No menu items!

தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம் அபாரம் !

தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம் அபாரம் !

இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஆர்வம், மகளிர் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளால் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தது என்று 3 காரணங்கள்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

பின்னர், சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர். சுமார் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், எஸ்ஐஆர்-க்கு பிறகு தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு 85.15% பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.36 சதவீதம் பதிவானது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீதமும் சென்னை மாவட்டத்தில் 83.74 சதவீதமும் பதிவானது.

இந்த வாக்கு சதவீதங்களே மிகத் தெளிவாக இது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) எதிரொலி என்பதை உறுதி செய்கிறது. இந்தப் பணிகள் நடந்தபோதே வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எஸ்ஐஆர் என்பது வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றே மத்திய அரசு ஆரம்பத்தில் கூறிவருகிறது. போலி வாக்காளர்கள் நீக்கம், டூப்ளிகேஷன் களையப்பட்டதன் காரணமாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வாக்குப் பதிவு சதவீதம் விகிதாச்சாரப்படி அதிகரித்ததாகக் கருதப்படுகிறது.

தமிழகம் மட்டுமல்லாது இதற்கு முன்னர் தேர்தலை எதிர்கொண்ட பிஹார் மற்றும் இப்போது தமிழகத்தோடு தேர்தலை சந்தித்த மேற்கு வங்கத்திலும் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதை சான்றாகக் கூறலாம்.

இரண்டாவதாக ஜனநாயகக் கடமையாற்றுவதில் இளைஞர்களின் எழுச்சி காரணமாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் 5.73 கோடி. இதில், சுமார் 1 கோடியே 18 லட்சம் இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் சுமார் 20 சதவீதம். இளம் வாக்காளர்களில் 14.6 லட்சம் முதன்முறை வாக்காளர்கள்.

இந்த முறை களத்தில் தவெக என்ற புதிய கட்சி களம் கண்டது, இளம் தலைமுறை வாக்காளர்களை அதுவும் குறிப்பாக அரசியல் அறிவே அற்ற வாக்காளர்களைக் கூட வாக்களிக்க வைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

விஜய்க்கு வாக்களித்த பலரும் அவரது படத்துக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ செல்வது போன்ற கொண்டாட்ட மனநிலையிலும், ’எனக்கு வாக்குரிமை இருக்கிறது, அதைச் செலுத்த முழுக்க அரசியல்வாதியாக இல்லாத சினிமா கம் அரசியல் அந்தஸ்தை தரித்துக் கொண்ட விஜய் இருக்கிறார், எனக்குப் பிடித்த உச்ச நடிகர் அரசியலில் களம் இறங்கியிருக்கிறார், அவரை ஆதரிப்பேன், எனக்குப் பிடித்த நடிகர் அவரது கரியர் உச்சத்தை உதறிவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார், அவரை அரசியலில் வெற்றி பெற வைப்பது எனது கடமை’ போன்ற உணர்வுகளாலேயே அந்தக் கட்சிக்காக வாக்களித்துள்ளனர் என்று தேர்ந்த அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

மேலும், விஜய் தன்னை எம்ஜிஆருக்கு நிகராக நிலைநிறுத்தி, நான் அதேபோன்ற கவர்ச்சியை கொண்டிருக்கிறேன், 1977 புரட்சியை ரீரைட் செய்வேன் என்று வசனம் பேசியதால், அதிமுக அதிருப்தி இளம் வாக்காளர்களின் வாக்குகளைக் கணிசமாகப் பிரித்திருக்கலாம் என்றும், திமுகவை அவர் தொடர்ச்சியாக வலுவாக தீவிரமாகத் தாக்கிவந்ததால் திமுக மீதான அபிமானத்தை இழந்த இளைஞர்களையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிலாம் எனக் கூறப்படுகிறது.

நாதக வாக்குகள் கணிசமாக விஜய்க்கு போகும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நிலவிய 4 முனைப் போட்டியில் விஜய் ஒருவராக மூன்று கட்சிகளின் மீதும் வாளைச் சுழற்றி வாக்குகளை சின்னாபின்னமாக சிதறிடித்திருப்பார் என்பதே இப்போதைய கணிப்பாக இருக்கிறது.

குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்ற விமர்சனங்கள் இருந்தாலும்கூட உதயநிதியை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே திமுக வளர்த்தெடுத்துவிட்டது. அவரும் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். துணை முதல்வராக அவர் இந்தமுறை பிரச்சாரம் செய்தது திமுக பக்கம் கணிசமாக இளைஞர்களை ஈர்த்திருக்கலாம். இன்னொரு புறம் வாரிசு அடையாளமே அதிருப்தி இளைஞர்களை தவெக பக்கம் தள்ளியிருக்கலாம் என்று கணிக்கின்றனர்.

ஆனால், அதிமுக இதுவரை இரண்டாம் கட்ட இளம் முகங்களை வளர்த்தெடுக்கவில்லை. ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் பலரே இந்த முறையும் வேட்பாளர்களாக இருந்துள்ளனர். விஜய்க்கு வேண்டாம் இங்கேயும் ஒரு துடிப்பான இளைஞர் இருக்கிறார் என்று கொள்ளும் அளவுக்கு தமிழகம் முழுவதும் அறிந்த ‘ப்ராமிஸிங் யூத் கேண்டிடேட்’ அதிமுகவில் இல்லை. அதனால் அதிமுக அதிருப்தி இளைஞர்கள், தவெக பக்கம் சென்றிருக்கலாம் என்றும் கணிக்கின்றனர்.

