No menu items!

சிறுகதை: வந்தவள் – ராஜேஷ் குமார்

சிறுகதை: வந்தவள் – ராஜேஷ் குமார்

யோகானந்த் தன்னுடைய அலுவலக அறையில், அந்த ஹை பர்ஃபாமென்ஸ் கம்ப்யூட்டர் சிஸ்டத்திற்கு முன்பாய் உட்கார்ந்து, பிசினஸ் லைன் கிராபிக்கை உன்னிப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்த போது, இண்டர்காம் செவியை இம்சிக்காத டெஸிபிலில் இனிமையாய் கூப்பிட்டது.

கம்ப்யூட்டரின் திரையிலிருந்து பார்வையை நகர்த்தாமல் இண்டர்காமின் பட்டனை மட்டும் தட்டிவிட்டு “எஸ்’’ என்றார்.

மறுமுனையில் அவருடைய பர்சனல் செகரட்ரி குரல் கொடுத்தார்.

“ஸார் ஜர்னலிஸ்ட் வர்ஷா வந்து உங்களுக்காக வெயிட பண்ணிட்டிருக்காங்க. பனிரெண்டு மணிக்கு அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்து இருக்கீங்க…”

“வரச் சொல்லு…”

“ஸார்… உங்களுக்கு பனிரெண்டரை மணிக்கு வேற ஒரு முக்கியமான அப்பாய்ண்ட் இருக்கு…. காந்திலால் லால்சந்த் டைமண்ட்ஸ்க்கு போகணும்…”

“தெரியும்… அந்த பொண்ணை அனுப்பு.”

“ஓ.கே. ஸார்.”

மறுமுனையில் செக்ரட்ரி மெளனமாகிவிட, யோகானந்த் பார்த்துக் கொண்டிருந்த கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு, மினரல் வாட்டர் பாட்டிலை கையில் எடுத்தார். இரண்டு வாய்த் தண்ணீரைக் குடித்துவிட்டு நாற்காலிக்கு சாய்ந்த விநாடி அறையின் கதவு மெலிதாகத் தட்டப்பட்டு, “மே… ஐ… கம்மின்” என்ற குரல் ஒரு பட்டு நூலின் இழை போல் உள்ளே வந்தது.

”எஸ்… கெட்… இன்.”

அந்த வர்ஷா கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள். இருபத்தைந்துக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட ஒரு வயதுக்குள் அழகாக சிக்கியிருந்தாள். ரோஸ் மில்க் நிற சுடிதார் அவளுடைய நிறத்தோடு போட்டியிட்டு தோற்றுக் கொண்டிருந்தது.

‘’குட் மார்னிங் ஸார்.”

“வாம்மா…. இன்னிக்கு உனக்கு நான் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்ததையே சுத்தமா மறந்துட்டேன்.”

வர்ஷா தன்னுடைய வரிசை தவறாத பல்வரிசையைக் காட்டிச் சிரித்தாள். “ஸார்… நீங்க ஒரு மல்டி பிசினஸ் ஓனர்…! என்னை மாதிரியான ஒரு ஜர்னலிஸ்ட்டுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்ததை மறக்காம இருந்தா அதுதான் அதிசயம்…”

“இது எந்தப் பத்திரிகைக்கான பேட்டி?”

“’மிட் நைட் சன்’ ஸார்… நார்த்ல அதிகமா விக்கிற ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இதுக்கு ரெண்டாவது இடம். நான் அன்னிக்கே சொன்னேனே ஸார்…”

“ஸாரிம்மா… மறுபடியும் மறந்துட்டேன்…” யோகானந்த் தனது இடதுகை விரல்களால் தன் முன் நெற்றியை மெல்ல தட்டிக்கொண்ட விநாடி அவருடைய செல்போன் டயல் டோனை வெளியிட்டது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.

செல்போனின் டிஸ்ப்ளேயில் மகள் ‘தேஜஸ்வி’யின் பெயர் தவழ்ந்து கொண்டிருந்தது. ‘ஹேண்ட் செட்’டை காதுக்குப் பொருத்தி மெல்லக் குரல் கொடுத்தார்.

“சொல்லும்மா.”

