No menu items!

திரைக்கதை எழுதத் தெரியாதவர்: ஜெயமோகனை சாடும் மலையாள எழுத்தாளர்

திரைக்கதை எழுதத் தெரியாதவர்: ஜெயமோகனை சாடும் மலையாள எழுத்தாளர்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சர்ச்சைக்குரிய விமர்சனத்துக்கு, “சினிமாவுக்கு எழுத கேரளத்துக்கு வந்த உங்களுக்குத் திரைக்கதை எழுதத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு தவிர்த்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கான பழிவாங்குதல் தானா இந்த வசை மாரி?” என்று காட்டமாக பதிலளித்துள்ளார் மலையாள எழுத்தாளர் உண்ணி. ஆர்.

உண்ணி. ஆர்., தற்கால மலையாள இலக்கியவாதிகளில் முக்கியமானவர். ஏழு சிறுகதைத் தொகுப்புகளும் ஒரு நாவலும் வெளிவந்துள்ளன. இவரது ‘பாதுஷா என்ற கால் நடையாளன்’ சிறுகதைகளின் தொகுப்பு தமிழிலும் வெளியாகியுள்ள. கட்டுரைகளும் நிறைய எழுதியுள்ளார்.  மலையாளத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்ற ‘ஒழிவுதிவசத்தே களி’, ‘முன்னறிப்பு’, ‘சார்லி’, ‘லீலா’, ‘சாப்பா குரிசு’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

இவர் ஜெயமோகனுக்கு பதிலளித்து ‘மலையாள மனோரமா’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் முழு வடிவம் இங்கே…

“ஜெயமோகன் எழுதிய குறிப்பை வாசித்தேன். அது அவ்வளவு விஷமமானது. ‘தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வரும் கேரளப் பொறுக்கிகள் குடிக்கிறார்கள். சட்டத்தை மீறுகிறார்கள். எர்ணாகுளத்தை மையமாகக் கொண்டு கேரள இளைஞர்களின் போதைக் கும்பல் உருவெடுத்துள்ளது. கேரளத்துக் கடற்கரைகளில் மாலை நேரங்களில் ஆண்களோ பெண்களோ நடமாடவே முடியாது. ‘வெடிவழிபாடு’, ‘ஜல்லிக் கட்டு’, ‘ஒழிவு திவசத்தே களி’ ஆகிய மலையாளப் படங்கள் குடியையும் விபச்சாரத்தையும்  பொதுமைப்படுத்துகின்றன’ என்கிறார் ஜெயமோகன்.

குடிப்பவர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்ற பரிசுத்த வாதம் பார்ப்பனியத்தின் வாதமே. மலையாளிகளில் கள்ளிறக்கும் தொழிலைச் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆண் – பெண் பேதமின்றி, மது அருந்துபவர்களும் இருக்கிறார்கள். சாதிப்படி நிலையில் மேலே நிற்பவர்கள் இதை அருவெருப்புடன் பார்க்கிறார்கள். ஒதுக்கப்பட்டவர்களின் நாகரிகமில்லாத களியாட்டமாகவே இதைப் பார்க்கிறார்கள். இந்தப் பார்ப்பனிய உணர்வுதான் மேலே உள்ள ஜெயமோகன் வாதத்தின் பின்னணி.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற நண்பர்களின் குழாம் அடித்தட்டு வாழ்க்கையை வாழ்பவர்கள். அவர்கள் எல்லாரையும் குடிகாரர்கள் என்றும் பொறுக்கிகள் என்றும் காட்ட வேண்டியது வர்ணாசிரமத்தை இறுகப் பிடித்திருக்கும் இந்த எழுத்தாளனுக்கு (ஜெயமோகன்) தேவையாக இருக்கிறது. ஆனால், ஆபத்தான கட்டத்தில் தனது நண்பனைக் காப்பாற்றுகிற மனிதாபிமானத்தை இந்த ஆசாமி பார்ப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் செத்துத் தொலைவது நல்லது என்று இவர் கருதுகிறார். அதை இயற்கையின் நீதியாகவும் பார்க்கிறார். இயற்கையின் நீதி பிரளய தாண்டவமாடியபோது, மலையாளிகளும், தமிழரும் பரஸ்பரம் கைநீட்டித் தொட்டுக் கொண்டார்கள். அவர்களில் குடிகாரர்களும் விபச்சாரிகளும் இருந்தார்கள்.

கேரளக் கடற்கரைகளில் மாலை நேரங்களில் செல்ல பயமாக இருக்கிறதாம்…! நீங்கள் கோழிக்கோட்டுக்கோ வர்க்கலைக்கோ போர்ட் கொச்சிக்கோ போயிருக்கிறீர்களா?

எர்ணாகுளத்தை மையமிட்டு இளைஞர்களின் குடிகாரக் கும்பல் இருக்கிறதாம். உங்களுக்குள்ளற இருக்கும் கிழவனுக்கு இளைஞர்கள் மேல் ஏன் இத்தனை வெறுப்பு? உங்களைப் போல கீழ்மைக்கு அடிமையாகாமல் மலையாளி இளைஞர்கள் தங்களை நிரந்தரமாக நவீனப்படுத்திக் கொள்வதாலா?

சினிமாவுக்கு எழுத கேரளத்துக்கு வந்த உங்களுக்குத் திரைக்கதை எழுதத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு தவிர்த்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கான பழிவாங்குதல் தானா இந்த வசை மாரி?

நீங்கள் குறிப்பிட்ட ‘ஒழிவு திவசத்தே களி’திரைப்படத்தின் கதையை எழுதியவன் நானே. அதில் சாதி வெறியில் ஒரு தலித்தை (அதுவும் நண்பனை) கொல்வதை நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்கு உள்ளேயிருக்கும் வர்ண பேதம் அதைப் பார்க்காது.

அடிக்கிற போலீஸ்காரனை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள். அடித்தும் உருட்டியும் கொன்ற போலீஸ்காரர்களை அடங்கச் சொன்ன மூத்த எழுத்தாளர்கள் எங்களுக்கு இருந்தார்கள். ‘படிக்கல் ஒரு நாய், அழுகிப் போன நாய்’ என்று போலீஸ் அதிகாரிக்கு எதிராக எழுதிய என்.என். கக்காடு எங்களுக்கு இருந்தார்.

உங்களைப் போல அதிகாரத் திமிருடன் இருப்பவர்களுக்கு அம்பேத்கர் சொன்ன ‘மைத்ரி’ என்னவென்று புரியாது; ஈ.வெ.ரா. பெரியாரைப் புரியாது. நாளை நீங்கள் கேரளத்தின் கவர்னர் ஆனாலும், நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்.

கேரளத்தைப் பற்றி மிகப் பெரிய பொய்களைச் சொன்ன ‘கேரளா ஸ்டோரிஸ்’ சினிமாவின் தொடர்ச்சியாகவே ஜெயமோகனின் குறிப்பைக் கருத வேண்டும். இல்லையென்றால் ‘ஆனை டாக்டர்’ லட்சக்கணக்காக பிரதிகள் விற்றன என்று சொல்லும் பொய்யைப் போல மேலும் பொய்களையே சொல்லிக் கொண்டிருப்பார். லட்சக்கணக்கில் விற்ற பிரதி ‘ஆடுஜீவிதம்’ மட்டுமே” என்று எழுதியுள்ளார் உண்ணி.ஆர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...