாராத விதமாக) இந்தப் போராட்டம் (Galle face Revolation) மறைமுகப் பங்களிப்பைச் செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதற்குப் பரிசாக  – பொருத்தமற்றவருக்குக் கிடைத்த அதிகாரத்தினால் – அது (Galle face Revolation) பெரிய தண்டனையையும் உடனடியாகவே பெற்றுள்ளது.

ஆம், ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, உடனடியாக (24 மணிநேரத்துக்குள்) போராட்டக்காரர்கள் மீது கடுமையான படை நடவடிக்கையை – ஒடுக்குமுறையை – மேற்கொண்டுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பிணையில் சட்டத்தரணிகள் அமைப்பு மீட்டுள்ளது. இதன்போது பி.பி.ஸி செய்தியாளர் உள்பட வேறு சில ஊடகவியலாளர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ராஜபக்சவினரே செய்யாத, செய்யத் துணியாத காரியத்தை ரணில் விக்கிரமசிங்க செய்திருக்கிறார். ரணிலின் இயல்பும் வழிமுறையும் அதுதான். எந்தப் போராட்டத்தையும் மிகச் சாதாரணமாக ஒடுக்கி விடுவார். மக்கள் எழுச்சியோ, போராட்டமோ, எதிர்ப்போ அவர் விரும்பாத, ஏற்காத ஒன்று. இதற்கு வாய்ப்பாக அவருக்கு இப்பொழுது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியும் கிடைத்துள்ளது. விடுவாரா சும்மா?

எதிர்பார்க்கப்பட்டது கட்டமைப்பு மாற்றம் (System Change). இலங்கைக்கு வேண்டியதும் அதுதான். இதையே இலங்கையின் அமைதியைக் குறித்தும் எதிர்காலத்தைக் குறித்தும் சிந்திப்போரும் வலியுறுத்துகின்றனர். சர்வதேச சமூகத்தின் விருப்பமும் இதுதான். இதை அது தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. முக்கியமாக இலங்கையின் பன்மைத்துவத்தை உறுதி செய்யுமாறு. அதற்கேற்ற வகையில் அரசியலமைப்பை மாற்றுமாறு.

இப்போதுள்ள அரசியலமைப்பு, பவுத்த சிங்கள முதன்மைவாதத்தையே அடிப்படையாகக் கொண்டது. பவுத்தத்துக்கே முன்னுரிமை என்று அழுத்தமாக எழுதப்பட்டது. இந்த அரசியலமைப்பே நடைமுறையில் உள்ளது. இதனால்தான் ஏகப்பட்ட பிரச்சினைகளும் இன முரண்பாடுகளும் உள்ளன. அத்துடன் தனியொரு மனிதருக்கு எல்லையற்ற அதிகாரத்தைக் குவித்துள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறையையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக உள்ளது.

இதை ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த காலத்தில் வலியுறுத்தி வந்துள்ளார். இதெல்லாம் பல்லின மக்களைக் கொண்ட இலங்கைக்குப் பொருத்தமானவை அல்ல. இந்த மாற்றங்களும் திருத்தங்களும் நிகழாமல், நிகழமுடியாமல் இருப்பதே இலங்கையின் நெருக்கடிக்கும் சிதைவுக்கும் காரணம்.

இப்பொழுது அதிகாரத்துக்கு வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, லிபரல் ஜனநாயகவாதி என்று கருதப்படுகின்றவர் – கொண்டாடப்படுகின்றவர். புதிய மாற்றங்களைக் கோருகின்றவர். குறிப்பாக பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தைக் கோரியவர். மாற்றங்கள் வேண்டும் என்றவர்.

ஆனாலும் இதை இனி அவர் ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகமே. ஏனென்றால் இப்போது அவர் நிறைவேற்று அதிகாரமுடைய பதவிக்கு வந்து விட்டார். அதன் அதிகார எல்லைகளை ருசிக்காமல் அதை அவர் சுருக்கிக் கொள்ள விரும்ப மாட்டார். அப்படி அதிகாரத்தை இழக்க விரும்பும் மனநிலையுடையவரல்ல ரணில்.