“டாட்… நானும் அம்மாவும் காந்திலால் லால்சந்த் டைமண்ட்ஸ் ஷோரூமுக்கு வந்து டிசைன்களைப் பார்க்க ஆரம்பிச்சுட்டோம். நீங்க எப்ப வர்றீங்க…”

“எப்படியும்… நான் ஒரு மணிக்குள்ளே வந்துடறேம்மா…. இங்கே ஒரு இண்டர்வியூ போயிட்டிருக்கு…. ‘மிட் நைட் சன்’ மேகஸீனிலிருந்து வந்து இருக்காங்க… நீயும் அம்மாவும் உங்க மனசுக்குப் பிடிச்ச டிசைன்களை எல்லாம் எடுத்து வையுங்க… நான் வந்து பின்னாடி ஏதாவது ஒண்ணை செலக்ட் பண்ணிக்கலாம். விலையைப் பத்தி கவலைப்படாதேம்மா… அம்பது லட்சம் வரைக்கும் போகலாம். வர்ற வாரம் உனக்கு நடக்கப் போகிற நிச்சயதார்த்தத்துல அந்த வைர நெக்லஸ்தான் டாக் ஆஃப் த ஃபங்கஷனாய் இருக்கணும்.”

“தேங்க்யூ டாட். வீ ஆர் வெயிட்டிங். ஒரு மணிக்குள்ளே வந்துடுங்க… ரொம்பவும் லேட் பண்ணிடாதீங்க….”

“வந்துடறேம்மா.” சொன்ன யோகானந்த் செல்போனை அணைத்துவிட்டு எதிரே உட்கார்ந்திருந்த வர்ஷாவை ஒரு புன்முறுவலோடு பார்த்தார்.

“ஸாரி…. பேட்டியை ஆரம்பிம்மா… நான் அரைமணி நேரத்துக்குள்ளே முடிச்சுட்டு கிளம்பணும்.”

“பேட்டியோட முதல் கேள்வியைக் கேட்கட்டுமா… ஸார்?”

“ம்…”

“உங்க டாட்டரோட பேரு தேஜஸ்வியா?”

“ஆமா.”

“தேஜஸ்விக்கு வர்ற வாரம் நிச்சயதார்த்தம்… கல்யாணம் எப்ப ஸார்?”

“கல்யாணம் அடுத்த மாசம்….”

“மாப்பிள்ளை யாரு ஸார்?”

யோகானந்த் சற்றே முகம் மாறினார். “என்னம்மா வர்ஷா…? பேட்டிக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளையெல்லாம் கேட்டுகிட்டு இருக்கே. இந்தப் பேட்டி ‘ஹி ஈஸ் த டாப்பர்’ என்கிற தலைப்புல என்னோட மல்டி பிசினஸ் சம்பந்தப்பட்ட கேள்விகளாகத்தான் இருக்கும்ன்னு சொன்னே….”

“இதுவும் முக்கியமான கேள்விகள்தான் ஸார். ஏன்னா நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம் உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக உங்ககிட்ட கேட்க வேண்டியிருக்கு…”

எரிச்சலின் எல்லைக்குப் போனார் யோகானந்த்.

“நீ கேள்விப்பட்ட விஷயமா?”

“ஆமா ஸார்.”

”நீ என்ன கேள்விப்பட்ட?”

“தேஜஸ்வி உங்க பொண்ணு இல்லையாமே?”

யோகானந்த்தின் முகத்தில் கிரகண இருள் படிந்தது போல் ஒரு இருட்டு கப்பிக் கொண்டது. வர்ஷாவையே மெளனமாய்ப் பார்த்தார். உதடுகளின் ஓரம் ஒரு புன்னகையை நழுவவிட்டுக் கொண்டே அந்த வர்ஷா கேலியான குரலில் கேட்டாள்.

“என்ன ஸார்… பேச்சையே காணோம்?”

“உனக்கு இந்த விஷயத்தை சொன்னது யாரு?”

“நம்பத்தகுந்த ஒரு இடம்… என்னோட கையில் அதுக்கான ஆதாரங்களும் இருக்கு. நீங்க எதையும் மறைக்கவோ பொய் பேசி பூசி மெழுகவோ முடியாது. நான் பிசினஸ் விஷயமா பேசி பேட்டி எடுக்க இங்கே வரலை. தேஜஸ்வியைப் பத்தின உண்மையான தகவல்களைத் தெரிஞ்சுக்கத்தான் உங்களுக்கு முன்னாடி வந்து உட்கார்ந்துட்டிருக்கேன். அயாம் நாட் ஏ ஜர்னலிஸ்ட்.”

அந்த ஏஸி அறையின் குளிரிலும் வியர்த்து சொதசொதத்துப் போன தன்னுடைய நெற்றியை, கையிலிருந்த கர்சீப்பால் ஒற்றிக்கொண்டார் யோகானந்த்.

வர்ஷா தன்னிடமிருந்த ஒரு ஃபைலைப் பிரித்து வைத்துக்கொண்டு, அதிலிருந்த ஜெராக்ஸ் தாளை எடுத்து அதில் பார்வையைப் போட்டபடி கேட்டாள்.