சினிமா மோகமாக இருந்தாலும், அரசியல் அறிவற்றவர்களாக இருந்தாலும் ஒரு குடிமகனின் அடிப்படைக் கடமையான வாக்குரிமையை செயல்படுத்தும் உந்துதலை விஜய்யின் வருகை தந்துள்ளது. அதுவே, இளைஞர்களின் வாக்களிப்பு அதிகமாக இருந்ததற்கும் காரணம் என்பதை முற்றிலுமாக புறந்தள்ளிவிடமுடியாது என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார். இதை இத்தோடு விட்டுவிடாமல் திராவிடக் கட்சிகள் இளைஞர்களை, இளம் முகங்கள் மூலம் அரசியல்மயமாக்குவதை ஒரு பயிற்சி போல் செயல்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இல்லையேல், கல்வியில் முன்னேறிய மாநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் மாநிலத்தில்தான் இளைஞர்கள் கண்மூடித்தனமாக ஹீரோ ஒர்ஷிப் செய்கிறார்கள் என்பது இழுக்கு. அப்படியொரு ‘கல்ட்’ உருவாவது ஆபத்து. அவர்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்று வாக்குகளை சிதறடிப்பர் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தேர்தல் முடிவை எழுதும் அதிகாரம் பெண் சக்தி வசம் வந்துவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலுமே ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் என்ற போக்கு மாறியதில் இருந்தே இந்த அதிகாரம் அவர்களிடம் சென்ற வரலாறு தொடங்கியதாகக் கொள்ளலாம்.

அதனாலேயே மாநிலங்கள் தோறும், தேசிய அளவிலும் பெண்களை முன்வைத்து பல்வேறு திட்ட அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வாக்களித்த பெண் வாக்காளர்கள் சதவீதம் 85.76. ஆண் வாக்காளர்கள் 83.57%.

இந்தத் தேர்தலுக்கு ஆளும் திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் பெண்களுக்கான வாக்குறுதிகளை வாரி வழங்கின. மகளிர் உரிமைத் தொகையை செல்லுமிடமெல்லாம் விமர்சித்த அதிமுக, இந்தத் தேர்தலில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 என்று அறிவித்தது. குல விளக்கு திட்டத்தின்கீழ் அனைத்து குடும்பப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.
ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும் என்று அறிவித்தது.

தவெக ஒருபடி மேலே சென்று 60 வயது வரையிலான அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 என்று அறிவித்தது.

எங்கள் தேர்தல் அறிக்கையே ‘சூப்பர் ஸ்டார்’ என்று திமுக முன்னிலைப்படுத்தி, மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 வழங்கப்படும், பெண்கள் தங்களுக்கு விரும்பிய வீட்டு உபயோகப் பொருளை வாங்கிக் கொள்ள ரூ.8000-க்கான டோக்கன் வழங்கப்படும் என்று கூறியது. இந்த டோக்கன் அறிவிப்பு பெண் வாக்காளர்களை ஈர்க்கும் என்பதே திமுகவின் கணிப்பு.

அது களத்தில் வேலை செய்ததால் பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்தனரா அல்லது விரும்பிய பொருள் என்ற ஆப்ஷன் மீது ஈடுபாடின்றி ’அதிமுக அறிவிப்புகள்’ ஓகே என்று அதற்கு வாக்களித்தார்களா அல்லது இரண்டுமே வேண்டாம் மாற்றம் தான் வேண்டும், அதை நாம் பல காலமாக திரையில் பார்த்து ரசித்த பிரபல சினிமா முகம் தரலாம் அல்லவா? வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போமா என்று வாக்களித்தார்களா என்பது மே 4 தேர்தல் முடிவு சொல்லும்.

எதுவாக இருந்தாலும் பெண் வாக்காளர்களை கவர்வது, அவர்கள் வாக்குகளை பெறுவது என்பது பிரதானக் கட்சிகள், புதிய கட்சிகளின் வியூகமாக இருந்த நிலையில், அதற்கான பலனாக பெண் வாக்கு சதவீதத்தை கொள்ளலாம்.

பிஹார் தேர்தலுக்கு முன்னர், ‘முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்’ அம்மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 செலுத்தப்பட்டது. மொத்தமாக ரூ.7,500 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணைந்துள்ள பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்படும் என பிஹார் அரசு தெரிவித்தது. இது தேர்தலில் சிறப்பாக எதிரொலித்தது. பிஹாரில் ஜேடியு – பாஜக வெற்றிக்கு அதுவே வித்திட்டது என ஒட்டுமொத்த ஊடக உலகமும் குறிப்பிட்டது.

இந்நிலையில், பெண் சக்தி தமிழகத்தின் எதிர்காலத்துக்காக எதை தேர்ந்தெடுத்துள்ளது என்பது மே 4 தெரியவரும். அதற்கான முன்னோட்டத்தை மேற்கு வங்க தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு முடியும் ஏப்.29-ம் தேதி மாலை வெளியாகும் எக்ஸிட் போல்ஸ் ஓரளவுக்கு கட்டியங்கூறும் என எதிர்பார்க்காலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...