கடந்த காலத்தில் பட்டலந்த படுகொலை, இன ஒடுக்குமுறை அரசியலின் பொறுப்பில் (பிரமராக) இருந்தவர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் ரணிலினுடைய அணுகுமுறைகள் பொதுப்பரப்பில் கவர்ச்சிகரனமானவையே. குறிப்பாக மேற்குலக வட்டாரங்களில் ரணிலுக்குப் பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. ஒன்று அவர் வெளிப்படையான கடும்போக்குவாதி இல்லை என்பது. இரண்டாவது மேற்குலகின் நண்பராக, அதனுடன் நிபந்தனைகளற்று ஒத்துழைக்கக்கூடிய தலைவர் என்பது. மூன்றாவது ஜனநாயகத்தை அதிகம் விரும்புகின்றவர், அதைப் பலப்படுத்துவதற்கான வழிமுறைகைளைக் குறித்து யோசிப்பவர் என்பது.

இந்தச் சூழலில் இலங்கையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? ரணில் தலைமையிலான ஆட்சியின் செயற்பாடுகள் எத்தகையனவாக அமையும். காலிமுகத்திடல் (Galle face Revolation) போராட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி அமையும்? எப்படி அமைய வேண்டும் என்பதைக் குறித்துச் சிந்திப்பது அவசியமாகும்.

போராட்டத்தை முன்னெடுத்தோரின் இலக்குகளில் பாதி இப்பொழுது நிறைவேறி விட்டது. முக்கியமாக ராஜபக்சவினர் நேரடியான அரசியல் அரங்கிலிருந்து (முன்னரங்கிலிருந்து) அகற்றப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் (மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஷசிந்திர ராஜபக்ச)  பாரளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். கட்சி ரீதியாகவும் அவர்களுடைய பொது ஜன பெரமுனவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

ரணில் விக்கரமசிங்கவின் வெற்றிக்கு அதுவே மறைமுகப் பங்களிப்பையும் செய்துள்ளது. இதற்கு நேரடிக் காரணம், பாராளுமன்றத்தில் நிலவும் சீரழிந்த அரசியல் நடத்தைகளாகும். அது அரசியல் வணிகத்துக்கும் அதற்குத் தோதான பேரங்களுக்கும் கீழ்ப்படிந்தது. எனவேதான் இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று போராளிகள் கோரி வந்தனர்.

ராஜபக்சவினரை அதிகாரத்திலிருந்து அகற்றிய கையோடு பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட போராளிகள், மக்களின் மன உணர்வுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற மாதிரிப் பாராளுமன்றம் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். ஆனாலும் அதை மீறியே ரணில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரணிலை போராளிகள் மட்டுமல்ல மக்களும் பாராளுமன்றத்தில் உள்ள அரசியல் தரப்பினரும் கூட ஏற்றவர்களில்லை. ஆனாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 134 பேர் அவரைத் தெரிவு செய்து வெற்றியடைய வைத்துள்ளனர்.

மாற்றத்தை (System Change) செய்ய  முடியாத நிலையில்தான் இந்த நாடும் போராட்டத் தரப்பும் (Galle face Revolation)  இன்னும் இருக்கின்றனர் என்று தெரிகிறது. இதனால்தான் இப்பொழுது அவர்கள் (Galle face Revolation) அரச ஒடுக்குமுறைக்குள்ளாக வேண்டி வந்தது. இதற்குப் பிரதான காரணம், இந்தப் போராட்டத்தில் எதிர்பார்ப்புகள் முன்வைக்கப்பட்ட அளவுக்கு, அவற்றைச் செயற்படுத்துவதற்கான வழிமுறைத் தொடர்ச்சி முன்வைக்கப்படவில்லை. அதை ஒழுங்கமைக்கும் முறைமைகள் பற்றிச் சிந்திக்கவில்லை.

எதிர்த்தரப்பின் அதிகாரம், அதன் மாற்றங்கள், அதனுடைய புதிய தந்திரோபயங்கள் எல்லாம் வலுவானவை. அவை பற்றியெல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

அதைச் சிந்திப்பதற்கு, அதைக்குறித்து உரையாடுவதற்கு, அதை எதிர்கொள்வதற்கு உறுதியான – தெளிவான தலைமைத்துவம் வேண்டும். இந்தப் போராட்டத்தில் அந்தத் தன்மை குறைவாகவே காணப்பட்டது. ஏன் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், இளைய பௌத்தத் துறவிகள், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரள் அங்கே இருந்தாலும் அவர்களை வழிப்படுத்தக் கூடிய தலைமை என்ற ஒன்று வெளிப்படையாக – முகம்காட்டக் கூடிய அளவில் இல்லை. பின்னணியில் முன்னிலை சோசலிஷக் கட்சி மற்றும் மக்கள் ஐக்கிய முன்னி என்ற ஜே.வி.பி இருக்கிறது என்று சொன்னாலும் அந்தச் சக்திகளால் முழுமையாக இந்தப் பிரச்சினையைக் கையாள முடியவில்லை.