“1998-ம் வருடம் நீங்களும் உங்க மனைவி ஜெகதாவும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இருக்குற கோலாப்பூர்க்கு போயிருக்கீங்க. அன்னிக்கு தேதி ஜனவரி 7 புதன்கிழமை சரியா?”

“ம்” என்று முனகியபடி தலையாட்டி வைத்தார்.

“எதுக்காக போனீங்கன்னு சொல்ல முடியுமா?”

“அ… அ… அது வந்து…”

“அதை பத்தி பேச உங்களுக்கு கஷ்டமாயிருக்கும், நானே சொல்றேன். கோலாப்பூர்ல ‘க்ரேஸ் சில்ட்ரன் அடாப்ஷன் சென்டர்’ என்கிற பேர்ல குழந்தைகள் தத்தெடுப்பு மையம் ஒன்று இருக்கு. ஒரு பெண் குழந்தைய தத்து எடுக்குறதுக்காக நீங்களும் உங்க மனைவியும் போனீங்க. இந்தியா முழுவதும் இருக்கிற தத்தெடுப்பு மையங்கள் எல்லாமே ‘காரா’ (CARA) அதாவது சென்டரல் அடாப்ஷன் ரீசோர்ஸ் அதாரிட்டி என்கிற சட்ட ரீதியான அமைப்பின் கீழே வர்றதால அந்த அமைப்போட ஆபீஸரைப் போய் பாத்தீங்க. பிறந்து ஆறு மாசமே ஆன ஒரு பெண் குழந்தைய தத்தெடுப்பு விதிகளை முறையாய் கடைபிடிச்சு தத்து எடுத்தீங்க. அந்த குழந்தைக்கு தேஜஸ்வின்னு பேர் வெச்சீங்க. தேஜஸ்வி ஒரு அநாதைக் குழந்தை என்கிற விஷயம் உறவுகளுக்கும் நன்பர்களுக்கும் தெரியாமல் இருக்கணும்கிறதுக்காக, கோலாப்பூர்லயே ஒரு வீடு எடுத்து, அஞ்சு வருஷ காலம் தங்கிட்டு, குழந்தை பெரியவளானதும் சென்னை வந்தீங்க. நீங்க எதிர்ப்பார்த்த மாதிரியே தேஜஸ்வி உங்க குழந்தைன்னு எல்லாரும் நம்பீட்டாங்க. தான் தத்து எடுக்கப்பட்ட குழந்தைன்னு தேஜவிக்கும் தெரியாது…. என்ன சார்… நான் எல்லாதையும் சரியா சொல்லிட்டு வர்றேனா?“

யோகானந்த் ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்து உட்கார்ந்து வர்ஷாவை கோபப் பார்வையோடு கேட்டார்.

“இப்ப எதுக்காக பழய கதை எல்லாம் கிளறீட்டு இருக்கே?”

“இது கிளற வேண்டிய நேரம், கிளறிட்டு இருக்கேன். தேஜஸ்வி தத்து எடுக்கப்பட்ட ஒரு அநாதை குழந்தை என்கிற விஷயம் அவள கட்டிக்கப் போகிற மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளையோட அம்மா, அப்பாவுக்கும் தெரியுமா?”

“என்ன… ப்ளாக் மெயில் பண்ண வந்துருக்கியா?”

“திஸ் இஸ் நாட் ப்ளாக்மெய்ல். நான் உண்மையைத் தெரிஞ்சுக்கத்தான் வந்திருக்கேன். அதுக்கான உரிமையும் எனக்கு இருக்கு.”

“என்ன உரிமை?”

“சென்ட்ரல் அடாப்ஷன் ரிஸோர்ஸ் அதாரிட்டி என்கிற அமைப்பில் ‘காரா பிளானர்’ (CARA PLANNER) என்கிற ஒரு போஸ்ட் இருக்கு. அதைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது.”

