“முருகன் தமிழ் கடவுள் அல்ல; வடஇந்தியாவில் இருந்து வந்த தெய்வம்” என்ற கருத்து சமீபகாலமாக சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் கூறும் வரலாற்றுச் சான்றுகள், முருக வழிபாட்டின் வேர்கள் தமிழர் பண்பாட்டிலேயே ஆழமாக பதிந்திருப்பதை வெளிப்படுத்துகின்றன.
தமிழ் ஆய்வாளர் தமிழ் சரவணன் விளக்குவதாவது, முருகனைப் பற்றிய சர்ச்சைகள் வரலாற்றை மீண்டும் ஆராயும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. நமக்குக் கிடைத்த முதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், “சேயோன் மேய மைவரை உலகம்” என்ற வரியில் குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக சேயோன் குறிப்பிடப்படுகிறார். இங்கு “சேயோன்” என்பதே பின்னர் “முருகன்” என்ற பெயராக வளர்ச்சி பெற்றதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சங்க இலக்கியங்களில் காணப்படும் முருகன், இன்று கோயில்களில் காணப்படும் ஆறுமுக, பன்னிரு கரங்களுடன் விளங்கும் தெய்வ உருவத்திலிருந்து மாறுபட்டவர். அவர் ஒரு போர்க்கடவுள். சினம், வீரியம், வேல், யானை, இரத்தம், சிவப்பு நிறம் ஆகியவை அவரது முக்கிய அடையாளங்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. எதிரிகளை அழிக்கும் வீரராகவும், மக்களை பாதுகாக்கும் தெய்வமாகவும் சங்கப் பாடல்கள் முருகனை வர்ணிக்கின்றன.
இன்று “முருகு” என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள் கூறப்பட்டாலும், சங்க இலக்கியங்களில் “முருகு” பெரும்பாலும் மலரின் மணத்தை குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ் சரவணன் சுட்டிக்காட்டுகிறார். மேலும், “முறு” என்ற வேர்ச்சொல்லிலிருந்து “முருகன்” உருவாகியிருக்கலாம் என்றும் அவர் விளக்குகிறார். அதற்கு எதிரிகளை முறியடிப்பவன், அழிப்பவன், வீரன் என்ற பொருள் அமைகிறது. இதற்கான ஆதாரங்களாக புறநானூறு, அகநானூறு உள்ளிட்ட நூல்களில் இடம்பெறும் பல பாடல்களை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
சங்ககாலத்தில் முருகன் மக்கள் வாழ்க்கையோடு மிகவும் நெருக்கமாக இருந்தார். போரில் வெற்றி வேண்டியும், நோய் தீர வேண்டியும், குடும்பச் சிக்கல்கள் நீங்க வேண்டியும் மக்கள் முருகனை நாடினர். “வேலன் வெறியாடல்”, “கட்டுக்குறி”, “கழங்கு குறி” போன்ற வழிபாட்டு மரபுகள் மூலம் முருகன் மக்களிடம் அருள் வழங்குவதாக நம்பப்பட்டது. இதனால், முருகன் வெறும் போர்க்கடவுளாக மட்டுமல்லாமல், மக்களின் அன்றாட வாழ்வில் கலந்து இருந்த தெய்வமாகவும் விளங்கினார்.
முருகனின் உருவ அமைப்பிலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆரம்பகால சங்க இலக்கியங்களில் ஒரே தலை, இரண்டு கரங்கள் கொண்ட வீரராகச் சித்தரிக்கப்பட்ட அவர், பின்னர் திருமுருகாற்றுப்படை மற்றும் பரிபாடல் போன்ற நூல்களில் ஆறுமுகம், பன்னிரு கரங்கள், தேவயானை திருமணம், கைலாயப் பிறப்பு போன்ற புராண அம்சங்களுடன் விவரிக்கப்படுகிறார். இதுவே முருக வழிபாட்டின் பரிணாம வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்.
இதனால், முருகன் வடஇந்தியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தெய்வம் என்ற கருத்துக்கு சங்க இலக்கியங்களில் ஆதாரம் இல்லை என்பதே அவரது வாதம். மாறாக, தமிழர்களின் பழமையான தெய்வமாக இருந்த முருக வழிபாடு, பின்னாளில் வடஇந்திய புராண மரபுகளுடன் கலந்ததன் விளைவாக புதிய வடிவத்தைப் பெற்றதாக அவர் விளக்குகிறார்.