இதை – இந்தச் சூழலை, இந்தப் பலவீனத்தை ரணில் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒன்று தனக்குப் போட்டியாக – நிகராக இன்றைய இலங்கை அரசியற் சூழலில் யாரும் –எந்தத் தரப்பும் –  இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார். இரண்டாவது, தனக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் மூலம் மிக விரைவாக அவர் போராட்டத்தை ஒடுக்க முற்படுவார். பல முனைகளிலும் அதிகாரத்தைப் பிரயோகிக்கவும் கட்டமைக்கவும் முற்படுவார்.

அப்படியென்றால் அவருடைய அரசியல் பலவீனங்களை  மறைத்துக் கொள்வதுடன், தன்னை முன்னலையிலும்  வைத்துக் கொள்ள முடியும். மூன்றாவது சர்வதேச சமூகத்தின் (தன்னுடைய அரசியல் நட்பு நாடுகளுடன் இணைந்து) ஆதரவுடன் மக்களுடைய உடனடிப் பிரச்சினைகளான எரிபொருள் நெருக்கடி, எரிவாயுப் பிரச்சினை, விவசாயத்துக்குத் தேவையான உள்ளீட்டு விவகாரம் போன்றவற்றுக்கு ஓரளவாவது தீர்வைக் காண முற்படுவார். இதன் மூலம் மக்களின் எழுச்சியையும் எதிர்ப்பலையையும் தணித்து விட முயற்சிப்பார்.

ஒப்பீட்டளவில் ரணில் விக்கிரமசிங்க மிகப் பெரிய அரசியல் தந்திரசாலி. அவர் என்ன நினைக்கிறார், என்ன செய்யப்போகிறார் என்று எவராலும் கண்டறிய முடியாது என்பா். அதுதான் தொடர்ந்தும் நடக்கப்போகிறது. ரணில் என்ன செய்வார்? யாரை வீழ்த்துவார். யாரை அணைத்துக் கொள்வார் என்று யாருக்குமே தெரியாது. அப்படியானதொரு இருண்ட காலகட்டத்தில் – இருண்ட சூழலில் மக்களாகிய நாம் வந்திருக்கிறோம்.

இப்பொழுது போராட்டத்தை முன்னெடுத்தோர் (Galle face Revolation) மேலும் உறுதிப்பாட்டுடனும் புதிய அனுபவத் தெளிவோடும் மீளெழுச்சி கொள்ள வேண்டும். குறைந்த ஆபத்தை விட கூடிய ஆபத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஆகவே காலிமுகப் போராட்டத் தரப்புக்கும்  (Galle face Revolation) மாற்றத்தை விரும்புகின்ற  மக்களுக்கும் இப்பொழுதுதான் பெரிய வேலைகள் கிடைத்துள்ளன. வரலாறு அந்தப் பொறுப்பை சுமத்துகிறது. ஆம், புதிய முறையில் எதிரியை – ரணிலை – நிறைவேற்று அதிகாரத்தை சவால் (Chalange) செய்ய வேண்டும். இது எளிய விசயமல்ல. உயிராபத்துகள் நிறைந்தது. அதிகாரத்துடன் மோதுவதும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் இலகுவானதல்ல. இதுவே வரலாற்றின் அனுபவமும் உண்மையுமாகும்.

போருக்குப் பிந்திய இலங்கை இன்னொரு போரை – அதிகாரத்துக்கு எதிரான – பொருளாதா நெருக்கடிக்கு எதிரான போரைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. கால நிர்ப்பந்தமே மாற்றங்களை எப்பேதும் உண்டாக்குவன. அந்தக் காலம் இலங்கைக்கு வாய்த்திருக்கிறது. இனி மக்களுடைய மனங்களிலும் கரங்களிலும்தான் அனைத்துமே. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...