“இப்ப தெரிஞ்சுக்குங்க. அந்த போஸ்ட்ல இப்ப இருக்கிறது நான்தான். தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்பட்டு இந்த சமூகத்தில் நல்லபடியாய் வாழக்கூடிய அளவுக்கு தகுதியுள்ளவங்களா இருக்காங்களா இல்லையான்னு மானிட்டரிங் பண்ண வேண்டியது என்னுடைய வேலை. 24 வருஷதுக்கு முன்னால் உங்களால் தத்து எடுக்கப்பட்ட தேஜஸ்விக்கு அடுத்த வாரம் நிச்சையதார்த்தம், அடுத்த மாதம் கல்யாணம். இது ஒரு சந்தோஷமான விஷயம்தான். இருந்தாலும் அவளை கல்யாணம் பண்ணிக்கப்போகிற மாப்பிள்ளைக்கும், அவளை மருமகளா ஏத்துக்கப்போகிற மாப்பிள்ளையோட அம்மா, அப்பாக்கும் தெஜஸ்வி உங்களால தத்து எடுக்கப்பட்ட ஒரு அநாதை குழந்தைதான் என்கிற விஷயத்தை இப்பவே சொல்லிடறது நல்லதில்லையா…? உண்மைய மறைச்சு கல்யாணம் பண்ணி வெச்சா நாளைக்கு தேஜஸ்வியோட வாழக்கையே ஒரு கேள்விக்குறியாய் மாற வாய்ப்பு இருக்கு. இந்த அபாய கோணத்த நீங்க ஏன் யோசிச்சு பார்க்கலை.”

யோகானந்தத்தின் உதடுகளில் ஒரு புன்முறுவல் ஸ்லோமோஷனில் பரவியது.

“எதுக்காக யோசிச்சு பாக்கணும்?”

“என்ன சார் சொல்றீங்க… உண்மையை மறைக்கிறது எவ்வளவு பெரிய தப்பு?”

“நான் உண்மையை மறைக்கலையே… மாப்பிள்ளைகிட்டேயும் அவரோட அம்மா அப்பா கிட்டேயும் உண்மையைச் சொல்லிட்டேனே?”

“அவங்க ஏத்துகிட்டாங்களா?”

”ம்… ஏத்துகிட்டாங்க.”

“ஆச்சர்யமாயிருக்கே?”

“இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு? தேஜஸ்வி என்னோட பொண்ணுன்னு சொல்றதுல எந்த பிரச்சனையும் இல்லையே?”

வர்ஷாவின் புருவங்கள் உயர்ந்தன.

“என்ன ஸார் சொல்றீங்க, தேஜஸ்வி உங்களால தத்து எடுக்கப்பட்ட பொண்ணுன்னு தெளிவா சொன்னீங்களா?”

யோகானந்த் மெல்லச் சிரிக்க, வர்ஷா எரிச்சலானாள்.

“இந்த சிரிப்புக்கு என்ன ஸார் அர்த்தம்?”

“தேஜஸ்வி தத்து எடுக்கப்பட்ட குழந்தை இல்லை, நாங்க பெத்த குழந்தைன்னு அர்த்தம். 24 வருஷதுக்கு முன்னாடி நானும் என்னோட மனைவியும் கோலாப்பூர்க்கு போய் க்ரேஸ் சில்ரன் அடாப்ஷன் சென்டர்ல ஆறு மாத ஒரு பெண் குழந்தைய தத்து எடுத்தது உண்மை. குழத்தைக்கு தேஜஸ்வின்னு பேர் வெச்சு கோலாப்பூர்லயே 5 வருஷம் குடியிருந்து, குழந்தை  கொஞ்சம் பெரியவளானதும் சென்னைக்கு திரும்பலாம்னு முடிவு பண்ணிருந்தோம். ஆனா தத்து எடுத்த குழந்தை தேஜஸ்வி ஒருவருஷம் வரைக்கும்தான் உயிரோட இருந்தா. அதற்கப்புறம் ஹார்ட் பிராபளத்துல இறந்துட்டா.“

“அ… அ.. அப்படீன்னா இப்ப இருக்குற தேஜஸ்வி…?”

“எங்க உதிரத்துல பிறந்த குழந்தை. தத்து எடுத்த குழந்தை இறந்து போன சில மாதங்களிலேயே ஜெகதா கர்ப்பம் ஆனா. எங்களுக்கு குழந்தையே பிறக்காதுன்னு டாக்டர்கள் சொல்லிட்டதாலதான் நாங்க ஒரு குழந்தைய தத்து எடுக்க முடிவு பண்ணினோம். ஆனா, கடவுள் எங்களுக்கு குழந்தை பாக்கியத்த கொடுத்தார். ஜெகதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த “தெஜஸ்வியே’ மறுபடியும் பிறந்தாய் நினச்சு, ‘தேஜஸ்வி’ என்கிற அதே பேர வெச்சோம். கோலப்பூர் வாழ்க்கை எங்களுக்கு ரொம்பவும் பிடிச்சு போனதால அங்கேயே ஒரு அஞ்சு வருஷம் இருந்துட்டு சென்னை திரும்பினோம்.”

வர்ஷா சில விநாடிகள் இறுகிப்போன முகத்தோடு மெளனமாய் இருந்துவிட்டு கேட்டாள்.

“நீங்க தத்து எடுத்த குழந்தை தேஜஸ்வி இறந்துட்டதா சொல்றீங்க அதுக்கான டெத் சர்டிபிகேட் உங்ககிட்ட இருக்கா?“

“அடாப்ஷன் சட்ட ரீதியான டெத் செர்டிபிகேட்டும் அது தவிர மருத்துவ ரீதியான டாக்டர் சர்டிபிகேட்டும் இருக்கு.”

சொன்ன யோகானந்த் தன்னுடைய மெஜையின் இழுப்பறையை திறந்து ஒரு சிறிய ஃபைலை எடுத்து குடுத்தார். அதை வர்ஷா வாங்கிப் பார்த்து கொண்டிருக்கும்போதே இன்னொரு ஃபைலையும் எடுத்து நீட்டினார் யோகானந்த்.

“இதையும் பாத்துகம்மா.”

“என்ன இது?”

”எங்களுக்குப் பிறந்த குழந்தை தேஜஸ்வியோட பர்த் சர்டிபிகேட். பேபி டெலிவரிக்காக ஜெகதா அட்மிட் ஆகியிருந்த போது கோலாப்பூர் கோல்டன் கிட்ஸ் ஹாஸ்பிடலின் மெட்டர்னிடி டிஸ்சார்ஜ் சம்மரி சம்மந்தப்பட்ட ரிப்போர்ட்ஸும் இதுல இருக்கு. நிதானமா பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வாம்மா…”

வர்ஷா வியர்த்த முகமாய் யோகானந்தை ஏறிட்டாள்.

“ஸாரி… ஸார்… நீங்க தத்து எடுத்த குழந்தை தேஜஸ்வி சம்பந்தமாய், எங்களுக்கு வந்த ஒரு அனானிமஸ் லெட்டரை நம்பி உங்களை விசாரிக்க வந்துது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போ புரியுது….”

யோகானந்த் தன் புன்னகையின் பரப்பளவை பெரிதாக்கிக்கொண்டே சொன்னார்.

“இதோ பாரம்மா… நான் பரம்பரை பணக்காரன் கிடையாது. கஷ்டப்பட்டு உழைச்சு படிப்படியா முன்னேறி மேலே வந்தவன். நான் ஒரு மல்டி பிசினஸ் மேனா இருக்குறது பல பேர்க்குப் பிடிக்கல. அதுல ஒருத்தன் வீசின கல் தான் இது… முதல் கல்… இது மாதிரி எத்தின கல் பறந்து வந்தாலும் சரி, எம்மேல உரசிட்டு போகுமே தவிர என்னை காயப்படுத்தாது. அடுத்த வாரம் தேஜஸ்வியோட நிச்சயதார்த்தம். அடுத்த மாசம் கல்யாணம். ரெண்டுக்கும் தவறாமே வந்துடும்மா… இப்ப புறப்படலாமா…?”

பேசி முடித்த யோகானந்த் அறைக் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட, வர்ஷா தலை குனிந்தபடி அவரைப் பின் தொடர்ந்தாள்.

ஓவியம்: அச்சுதன் ரவி

Rajesh Kumar
ராஜேஷ் குமார்

12 COMMENTS

  1. வா…வ். சூப்பரான கதை! அப்புறம் ஒரு விஷயம் கவனிச்சேன். உங்களுக்கு “ரோஸ்” கலர்னா ரொம்ப இஷ்டமோ? உங்களுடைய பெரும்பாலான கதைகளில் கதாநாயகி/ஏதேனும் பெண் கேரக்டரின் அறிமுகப் படலத்தில் “ரோஸ்” நிற உடை தான் வியாபித்திருக்கும். சரி தானே சார்?

  2. வித்தியாசமான கருவில் உதித்த சிறப்பான சிறுகதை. வழக்கம் போல் அசத்தலான முடிவு சிறப்பு. வாழ்த்துகள்

  3. சரியா திருப்பம்ன… தத்து தகவல்கள் அறிந்து கொண்டேன்… நன்றி அண்ணா????????

  4. நல்ல கதை மூலம் தத்து எடுப்பது பற்றி தகவல் தெரிந்து கொண்டோம்.

  5. யோகானந் தகவல்கள் பொய் எனவும் தேஜஸ்வி தத்தெடுப்புக்குப் பின்னால் ஒரு ரகசியம் மறைந்திருப்பதாக தோன்றுகிறது.

  6. உங்கள் முத்திரையை சுமந்து வரும் மற்றோரு கதை… மிகவும் அருமை சார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...